மஹா தீபம். – நங்கநல்லூர் J K SIVAN
எங்கும் இருள் நீங்கி ஒளிவீசட்டும். அஞ்ஞான அறியாமை இருள் நீங்கி ஞானஒளி, மதிவொளி வீசட்டும். தாமஸோமாம் ஜ்யோதிர் கமய : இன்று திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
திருவண்ணாமலை பரந்து விரிந்த சித்தர் பூமி. கிட்டத்தட்ட 2800 அடி உயரமானது. இந்த மலையுச்சியில் ஒரு அகண்ட எண்ணெய் கொப்பரை. அதில் தான் திரி போட்டு மஹா தீபம் ஏற்றுகிறார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு சம்ப்ரதாயம். குமரன் குடிகொண்ட மலைகளில் எல்லாம் தீபம் ஏற்றுவது உண்டு.
மகாதீபம் ஏற்றும் உரிமை செம்படவர் எனப்படும் மீனவர் இனத்தவருக்கு உரியது. மீனவர் ராஜாவாக இருந்தவன் பர்வதராஜன். அவன் மகள் பார்வதி. மீன் போன்ற அழகிய விழிகளை உடையவள் என்ற அர்த்தம் வாய்ந்த கயல் கண்ணி என்று பெயர் கொண்டவள். திருவிளையாடல் புராணத்தில் பரமேஸ்வரன் மீனவனாக வந்து பார்வதியை மணம் புரியும் கதை வரும். மீனவர்களுக்கு பர்வதர்கள் என்று இதனால் பெயர்.அது காலபோக்கில் மாறி பரதவர், என்று ஆகிவிட்டது. அவர்களுக்கு மகாதீபம் ஏற்றும் உரிமை உண்டு. இந்த அகண்ட தீப எண்ணெய் கொப்பரை 1668ம் வருஷம் , வேங்கடபதி என்பவர் செய்தது. காலப்போக்கில் சேதமடைந்து வடிவம் மாற்றி 1990 ல் இப்போதுள்ள கொப்பரை உருவானது.92 கிலோ செம்பு 110 கிலோ இரும்புச் சட்டங்களால் ஆனது. . கொப்பரையில் அடிப்பாகம் 27அங்குல விட்டமும் மேற்புறம் 37 அங்குல விட்டமும் உடையது. 57 அங்குலம் உயரம்.
இன்று 26.11. 2023 கார்த்திகை நட்சத்திரம் ஆரம்பம் . முடிவு நேரம் :நவம்பர் 27, 01:35 PM. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று துவங்கும். ஒரு மாதகாலம் நீடிக்கும்.
ப்ரம்மா விஷ்ணு இருவருக்குள்ளும் ஒருமுறை யார் பெரியவர் என்ற ஒரு போட்டி. இந்த போட்டியை தீர்க்க பரமேஸ்வரன் ஒரு தீப்பிழம்பாக அவர்கள் இருவர் முன் தோன்றி ஒருவர் இந்த தீப்பிழம்பின் ஆரம்பத்தை கண்டுபிடித்து சொல்லட்டும்,மற்றவர் இதன் முடிவை தேடி செல்லட்டும். யார் முதலில் அப்படி கண்டுபிடித்து வந்து என்னிடம் சொல்கிறாரோ அவரே பெரியவர் என்கிறார். பிரேமா அன்னமாக பறந்து இதனுச்சியை தேடி சென்றார். மஹாவிஷ்ணு மாறி வடிவெடுத்து பூமிக்கடியில் அதன் ஆரம்பத்தை தேடி சென்றார். அடியும் முடியும் யாருக்குமே தெரியவில்லை. அவர்கள் போட்டி நின்றுவிட்டது.
இதற்கிடையில் தேவர் குறை நீக்க சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டு சரவணப்பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்களிடம் வளர்கிறது. ஆகவே கார்த்திகை தீபம் முருகனுக்கும் உகந்த ஒரு பெருநாள்.
தமிழகத்தில் கார்த்திகை தீபம் கார்த்திகை விளக்குடு என்ற பெயரிலும், மலையாள தேசத்தில் த்ரிகார்த்திகை என்றும் கொண்டாடப்படுகிறது.பரணி தீபம், விஷ்ணு தீபம் என்ற பெயர்களும் உண்டு.
‘அகல்’ விளக்குகள் அலங்காரமாக வீடுகளில் ஒளிவீசும் நாள். கூப்பிய கைகளுடன் கூடிய பெண் வடிவ லக்ஷ்மி தீபம், பாவை விளக்கு.ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு கஜலட்சுமி விளக்கு – யானை விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு தீப ஒளி வீசும். அக்கா தங்கைகள் சகோதரர்கள் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யும் வழக்கம் உண்டு. ஒரு ஆனந்தமான பழக்கம்.
ஆந்திரப் பிரதேசத்தில், கார்த்திகை பௌர்ணமி அன்று பெரிய 365 திரிகள் கொண்ட அகண்ட தீபத்தை ஏற்றி, வணங்கி லோக க்ஷேமத்தை வேண்டிக்கொள்வார்கள்.
திருவண்ணாமலை தீபம் பல கிலோமீட்டர்கள் தூரம் ஒளிவீசி தெரியும்.