மஹாபாரதத்தில் குந்தி – நங்கநல்லூர் J.K. SIVAN
என்னமோ இதை மறுபடியும் எழுத மனம் தூண்டியது. கை விரல்கள் கம்பியூட்டர் கீ போர்டில் நர்த்தனமாடி யது. அதன் விளைவு இது.
குந்தி எப்படியோ அவள் கஷ்டங்களாலும், அதிலிருந்து அவள் கிருஷ்ண பக்தி வெளிப்பட்டதும் இரவும் பகலும் என்னால் அவளை மறக்க முடியாமல் செய்து விட்டது.
பகவான் நாம் எல்லோரும் இன்புற்றிருக்க தான் இந்த உலகை இயற்கை வளத்தோடு படைத்து நமக்கு நீண்ட ஆயுள் அளித்து, வாழ வகை செய்திருக்கிறான். அவன் படைப்பான மற்ற ஜீவன்களை எந்த காரணத்தை கொண்டும் வெறுக்கவோ , சபிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அத்து மீறுகிறோம். நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் அது ஊறு விளைவிக்கும். யாரையும் குறை சொல்லவேண்டாம். நம் குறைகளே இன்னும் நமக்கு முழுமையாக தெரியவில்லை. இதனால் உறவு பகையாகும். நாம் ஒதுக்கப் படுவோம். யாரையாவது நமக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி பேசாமல் இருப்போம். அதனால் நாம் பயந்தான்கொள்ளி கோழை என்று அர்த்தம் இல்லை.
இன்னொரு கெட்ட பழக்கம், மற்றவர் சொல்லை, செயலை, நடத்தையை விமரிசனம் செய்வது. ஒவ்வொரு வருக்கும் அவருக்கான உரிமை இருக்கிறது. நமக்கு அது பிடிக்கவில்லை யென்பதற்காக அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நல்ல வழியைக் காட்ட அறிவுரை கூறுவது வேறு, குறை கூறுவது வேறு. வடதுருவம் தென் துருவம் மாதிரி. அவரவர் வழி அவரவருக்கு என்று ஒவ்வொருவரும் தமது வழியில் சென்று அதற்கான பலனை அவர்களே அனுபவிக்க வகை செய் து இருக்கும்போது நாம் யார் குறுக்கே தலையையோ மூக்கையோ நீட்டுவதற்கு?
இன்னும் மோசமான ஒரு குணம். குசு குசுவென்று சதியாலோசனை ஒரு சிலரோடு சேர்ந்து தீட்டுவது. அதனால் யாருக்கோ தீங்கோ, கஷ்டமோ, துன்பமோ விளைவதற்கு காரணமாக இருக்கிறோம். எதற்கோ யாரையோ பழிவாங்குவதற்கு இப்படி திட்டம் தீட்டுவது ரொம்ப தப்பு.
இப்போதெல்லாம் அதிகமாகிக்கொண்டே வரும் இன்னொரு தீமை, எந்த காரியத்திற்கும் கையூட்டு எனும் லஞ்சம் வாங்குவது . இது பஞ்சமகா பாதகத்தை விட மோசமானது. பதவிக்கு வருவதே லஞ்சம் வாங்க என்று நினைக்கும் மனிதர்கள் சமூக விரோதிகள், அவர்கள் வீட்டிலேயே மனைவியோ,கணவனோ, சகோதர சகோதரியோ, பெற்றோரோ, பிள்ளைகளோ, இப்படிப்பட்டவர்கள் வீட்டுக்கு கொண்டு வரும் செல்வத்தை, பணத்தை, வசதியை , சுகத்தை முழுதுமாக புறக்கணிக்க வேண்டும். அவர்களை வெறுக்க வேண்டும். ஆதரிக்கக் கூடாது. அவர்களது தவறான செய்கைக்கு தூபம் போடக் கூடாது. மனதாலும் ஆதரிக்கக் கூடாது. அப்போது தான் அடுத்த தலைமுறையாவது இது இல்லாமல் வாழும். தார்மீக, அன்பு, பொதுநல மனப்பான்மை, சுய கட்டுப்பாடு இல்லாத மனத்தை உற்றார் பெற்றார் மனம் தான் இவ்வாறு மாற்றம் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். ”நீங்க வாங்கித் தருகிற புடவை, நகை, வீடு கார், எங்களுக்கு வேண்டாம். நாங்கள் இப்படி நாணயமான குடும்பமாக இருக்கிறோம். வசதிஇல்லாமல் நேர்மையான இருப்பது எவ்வளவோ மேல்” என்று குற்றம் செய்பவரை தண்டிக்கவேண்டும். தனது உற்ற சொந்தமே, குடும்பமே அவனது கெட்ட , தவறான செயகையை எதிர்த்தால் அவன் திருந்துவான். அதில் சுகம் தேடுவது அனுபவிப்பது, என்பது கொலை செய்தவனைவிட அதற்கு உடந்தையாக இருந்தவன் போல் கடும் கண்டனத்துக்கு, தண்டனைக்குரியது. இந்த தண்டனை சுய தண்டனை.சட்டம் இந்த விஷயத்தில் மௌனமாக இருக்கலாம்.
இது ஒரு அதிசய உலகம். நமக்கு பிடிக்காதவர்கள், வேண்டாதவர்கள் என்று யாராவது இருந்தால் ”அவன் நாசமாக போகணும், அழிந்து போகணும், ஒழியணும். சாகணும் , துடிக்கணும்”…. என்று மண்ணை வாரிப்போடுபவர்களை, சாபமிடுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். கடவுளிடம் வேண்டிக்கொள்வதையும் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக இந்த பழக்கத்தை, குணத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.
சாபம் என்பது சுவற்றில் எறியப்பட்ட பந்து மாதிரி. நம் மீதே அதே வேகத்தோடு திரும்பி வந்து தாக்கும். இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள்.
நாம் கஷ்டப்பட்டாலும் எல்லோரும் சுகமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவசியம் மனதில் குடிகொள்ளவேண்டும். ”லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து” வை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.அப்புறம் அதுவே தானாகவே பழக்கமாகிவிடும்.
யாருமே இந்த உலகில் சந்தோஷமாக இருக்கத்தான் விரும்புகிறார்கள். யாராவது எனக்கு துன்பம் தான் பிடிக்கும், நான் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்வார்களா? நினைப்பார்களா?
எனக்கு தெரிந்து ஒருவள் மட்டும் தான் அப்படி கடவுளிடம் வேண்டிக் கொண்டவள். குந்தி தேவி. ”கிருஷ்ணா எனக்கு மேலும் மேலும் கஷ்டத்தை, துன்பத்தைக் கொடுத்துக் கொண்டே இரு. அப்போது தான் நான் உன்னை வேண்டுவேன், நினைப்பேன், கூப்பிடுவேன், நீயும் ஓடிவருவாய். யார் கஷ்டம் என்றாலும் தீர்க்க ஓடி வருபவனாயிற்றே நீ. எனக்கு நீ அடிக்கடி தோன்றி நான் உன்னை பார்க்கவேண்டும். வந்தால் நீ தான் எந்தவிதமான துன்பத்தை கஷ்டத்தையும் சுலபமாக தீர்த்து விடுவாயே ”என்று வேண்டிக்கொண்டவள்.