எட்டு ரகசியங்கள் — நங்கநல்லுர் J.K. SIVAN
பல வருஷங்களுக்கு முன் ஒரு சிரிப்பு படம். விசு, SV சேகர் இருவரின் டயலாக் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரை அந்த படத்தில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும். மணல் கயிறு என்று படத்துக்குப் பெயர். கல்யாணம் பண்ணிக்கொள்ள கிட்டுமணி எட்டு கண்டிஷன் போடுவான் அதை நாரதர் நாயுடு என்ற ஜோசியர் நிறைவேற்றி வைப்பார் . தான் போட்ட எட்டு கண்டிஷனும் நிறைவேறியதாக சந்தோஷப்படும் கிட்டுமணி (எஸ்.வி.சேகர்) தான் எல்லாவற்றிலும் ஏமாற்றப்பட்டதை உணர்வது தான் கதையின் முடிவு. நாரதர் நாயுடு தான் விசு.
கல்யாணத்துக்கு ஆண்கள் கண்டிஷன் போடும் காலம் மலை ஏறிவிட்டது. இப்போது பெண்கள் ராஜ்யம் .
எட்டு ஒரு அற்புத எண் . கிருஷ்ணன் சம்பந்தப்பட்டது என்று ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். அந்த கிருஷ்ணன் நமக்கு
அஷ்ட (எட்டு) ஐஸ்வர்யங்கள் தந்திருக்கான். அதை விடாமல் அன்றாட வாழ்வில் கடைபிடித்தால் நிம்மதி, சந்தோஷம் பெருகுமே. ஒவ்வொரு நிமிஷமும் முகம் மலரும். நோய் விலகும். எல்லோருக்கும் தெரிந்தது தான், ஆனால் மறந்து போவது.
அப்படியா, அந்த எட்டு செல்வங்கள், ஐஸ்வர்யங்கள் என்னவென்று சொல்லட்டுமா?
1. கேட்டல்: இது நிறைய பேரிடம் இல்லாத ஒன்று. பேசவே விடமாட்டார்கள். ஏதாவது சொல்லும்போது முழுமையாக கேட்காமல் குறுக்கே பேசிக்கொண்டே இருப்பார்கள். ரொம்ப தப்பு இது. விஷயங்களை யார் சொன்னாலும், கூர்ந்து கவனித்து கேட்க வேண்டும். மனசை அதில் செலுத்தணும். குறுக்கே பேசக்கூடாது. எங்கோ பகல் கனவு கண்டுகொண்டு அரை மனதோடும் கேட்க கூடாது. மனதை எங்கோ செலுத்திவிட்டு தலையை மட்டும் சும்மா ஆட்டினால் செல்பவருக்கு அது தெரிந்து விடும். சிலர் கேட்கும்போதே இதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசிப்பவர்கள். அதுவும் கூடாது. முதலில் பேசாமல் கேட்கணும்.
2. அன்பு செலுத்துதல்: குழந்தைகள் கிட்டே மனப்பூர்வமான நேசம் இருக்கணும். பாசத்தோடு அணைக்கணும். ஆசையோடு பார்க்கணும் . செல்லத்தோடு தட்டிக் கொடுக்கணும். இது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களோடு மட்டும். எல்லோருக்கும் தொட்டு பேசுவது பிடிக்காது.
3.வாய் விட்டு சிரித்தல்: பிறரை சந்தோஷப்படுத்துவது ஒரு கலை . மனம் விட்டு பழகினால் இது தானே வரும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவோராக இருக்க கூடாது. ”உன்னோடு சேர்ந்து சிரிச்சா சாமா, கவலையெல்லாம் போயிடறது டா”
என்று அனுபவித்தவர் சொல்லும்போது கிடைக்கும் சந்தோஷமே தனி.
4. நன்றி சொல்லுதல்: இங்கிலீஷில் தேங்க்ஸ் THANKS என்ற வார்த்தையை அடிக்கடி வார்த்தைக்கு வார்த்தை உபயோகிக்கிறோம். உண்மையில் நன்றி உணர்ச்சி இல்லாமலேயே அது வெளிப்படுகிறது. நமது மனதில் நன்றி இல்லாமல் உதட்டளவில் வரும் நன்றிக்கு மதிப்பே இல்லை. பிறர் செய்யும் உதவிக்கு நன்றி மனமார செலுத்தவேண்டும். ”டேய் கிருஷ்ணா, உனக்கு எப்படி நன்றி சொல்லுவேண்டா” இந்த ஒரு வார்த்தையை எழுத்திலோ, சொல்லிலோ, அடிமனத்திலிருந்து, இதய பூர்வமாக சொல்லும்போது அதன் சக்தி விவரிக்க முடியாதது. ரொம்ப காலம் ஞாபகத்தில் இருக்கும் சக்தி வாய்ந்தது. அதை அடிக்கடி உபயோகிக்கணும்.
5.மெச்சுதல்: ”பிரமாதம், அற்புதம், ரொம்ப அட்டகாசம்” நீல ட்ரெஸ்லே அசத்தறே. நீ எழுதினது, பேசினது, அசாத்தியம். கோலாட்டம் போட்டது கண்ணிலே நிற்கிறது. நீ கொடுத்த வெங்காய பஜ்ஜி அம்ருதம்”. இது எவ்வளவு அருமையாக நட்பை வளர்க்கும். குறையை விட்டு நிறையைப் பார்க்கவேண்டும். பத்து பஜ்ஜியை தின்று விட்டு ”உப்பு கொஞ்சம் போறாது”என்று சொல்பவனை பெண்மணி கண்ணாலேயே எரித்துவிடுவாள்.
6. சின்ன சின்ன உதவி, தர்ம, தானம்: சுயநலம் இன்றி நம்மாலானதை ஏதாவது பிறர்க்கு உபயோகமாக செய்வது. மனதுக்கு ரொம்ப சந்தோஷம் தரும் செயல் இது. பிறருக்கும் தான் அது மகிழ்ச்சியை தருகிறதே.
7. தனிமை – ஒரு அழகான பாட்டு A . M . ராஜா என்ற தேன் குரல் மனிதர் பாடி இன்னும் காதில் ஒலிப்பது. ”தனிமையிலே இனிமை காண முடியுமா” — முடியும். தனிமை யாக இருந்தால் அதை நிழலாக தொடர்வது மௌனம். ஆத்ம விசாரத்துக்கு அஸ்திவாரம். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது தனிமையாக இருந்து பழக வேண்டும். பலன் கை மேல மட்டும் இல்லை கண்ணாடியிலேயும் நமது முகத்தில் தெரியும்.. .
8. எப்போதும் உற்சாகத்தோடு இருப்பது: நாம் உற்சாகத்தோடு இருந்தால் நம்மைச் சுற்றியுள்ளோரும் உற்சாகமாக இருப்பார்கள். முகம் தொங்கப் போட்டவர்கள் கூட மாறிவிடுவார்கள். ஒரு என்கரேஜிங் வார்த்தை போதும். ” ஹெல்ப் பண்ணட்டுமா, நான்ஏதாவது உதவி செய்யட்டுமாடா ” அதன் மதிப்பே தனி.
அப்படி யாராவது நமக்கு செய்தபோது ”நன்றி சார். தேங்க்ஸ் மா ”. இது தான் வாழ்க்கையின் வெற்றிக்கான எட்டு ரகசியங்கள்.