DIWALI POSTS 2 OIL BATH J K SIVAN

தீபாவளி  பதிவு   2
ஆயில் பாத். ஸ்னானம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN

நிறைய விஷயங்கள்,  பொருள்கள்,  பழக்கங்கள், வழக்கங்கள்  இப்போதெல்லாம் இல்லை,  காணோம்.  எல்லோரும் மறந்து போய்விட்டோம்.  அதில் ஒன்று  வாரா  வாரம்  எண்ணெய் தேய்த்து குளிப்பது.  

சமீபத்தில் சாம்பார் பொடி  அரைக்க  வெகுகாலமாக  தாத்தா  மாவு மிஷின் கடை என்ற  பிரபலமான,  வீட்டுக்கு அருகே  இருக்கும் மாவு அரைக்கும் மிஷின்   கடைக்கு   grinding mill or  flour mill போனேன்.   அரிசி மாவு அரைக்க ஒரு மெஷின், கோதுமை, கேழ்வரகு,  பருப்பு வகை  தானி யங்கள் அரைக்க ஒரு மெஷின்,  மிளகாய் அரைக்க ஒரு மெஷின் என்று மூன்று தான் இருந்தது.  சின்னதாக  காசி விஸ்வநாதர் லிங்கம் மாதிரி ஒரு மெஷின் இருக்கும், அதை சீயக்காய் ( சிகைக்காய்)  அரைக்கும் மெஷின் என்று சொல்வோம். அதில் சீயக் காய் அரைக்க ஒருகாலத்தில் நல்ல  டிமாண்ட்,.  இப்போது  அந்த மெஷினே  இல்லையே. ஏன்? சீயக்காய் பொடி, தூள், இதெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கும்  போது தான் அநேகமாக உபயோகப்படுத்துவோம்  கம்  மென்று  வாசனை  பொடியாக அரைத்து  தலைக்கு தேய்த்துக் கொள்ளும் வழக்கம் அப்போது இருந்தது. இப்போது ஷாம்பு, தைலங்கள் வந்து விட்டதால்  யாரும்  சீயக்காய் பொடி உபயோகிப்பதில்லை.  எண்ணெய் தேய்த்துக் குளித்தால் தான் சீயக்காய்  பொடி  தேவை.. எண்ணெய் தேய்த்து குளிப்பது தான்  அடியோடு  நின்று போய் விட்டதே.  குளத்தங்கரையில் படிக்கட்டு பூரா  கம்மென்று வாசனைப் பொடி மணம்  வீசும்  காலம் மாறி விட்டது.

ஆண்கள் சனிக்கிழை, புதன்கிழமை அன்றும்  பெண்கள் செவ்வாய், வெள்ளி அன்றும்  எண்ணெய் தேய்த்துக்  குளிக்கும் வழக்கம் அப்போதெல்லாம் இருந்தது.    அன்று வெந்நீரில் ஸ்னானம்.  நல்லெண்ணையில் மஹா லக்ஷ்மி, வெந்நீரில் கங்கை இருப்பதாக  ஐதீகம்.  தீபாவளி ஸ்னானம் இந்த வகையில் விசேஷம். ‘’கங்கா  ஸ்னானம் ஆச்சா?’’ அதனால் தான் கேட்பது.

‘அறப்பளீசுர சதகம்’  மேலே சொன்ன கிழமைகளில்   விடாமல் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் செல்வம் சேரும் என்கிறது, சிலர்  ஞாயிற்றுக் கிழமைகளில்  ஒய்வு நாள் என்று குளிப்பது தவறு.   ஞாயிறன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் வடிவமும், அழகும் போய்விடும் என்று  அறப்பளீசுர சதகம் சொல்கிறது.  ‘’ சனி நீராடு’’  பழமொழி  அதனால்  தான் சனிக் கிழமை அப்யங்க ஸ்னானம் (எண்ணெய் குளியல்)  பெஸ்ட் best என்கிறது.

சின்ன வயசில்  ஒவ்வொரு சனிக்கிழமையும்  அம்மா  என் அண்ணாக்கள் ரெண்டு பேருக்கும் எனக்கும் வரிசையாக உட்கார வைத்து  எண்ணெய் தேய்த்து ஊற விடுவாள்.  அரை மணி நேரமாவது மரத்தடியில் விளையாடுவோம்.அப்புறம்  வெந்நீரில் குளிப்போம்.

அன்று  சமையல்  விசேஷமாக  கண்ட திப்பிலி ரசம், மிளகு ஜீரக ரசம்,  சுண்டைக் காய்  வற்றல், பருப்பு துவையல், வற்றல் குழம்பு  என்று பத்தியமாக  இருக்கும். குளித்து விட்டு வந்தால் கப  கப என்று பசிக்கும்.    சூடாக  தட்டில் அம்மா போடும் உணவு அம்ருத மாக இருக்கும். ‘போதுமா’  என்று  சாப்பாடு பரிமாறும் போது யாரையுமே  அவள் கேட்கவே மாட்டாள். இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று கட்டாயப்  படுத்தும் தாய்.
ஷாம்பு வந்து சீயக்காயை விழுங்கிவிட்டது.  நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நின்றுவிட்டது. சரும நோய்களுக்கு கொண் டாட்டம். நிறைய  டாக்டர்கள் பிழைக்கிறார்கள்.  சொறி சிரங்குகள் மலிந்து விட்டது. என்னென்னவோ க்ரீம்கள்  விலை ஜாஸ்தியாக  கொடுத்து வாங்கித்  தடவிக் கொள்ளும் வீடுகள் அதிகரித்து விட்டது.

அறப்பளீசுர சதகம் இதைத் தான் சொல்கிறது:

ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்
திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்
செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்
புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்
வியாழன் குளித்தால் உயரறிவு போய்டும்
வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்
சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்

ஆண்கள் திங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்.
செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகில்  கண்ட மாலை நோய் வரும்.
வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச் சல் வரும்.
வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு  வாதம் வரும்.
ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் இலுப்ப சட்டியில் அல்லது பெரிய  வாயகல இரும்பு கரண்டியில் நல்லெண்ணை யில் சிவப்பாக  ரெண்டு மூணு  மிளகாய்ப் பழம்,   பெருங்காய கட்டி போட்டு காய்ச்சி,  எண்ணையை மிதமான சூட்டில் உச்சந் தலையில் பரக்க பரக்க  தேய்த்து விடுவாள். முதலில்  ரெண்டு துடை களிலும்  ஏழு  எண்ணெய் பொட்டுகள் வைப்பாள், அஸ்வத்தாமா, பலி, வ்யாஸ, ஹநுமாஞ்சா,  விபீஷணா, கிருபா, பரசு ராமா என்று ஏழு சிரஞ்சீவி களாக நாங்கள் இருக்க வேண் டும் என்று ஒரு ஸ்லோகம் பாடு வாள் . எல்லாம் காலப்போக்கில் மறைந்து போயிற்றே தவிர மறந்து போகவில்லை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *