பீஷ்மன் கதை – நங்கநல்லூர் J K SIVAN
மஹா பாரதத்தில் மறக்க முடியாத, மறைக்க முடியாத, ஒரு சிறந்த பாத்திரம் பீஷ்மன். நமக்கெல்லாம் தாத்தா, கொள்ளுத் தாத்தா சிலருக்கு மட்டும் எள்ளு தாத்தா வரை பெயர் தெரிந்திருக்கலாம், அதற்கு முன் இருந்தவர்களை நாம் அறியவில்லை, தெரியாது. ஆனால் பீஷ்மன் யார்? எப்படி பிறந்தவன்?, அவன் முன்னோர் யார்? அவன் வம்சாவளி எல்லாம் அப்போதே ரிஷி வேத வியாசர் சரியாக குறித்து வைத்திருக் கிறார். அதை தான் இன்று நாம் அறியப்போகிறோம்/
ப்ரம்மா, அவர் பிள்ளை அத்ரி. அதற்கப்புறம் அடுத்தடுத்த வம்சங்கள்: சந்திரன் , புதன், ஆயுஷ், நஹுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிரசசின்வா, ப்ரவீரன், நமஸ்யு, விடபவன் , ஷுந்து, பாஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ரஸ்வன், மதிநரன் , சந்த்ரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், கலா, கர்தன், சுகேது, ப்ரஹத்க்ஷேத்ரன், ஹஸ்தி, அஜாமிதன் , ரிக்ஷன், சம்வரணன், குரு ,ஜானு, சுரத்தல், விதரதன், சார்வபௌமன், ஜெயத்சேனன், ரவ்யயன், பாவுகன் , சக்ரோததா, தேவதீதி ரிக்ஷன், பீமன், ப்ரதிபான், சந்தனு, பீஷ்மன்……………
மேலே சொன்ன பெயர்களை, ஏதோ டெலிபோன் டைரக்டரி , எலெக்ஷன் வோட்டர் லிஸ்ட் மாதிரி மட்டும் பார்த்து விட்டு மேலே நகர்ந்தால் ரொம்ப சௌகர்யம். மேலே சொன்ன ஆசாமிகள் யார் யார்? மேலே காணும் பெயர் சரியா தப்பா, முன்னுக்கும் பின்னுக்கும் பெயர்கள் இருக்கிறதா, இதில் நவகிரஹங் கள் கூடவா என்றெல்லாம் மண்டையை உடைத்துக் கொள்ளவே தேவையில்லை. ஏதோ கிடைத்தது, சொல்லிவிட்டேன்.
பீஷ்மனுக்கு இயற்பெயர் தேவவிரதன். சந்திர வம்ச ராஜா சந்தனுவுக்கு எட்டாவது பிள்ளை. அம்மா கங்கா தேவி. பீஷ்மன் முன் ஜென்மத்தில் அஷ்டவசுக்களில் ஒருவனான ப்ரபாஸன். பூமியில் மனிதனாக பிறந்தவன். ராஜா சந்தனுவே மற்றொரு மஹாராஜா மஹாபிஷேகன் என்பவனின் மறு பிறப்பு. மஹா பாரதம் பீஷ்மனைப் பற்றி என்ன சொல்கிறது?
ராஜா மஹாபிஷேகன் இறந்தபின் விஷ்ணுலோகம் போனான். பிரம்மாவை சத்யலோகத்தில் பார்த்தான். அங்கே கங்காதேவி இருந்தாள். பலத்த காற்று அப்போது பார்த்து வீசியது. கங்காவின் ஆடை விலகியது. மஹாபிஷேகனின் திருட்டுப்பார்வையை பார்த்தும் கங்காதேவி ஒன்றும் கண்டுக்கவே இல்லை. இதை ப்ரம்மா கவனித்து விட்டார். ரெண்டுபேருமே பூமியில் மானுட ஜென்மம் எடுக்கக் கடவது என்று சபித்து விட்டார். கங்கை கெஞ்சினாள். ”கங்கா , நீ பூமியில் பெண்ணாக பிறப்பாய்.அப்போது அஷ்டவசுக்களும் உனக்கு மகன்களாக பிறப்பார்கள். அப்புறம் நீ விண்ணுலகம் மீண்டும் வரலாம்”கங்கா பூமியில் கங்கை நதிக்குள் வாழ்ந்தாள்.
ஒரு காலத்தில் அந்த பிரதேசத்தை சந்திரவம்ச ராஜா பிரதீபன் என்று ஒருவன் ஆண்டு வந்த காலம். அவனுக்கு புத்திரர்கள் இல்லை. கங்கை நதிக் கரையில் உட்கார்ந்து தவம் இருந்தான். கங்கை அவனை நெருங்கினாள். அவன் தொடையில் வாத்சல்யத்தோடு அமர்ந்தாள்.
”பெண்ணே, நீ என் வலது தொடையில் அமர்ந்தாய்? அது மாட்டுப்பெண் உர்கார்வதற்கான வாத்சல்ய இடம். (இது என்ன சாஸ்திரம் என்று எனக்கு தெரியாததால் என்னிடம் இருந்து விளக்கம் கிடையாது) ஆகவே நீ என் மகனுக்கு மனைவியாகி விடு” என்றான் ராஜா பிரதீபன். பிரதீபன் மகன் சந்தனு. சந்தனு வளர்ந்து ராஜா வானான். ஒருநாள் கங்கை நதிப்பக்கம் வேட்டையாட சென்றான்.கங்காதேவியை பார்த்தான். காதல் தலைக்கேறி ”நீ என் மனைவியாகவேண்டும்” என்று கேட்டான். ”ஆஹா அப்படியே , ஆனால் நீ என் நிபந்தனைக்கு கட்டுப்பட்டால் தான் நான் உன் மனைவி. என் சுதந்திரத்தை,என் வாக்கை, செயலை நீ மீறினால் உடனே நான் உன்னை பிரிந்துவிடுவேன். சரியா?” என்றாள் கங்கை. சந்தனுவுக்கு அவன் கங்காதேவி மேல் கொண்ட காதல் புத்தி, கண், ரெண்டையும் மறைக்க, ”ரொம்ப சரி, அப்படியே” என்றான் சந்தனு. மனைவியானாள்.
இதற்கிடையில், அஷ்டவசுக்களில் ஒருவனான ப்ரபாஸனின் மனைவி வசிஷ்ட மஹரிஷியிடம் இருந்த காமதேனு தனக்கு வேண்டும் என்று ஆசைப்பட்டு கணவனைப் பிடுங்கி எடுத்தாள். மற்ற ஏழு வசுக்களோடு ப்ரபாஸன் வசிஷ்டர் ஆஸ்ரமம் போனான். காமதேனுவை அபகரித்தான். விஷயமறிந்த வசிஷ்டர் அஷ்ட வசுக்களும் பூமியில் மானிடர்களாக பிறக்கக்கடவது என்று சபித்தார்.
(மனிதனாக பிறப்பதே தேவலோகத்தில் ஒரு சாபம் போலிருக்கிறது. அஷ்ட வசுக்களுக்கு பசு விஷயமாக இப்படி ஒரு சாபமா? பல வம்சங்களாக நாம் இங்கே தானே வீடு கார் எல்லாம் வைத்துக்கொண்டு போட்டோ பிடித்துக்கொண்டு ஆசியா கப், உலக கோப்பை கப் என்று டிவியில் கிரிக்கெட் மாட்ச் பார்த்து கை தட்டிக் கொண்டு வாசுவாக வாழ்கிறோம்.)
தொடரும்