VARAVERPU – J K SIVAN

வரவேற்பு  –   நங்கநல்லூர்  J K  SIVAN

கிருஷ்ணசாமி  இறந்துவிட்டதை  நிறைய  இந்தியர்கள்  நினைத்தே பார்க்கவில்லை.  பத்திரிகையில் அவனைச் சேர்ந்தோர்  அவன் படத்தை சின்னதாக போட்டு  தோற்றம்  மறைவோடு நிறுத்திக்கொண்டார். நிறைய  இடம் அடைத்தால் நிறைய காசு கொடுக்கவேண்டுமே .  மறைந்து போன  காமாக்ஷி அம்மாள் என்ற  82வயது மாமி, கரீம் பாய் என்ற  58 வயது  குழாய் பைப் செட்டுகள் விற்கும் கடை அதிபர்  மறைவை ஒட்டி ரெண்டுக்கும் நடுவே  சின்னதாய் கிருஷ்ணசாமி.  அவன் முகத்தில் இருந்த துறுதுறுப்பு,  இளமை  கருகருவென்ற மீசை, கண்களில் இருந்த வீரம்  நேர்மை என்னை காந்தம் போல் இழுத்தது. யார் இந்த கிருஷ்ணசாமி?
அவன் மற்றவர்கள் போல் இல்லை.  ஏதோ,  நோய்வாய்ப்பட்டு, ஆஸ்பத்திரியில்  மெல்லிய  குழாய்கள் மூக்கில் வாயில் கை கால்களில் செலுத்தப்பட்டு  இறந்தவன் இல்லை.  வயோதிகனும் இல்லை.  அனாதையும் இல்லை.  பனிமலையில் இரவும் பகலும்  கண்ணுறங்காது நாட்டின் எல்லையை பாதுகாத்து,   சீனா, பாகிஸ்தான், காஷ்மீர் பாதகர்கள், எதிரிகளை ஈவு இரக்கமின்றி தாக்கி  அவர்களால் தாக்கப்பட்டு  மார்பில் குண்டு பாய்ந்து, மண்டை வெடித்து மாண்ட இளைஞன். எங்கோ தெற்கே  ஒரு கிராமத்தில் அவன் இளம் மனைவியும்,  சிறு குழந்தைகள் இருவரும் ”அப்பா எப்போ வருவார்?”  என்று காத்திருக்கும் குடும்பம்.  அவன் திரும்பவில்லை, அவன் இறந்த சேதிதான் சென்றது.  உடம்பு   உருப்படியாக கிடைத்தால் கிடைத்தால்   உசிலம்பட்டி  போய் சேரும்.
கிருஷ்ண சாமி  விண்ணுலகம் சென்றவன்  கிருஷ்ணன் முன்  நின்றான்.
அவனது வழக்கப்படி  தன்னுடைய  காலணி  பாலிஷ்  செய்யப்பட்டு பளபளவென்று முகம் தெரிகிறதா என்று பார்த்தான். சுருங்காத சீருடை சரியாக இருக்கிறதா?   பதக்கங்கள்  பித்தளை பட்டன்கள், பளபளவென்று என்று   இருக்கிறதா  என்று சரி பார்த்துக்  கொண்டான். தலையில் தொப்பியை சரியாக  கவிழ்த்துக் கொண்டு  விறைப்பாக நின்றான்.
”வா, கிச்சா, வா”
கிருஷ்ண சாமிக்கு  எப்படி கிருஷ்ணனை வணங்கவேண்டும் என்று தோன்றவில்லை, காலை  உதைத்துவிட்டு சல்யூட்  அடித்தான். கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே  தலை அசைத்து கேட்டான்.
”தம்பி,   நீ  என்னை  நினைத்தது உண்டா?” என்று கேட்டான்.
”எப்போதும் இல்லை சாமி, எப்போதாவது தான்”
”என் கோவிலுக்கு சென்றதுண்டா?’
”ஊருக்கு லீவ்லெ போகும்போது குடும்பத்தோடு  அய்யனார் கோவில் போய் பொங்கல் இடுவோம். பக்கத்தில் சிவன் கோவில்,  பெருமாள் கோவில் போறதுண்டு. அடிக்கடின்னு சொல்ல முடியாது.  திருப்பதிக்கு கீழ் மலை யடிவாரத்திலேருந்து நடந்து மேலே போவணும்னு ஆசை,  அடுத்த லீவில் ஊருக்கு போகும்போது போகலாம்னு பிளான் போட்டேன் சாமி. ஆனா….அதுக்குள்ளாறவே  இங்கே வந்துட்டேனே ..’
”ம்ம்  அப்புறம்”
”நான் பக்தி ,பஜனை, விரதம் எல்லாம்   செய்றவன்   இல்லே  சாமி.  செய்ய தெரியாது. யாரும் கத்துக்க குடுக்கலே.  எங்க தாத்தா  பஜனை பாட்டு   பாடுவார். சின்னைப் புள்ளேலே  சொல்லிக்கொடுத்தது அப்பப்போ ஞாபகம் வரும். பனிமலை மேலே உரக்க பாடுவேன். அவ்வளவு தான்.
 வேலேலே  இருக்கும்போது லீவ் கிடையாது.  பண்டிகை ஞாயிற்றுக்கிழமை எதுவும் இல்லை.  மேலதிகாரிங்க  கோபமாகவே பேசுவாங்க, கறாரா  கண்டிப்பா சிரிக்காம கடுகடுன்னு  தான் இருப்பாங்க.    அனாவசியமா ஒரு வார்த்தை கூட  பேசாம  இருக்கணும் சாமி. எப்போதும் உஷாரா,  கவனமா இருக்கிற வேலைங்க  எங்களுக்கு.   கரணம் தப்பினா மரணம் எங்க வேலையில்.   உலகத்திலே மத்தவங்க மாதிரி இல்லைங்க எங்க வேலை.
நான் சொந்தமா காசு சேத்ததில்லை . எப்போதுமே  ஓவர் டைம் தான் எங்களுக்கு.  வேளா  வேளைக்கு சாப்பாடு தண்ணி ன்னு கிடையாது.   எவ்வளவு குறைச்சலா தேவையோ அது பையிலே முதுகிலே இருக்கும். ருசி  பார்த்து சாப்பாடு இல்லை சாமி.  உயிர் வாழ அவசியமான சாப்பாடு மட்டும்.
வீட்டிலே  கஷ்டம் பணம் அனுப்பணும்னு எழுதுவாங்க, அனுப்ப முடியலன்னு வருத்தப்படுவேன், அழுவேன்   அப்போ.  சாமி.  அது  ஒண்ணு  தான்  என் வீக்னஸ்  சாமி’
”சாமி என்னை மன்னிச்சுடுங்க  ராணுவ  வீரர்கள் அழுவக்கூடாது.  அப்பப்போ  குடும்ப பாசம் என் மனசை இளக்கிடும்  சாமி.அப்பாவுக்கு  இந்த தடவை லீவ்லே போய் கண் ஆபரேஷன் பண்ணி கண்ணாடி வாங்கிக்  கொடுக்க காசு சேக்கணும் னு பிளான்..முடியலே சாமி”
”கிருஷ்ண சாமி,  நீ எங்கே இருக்கறே தெரியுமா இப்போ?
”வர வழியிலே இது தான் ”வைகுண்டம் னு சொன்னாங்க,சாமி.  ரொம்ப  ரொம்ப பெரிய மஹான்கள் இருக்கிற இடம், புண்யம் பண்ணவங்க இங்கே தான் இருப்பாங்க ன்னு  பேசிக்கிட்டாங்க. எனக்கு வேறே இடமா இருக்கும் சாமி, இங்கே இருக்கறவங்க, என்னை கிட்டயே  சேக்கமாட்டாங்களே.  இங்கே  என்னை தப்பா  கூட்டிக்கிட்டு வந்துட்டாங்களோ?  எனக்கு இது சரிப்படாது சாமி, நரகமோ என்னவோ சொல்றாங்களே  அங்கே தான் என்னை போடுவாங்க போல இருக்கு. இருந்துட்டு போகட்டும் சாமி”
கிருஷ்ணனும்  மற்ற தேவர்களும் வைகுண்ட வாசிகளும் கிருஷ்ணசாமி சொன்னதை கேட்டுக் கொண்டு பேசாதிருந் தாரக்ள். கிருஷ்ணன் என்ன பதில் சொல்லப்போகிறான் என்று காத்திருந்தார்கள்.
”அப்பனே  நீ எனக்கு சாமி,  நீ  கிருஷ்ண சாமி, வா, வலது காலை எடுத்து  வைத்து,   இங்கே லெப்ட்  ரைட் வேண்டாம். உன் வரவால் இங்கு எல்லாருக்கும் பெருமை.  நான் தான்  காக்கும் கடவுள் என்று  சொல்கி றார்கள்.  நீயும்  தான் காக்கும் கடவுள் கிருஷ்ணனுக்கே சாமி  நீ  . வா. நீ ஏற்கனவே நரகத்தை அனுபவித்தவன் இது உன் ஸ்வர்கபூமி.  ஆனந்தமாக  சுற்று. எங்கே வேணுமானாலும் சந்தோஷமாக திரி.    மற்றதெல்லாம் உன் பிளான்  எல்லாம் இனிமேல்  என்னுடையது.   நான் பார்த்துக் கொள்கிறேன்”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *