ராதையின் நெஞ்சமே ….. நங்கநல்லூர் J K SIVAN
மனித மனம் விநோதமானது, விசித்திரமானது. எண்ணற்ற சிந்தனைகள் அதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒருவர் எண்ணம் போல் மற்றவர்க்கு இல்லை. எண்ண ஓட்டத்துக்கு எல்லையே இல்லை. அது இருபக்கமும் கூரான கத்தி. நல்லதும் எண்ணும் , தீயதும் எண்ணும் . ஆசை, பேராசை, கோபம், அஹங்காரம் சகல வேண்டாதவையும் உருவாவதற்கு அதுவே ஆதாரம். அதைக் குரங்கு என்று பலர் சொன்னால் தப்பில்லை. அதை ஒரு நிலையில் நிறுத்து என்று கீதை திருப்பி திருப்பி சொன்னாலும் நமக்கு அது மட்டும் நம்மால் முடிவதே இல்லை. ஒரு வழி இருக்கிறது. நல்ல விஷயங்களை மட்டுமே நினைத்து, பேசி, கேட்டுக்கொண்டு வந்தால், கொஞ்சம் மனதின் ஓட்டம் குறையும். கேட்பதற்கு சத் விஷயங்கள் பல இருக்கிறது. பேச்சைத் தவிர அருமையான பாடல்கள் நிறையவே இருக்கிறது. அவற்றை கேட்கும்போது மனது உருகும். பக்திக்கு மனதில் இடம் கிடைக்கும்.
மனத்தை உருக்கும் ஒரு தெய்வீக ராகம் ஸஹானா. துக்கத்தையும், ஏமாற்றத்தையும், பிரதிபலிக்கும் ராகம். எப்போது துக்கம், ஏக்கம் எல்லாம் வருகிறது? நினைப்பது நடக்காவிட்டால், எதிர்பார்த்தது இல்லை என்றால். ஆசை நிராசை யாகும்போது.
கண்ணன் மகிழ்வூட்டுவான், அருகே வந்து கொஞ்சி விளையாடுவான், அடுத்த வினாடி கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போவான். அவன் சில நேரங்களில் இப்படி பிருந்தாவனத்தில் மறைந்து போவது, ஒளிந்து கொள்வதையே தாங்க முடியவில்லையே, என்றும் இனிமேல் கண்ணன் பிருந்தாவனத்தில் இல்லை என்ற நிலையில் ராதையின் நெஞ்சம் எப்படி துடித்திருக்கும்?.
நிலவைப் பிரிந்த வானம், மணத்தை இழந்த மலர், சுகத்தை தொலைத்த தென்றலாக ஆகிவிட்டாள் ராதா. பார்க்கும் இடங்களில் எல்லாம் கண்ணன் முகம் தெரிந்தது. அருகே சென்றால் அவனைக் காணோம். கேட்கும் ஒலியெல்லாம் கிருஷ்ணனின் புல்லாங்குழல் கீதமாக செவியில் புகும். அருகே ஓடிச்சென்றால் மரத்தின் அசைவு இலைகளின் சப்தம் மட்டும் கேட்கும். . பறவைகள் ஊமைகளாகி விட்டனவே .
யு ட்யூபில் ஏதோ ஒரு சினிமா பாடல். மனதைத் தொடும் ஸஹானா ராக பாடல் நேற்றிரவு நெஞ்சைத் தொட்டது. அருமையான சிரஞ்சீவி ராகம். எப்போதோ பல வருஷங்களுக்கு முன்பு கேட்ட சினிமா பாடல். யாரோ ஒரு தலைவி தலைவனை நினைத்து உருகி பாடுவதில் ராதையின் நெஞ்சம் உணர்ந்தேன்…
மயக்கும் குரலில் மனதைத் தொட்ட பி.சுசீலாம்மாவுக்கு நன்றி. நூறு வருஷங்கள் பாடிக்கொண்டே வாழவேண்டும். கிளிக் பண்ணி என்னைப்போல் சுகம் அனுபவிக்க https://youtu.be/Virhwz9nyTQ
”எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
சிங்காரமாக வந்து சிரித்து மயக்கி பேசியவர்
சிட்டாக பறந்து விட்டாரே முல்லை மொட்டாக இருக்க விட்டாரே.
விழி வாசல் தனைக் கடந்து வழி முழுதும் தெரிந்தவர்போல்
குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே
மொழி ஏதும் பேசாமல் மோகவலை வீசி என்னை
மோன நிலையாக்கி விட்டு வழி மறந்தாரே..
நிலவுதன்னை பழித்தொரு நாள் என் முகத்தை அவர் புகழ்ந்தார்
நிலவும் என்னை வெறுத்ததம்மா துணையும் இல்லையே
மலரை மிஞ்சும் அழகி என்று மகிழ்ந்து சொன்ன வார்த்தையினால்
மலரும் கோபம் கொண்டதம்மா தூதும் இல்லையே.
தென்றலைப் போல் ஆடி வரும் திருமகளே என்று அழைத்தார்
தென்றலுக்கும் பகை ஆனேன்வழியும் இல்லையே
ஒன்று சேர்ந்து கலந்தபோது நடந்ததெல்லாம் கதையும் இல்லை
உண்மை என்று சொல்லி சேர்க்க யாரும் இல்லையே.