அப்பா கணேசா…. – நங்கநல்லூர் J K SIVAN
எந்த காரியம் ஆரம்பித்தாலும், எந்த பூஜை செய்யும்போதும், எந்த சுப காரியம் துவங்கும்போதும் எந்த மந்திரம் உச்சரித்தாலும், முதலில் விக்னேஸ்வரனை தியானிப்பது நமது பாரம்பரிய சம்ப்ரதாயம். ஒரு குறையும், குறைவும் இல்லாமல் சந்தோஷமாக, வெற்றிகரமாக எடுத்த காரியம் நிறைவேற, பூர்த்தி பண்ண, அவன் துணையை நாடுபவர்கள் நாம்.. அதில் நல்ல பலனைக் கட்டாயம் கண்டவர்கள்.
எந்த பூஜை பண்ணினாலும் முதலில் गणपति ध्यानं ॥கணபதி தியானம் ஒரு சின்ன ஸ்லோக, மந்திரத்தோடு ஆரம்பிக்கிறோம்.
शुक्लांबरधरं * विष्णुं * शशिवर्णं * चतुर्भुजं * | प्रसन्नवदनं * ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ||
SuklAMbaradharaM * viShNuM * SaSivarNaM * chaturbhujam *। prasanna vadanaM* dhyAyet sarvavighnopaSAntaye ॥
சுக்லாம்பரதரம் * விஷ்ணும் * சஷிவர்ணம் * சதுர்புஜம் * | ப்ரசன்னவதனம் * த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே ||
எங்கள் குடும்ப மளிகை கடைக்காரர் சமரபுரி முதலியார் உப்பு புளி மிளகாய், மூக்குப் பொடி வாங்கினாலும் துண்டு காகிதத்தில் முதலில் ‘கடவுள் துணை’ என்று எழுதி விட்டு , ஒரு ”உ” என்ற பிள்ளையார் சுழி போட்டு விட்டுதன கிறுக்கி கிறுக்கி கையெழுத்து புரியாமல் தமிழில் எழுதுவார். அதிகப்படிப்பு நாலாம் க்ளாஸ் FAIL. நம்மிடையே இன்னும் லக்ஷக்கணக்கில் பிள்ளையார் சுழி போட்டு எழுதுபவர்கள் இருக்கிறோம். பிள்ளையார் சுழி போடாமல் எழுதி கையில் முட்டியில் சுப்ரமணிய ஐயரிடம் ஸ்கேலால் SCALE அடி வாங்கியவன் நான்.
மேலே சொன்ன மந்த்ர ஸ்லோகத்டத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டால் பிள்ளையார் பெயரே இருக்காது. அவரை வர்ணிப்பதாகவே இருக்கும்.:
வெள்ளை வஸ்த்ரம் உடுத்தியவர். ஸரஸ்வதியும் ஈச்வரனும் கூட வெள்ளை வஸ்திர தாரிகள் தான். மஞ்சள், சிவப்பு கட்டிக்கொள்கிற விஷ்ணு அம்பாளை பீதாம்பரதாரி, ரக்தாம்பரதாரி என்கிறோம். ‘சுக்லாம்பரதரர்’ என்பது பிள்ளையாரையும் சேர்த்து, அவரை மாத்திரம் குறிப்பிட்டு சொல்லவில்லை என்பது அற்புதம். “விஷ்ணு” பேர் இதில் வருகிறதே. விஷ்ணு என்றால் எல்லா இடத்திலும் வியாபித்திருப்பவர், ஸர்வ வியாபி என்று அர்த்தம். பிள்ளையார் எங்கேயும் கண்ணில் படுபவர், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருவில், சந்து முனையில், எதிர் குத்து, முட்டு, திருப்பங்களில, அரச மரத்தடியில், எங்கும் இருப்பவர்.
“சசிவர்ண” என்றால் பூரண சந்திரன் பால் நிலா மாதிரி என்று அர்த்தம். ஈச்வரனும், ஸரஸ்வதியும் கூட அப்படித்தானே இருப்பவர்கள்.
“சதுர்புஜ”: நாலு கரங்கள் உடையவர். நிறைய கடவுளுக்கு, ஆணாகட்டும் பெண்ணாகட்டும் நாலு, எட்டு பதினாறு கைகள் இருக்கிறது. பிள்ளையாரும் ஒரு சதுர்புஜம். தும்பிக்கையை சேர்ந்து ஐங்கரன். .
“ப்ரஸந்ந வதந”: மலர்ந்த முகம் உடையவர். யானையை எத்தனை நேரம் அருகில் நின்று பார்த்தாலும் அலுப்பு தட்டுவதில்லை. குழந்தைகளை எளிதில் கவரும் உருவம். உடம்பை ஆட்டிக்கொண்டு காதை விசிறிமாதிரி அசைக்கும் அழகு, தும்பிக்கை விஷமம் பார்க்க அலுக்காது.
பக்தர்களிடம் அநுக்ரஹத்தோடு ஆனந்தம் நிறைந்த முகத்தோடு இருப்பவர்களில் பிள்ளையாரும் உண்டு. ஆனந்தம் சொட்டும் ஆனை முகன். ஒவ்வொரு வார்த்தை சொல்லும்போது தலையில் ரெண்டு பக்கமும் நெற்றி பக்கம் குட்டிக் கொள்கிறோம். சிரஸில் உச்சியில் உள்ள, அம்ருதம் உடம்பில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பரவ தான் குட்டிக் கொள்வது.
பிள்ளையார் ஒருவருக்கு தான் காதைப் பிடித்துக்கொண்டு தோர்ப்பி கர்ணம் , தோப்புக்கரணம், போடுகிறோம்.
‘த்யாயேத்’ என்றால் தியானம் செய்வது.
பிள்ளையாரை எதற்கு தியானிக்கிறோம் என்றால் “ஸர்வ விக்ந உப சாந்தயே”- எல்லா குறைகளையும், குறைவுகளையும், நீக்க, தடைகள் நீங்க, இடையூறுகள் விலக .
சின்னதாக கொஞ்சம் மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து ஆவாஹனம் பண்ணி பூஜை பண்ணிவிட்டு தன எந்த சுப காரியங்களையும் ஆரம்பிக்கிறோம்.