கதையும் அதன் கருவும். J K SIVAN

கதையும் அதன் கருவும்.  —    நங்கநல்லூர்  J K  SIVAN
அவன் சாமியாரல்ல.  நினைவு தெரிந்ததிலிருந்து அப்பா  அம்மா  யாரென்று தெரியாமல் வளர்ந்தவன்.   மண்ணாங்கட்டின்னு  அந்த ஊரிலே நிறைய பேருக்கு  நாமகரணம். ஆகவே  அவனையும் மண்ணாங்கட்டின்னு தான் எல்லோரும் கூப்பிட்டாங்க.

அவன்  பள்ளிக்கூடம் பார்த்ததில்லை.  யார் யாரோ கொடுத்த  ஆடைகளை உடுத்து அவரவர் கொடுத்த  ஆகாரங்கள் உண்டு பட்டினத்தார்  சமாதியில் இரவு படுத்து இப்போது  ஐம்பது வயசுக்கு மேலாகி விட்டது. வருவோர் போவோர்  பாடுவது பேசுவது எல்லாம் கேட்டு கேட்டு தன்  அறிவை வளர்த்துக் கொண்டவன்.  மனதில் எல்லா வார்த்தைகளையும்  பதித்துக் கொண்டவன்.தனக்குத் தானே கேள்வி கேட்டு சந்தேகங்கள் தீர்த்துக் கொண்டவன்.  மண்டபத்தில்  இத்தனைவருஷங்களாக  எத்தனை பிரசங்கங்கள் கேட்டிருக்கிறான், எத்தனை பாடல்கள்  கேட்டவன் , எல்லாம் இறைவன் அருள். அவன் எண்ணப்படியே தான் எதுவுமே  எல்லாமே நடக்கும் என்று அடிக்கடி விபூதி கேட்டவர்களுக்கு கொடுக்கும்போது  சொல்வான்.  அந்த ஊர்  தாமோதர முதலியார்  தான் அவனை ஆரம்பத்திலிருந்து  கவனிச்சு  அவனுக்கு தேவையானதை எல்லாம் கொடுத்தவர்.
அவரையே  அப்பான்னு கூப்பிடுவான்.
அவர் கடவுள்னு  எல்லோர் கிட்டேயும் சொல்வான்.   ஒருநாள்  கொட்டற  மழை.  பக்கத்து ஊர்லேருந்து  பரசுராம சாஸ்திரிகள் னு ஒருவர்  வந்து கடவுள் நம்பிக்கை பத்தி  பேசப்போறார்னு மண்டபம் வாசலிலேயே  பலகையில் எழுதி வச்சிருந்தது.  மழையினால் அவர் வரலே. எல்லோரும் காத்திருந்தாங்க.  யாரோ ஒருத்தர் ” ”இதோ நம்ம இந்த  மண்ணாங்கட்டி சாமியாரையே  பேச வச்சிடுவோம்” னு சொன்னாக.

மண்ணாங்கட்டியை மேடைக்கு அழைத்தார்கள்.   அவன்  மறுத்தான்.
”நான் கல்வி அறிவில்லாத மூடன், எனக்கு என்ன  பேசத்  தெரியும்.  யாரோ ஒருவர் சொன்ன  கதையை ஞாபகம் இருக்கும் வரை சொல்கிறேன். அவ்வளவு தான்.

”சரி அந்த கதையை சொல்லுங்க” என்று கேட்டார்கள்.  ”மேடை மேல் ஏறமாட்டேன் , இதோ இஞ்சே தரையில் உட்கார்ந்து கிட்டே  தெரிஞ்சதை சொல்றேன்”  என்று   ஆரம்பித்தான்.

ஒரு ஊர்லே ஒரு பெரிய பணக்காரன். எல்லாவித சுக போகங்களும் அனுபவித்தவன்.  குழந்தைகுட்டி எதுவும் இல்லை என்று தான் குறை.   எல்லோரும் எனக்காக  வேண்டிக்கொள்ளுங்கோ, எனக்கு ஒரு பிள்ளை பிறந்து என்  வாரிசாக  இதெல்லாம் கட்டி காக்கட்டும். குடும்பத்தின் நல்ல பேரை தொடர்ந்து  நாலு பேருக்கு நல்ல  வழி காட்டட்டும்”  என்று கேட்டுக் கொள்வான்.
கடவுள் கண் திறந்து பார்த்தார். ஒரு பிள்ளை பிறந்தான்.  சுப்பிரமணி என்று பேர் வைத்தான். அவனை நன்றாக படிக்க வைத்தான்.   வாத்தியார்கள் வைத்து வாழ்க்கையில் அவன் முன்னேற  எல்லாம் கற்பித்தான்.  வயசானது.   சுப்பிரமணி க்கு கல்யாணம் நடந்தது.  தம்பதிகள் சந்தோஷமாக எல்லோரும் போற்றும்படி  கவலையில்லாமல்  வாழ்ந்தார்கள். சுப்பிரமணி கோவிலுக்கு எல்லாம் போகிறவன் இல்லை. வீட்டிலேயும் பூஜை எல்லாம் பண்ணமாட்டான். சாது. கடவுள் இல்லேன்னும் சொல்ல மாட்டான். சாமின்னு சொல்லி திருநீறு மட்டும் இட்டுக்குவான்.
ஊரில்  கொரோனா நோய்  பரவி  சுப்ரமணியோட  அப்பா அம்மா  ரெண்டு பேத்துமே  செத்துட்டாங்க. சுப்பிரமணி  ஊரில் எல்லோருக்கும்  உதவி செய்ய  அலைந்த நேரத்தில் அவன்  வீட்டில் திருடர்கள் புகுந்து எல்லாவற்றையும் கொள்ளை அடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.   சுப்ரமணியும் அவன்  மனைவியும் இப்போது ஒன்றுமில்லாத அனாதைகள். இத்தனை காலம் ஒட்டிக்கொண்டிருந்த  நண்பர்கள் உறவுகள் ஒவ்வொன்றாக பிய்த்துக்கொண்டு போய்விட்டார்கள். சுப்பிரமணி மனைவிக்கு  அப்போ நிறை  கர்ப்பம். அவன் கவலைப்பட்டான்.
”ஆஹா  என்  அப்பா அம்மா  நான் பிறந்ததுக்கு  எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க.  எப்படி எல்லாம் என்னை வளத்தாங்க.  நான் ஒண்ணுமில்லாதவனாய்ட்டேனே, எப்படி என் பிள்ளையை வளர்ப்பேன்?என்னை எப்படி வசதியோடு வளர்த்தாங்களோ அந்த வசதியை என்னால் என் பிள்ளைக்கு கொடுக்க முடியாதே”என்று அழுதான். அவன் மனைவி சரசா அவனைத்  தேற்றினாள்.
”நீ அழுவாதேப்பா,சாமி பார்த்துப்பார். அவரை நம்பு.  இது வரையில் நம்மை நல்லாத்தானே  வச்சிருக்கார்.  இனிமேலும் நல்லாவே  கவனிச்சுப்பார். கண்ணு தொடச்சுக்கோ” என்றாள் .

 சுப்பிரமணிக்கு ஒரு பிள்ளை பிறந்தான். ஆனால்  அவன் அல்பாயுசு, பிறந்த சில மணி நேரத்திலேயே  செத்துட்டான்.   அழுதுண்டே  போய் சுப்பிரமணி  சிசுவை பொதைச்சான் . வீட்டிலே அவன் மனைவி சரசா மயங்கி கிடந்தாள்.  முகத்திலே தண்ணி தெளிச்சு அவள் தலையை மடிமேல் போட்டுக்கிட்டு  அழுதான்.  கொஞ்ச  நேரத்தில் சரசா கண்ணை திறந்தாள். அவனைப் பார்த்துக்கிட்டே இருந்தவள் ஏதோ சொல்ல நினைச்சு  முடியாம, பெர்மனெண்டா கண்ணை மூடிட்டா.

”என்ன  சாமி  இப்படி பண்ணிட்பிட்டியே”  நீ எங்களை  கவனிக்கவே இல்லையே” என்று சுப்பிரமணி முறையிட்டான்.இப்போ தான் அவனுக்கு சாமி கிருஷ்ணன்  ஞாபகம் வந்தது.

‘சுப்பிரமணி, நான் எப்படா  உன்னை  மறந்தேன். நீ தான் என்னை நினைக்கவே இல்லையே” என்றான் கிருஷ்ணன்.

”இல்லே  நீ  எங்கேயோ இருந்தே, என்னை  கவனிச்சிருந்தா  இப்படி நடக்குமா என் வாழ்க்கையிலே”

”சுப்பிரமணி,  உளறாதேடா.  இதுவரையில்  நீ  உன்னைப் பத்தி தானேடா நினைச்சுட்டிருந்தே. என்னை எங்கே கூப்பிட்டே, நினைச்சே? என்னைப்  பார்க்கணும் னு கூட  உனக்கு தோணலை.  உண்மையா நான் எப்போதும் உன்கூடவே தான் இருந்தேன். இருக்கிறேன். நான் உன் பக்கத்துலே  வந்து உட்கார்ந்தா தான் சந்தோஷம் னு நினைக்காதேடா.  நான் இருக்கிறேன், எங்கே இருந்தாலும் உன்னை கவனிச்சிட்டே இருக்கேன் னு நம்புடா. நீ  படர கஷ்டம்  எல்லாம்  நீ  ஏற்கனவே  செஞ்ச பாவத்தால் வந்ததுடா. அதை நான் குறைக்க உனக்கு வழி எல்லாம் சொல்லிக்கொடுத்தாலும் நீ  செவிடனா, குருடனா நடந்துக்கிட்டு என் மேலே  குறை கண்டுபிடிக்கிறியே.  உன் மனசிலே எனக்கு இடம் கொடுத்தா போதும் டா. அங்கே போய் உட்கார்ந்து கொண்டே  உன்னை கவனிப்பேன். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதிலே என்னை நினைக்கல்லியேடா.  அதெல்லாம்  என்னை நினைக்கறதுக்கு, என் உதவி தேடறதுக்கு தானேடா. அது  உன்  மனசை விசாலப்படுத்தும். உண்மை எதுன்னு கண்ணை திறக்கும். அப்புறம் தான் நீ என்னை நினைக்கணும் னு  தோணும். என்னை நினைச்சுட்டீன்னா  மனசிலே நிம்மதி வந்துடும் டா.  உன் சக்தி எல்லாம் காலியான  பிறகு, என் உதவி தேவைப்படும்போது,   நீ தேடும்போது  நான் உனக்கு உதவாம போயிடுவேனா, சொல்லு? நான் எப்பவுமே   எல்லோருக்குமே உதவ காத்திருக்கிறேண்டா சுப்பிரமணி” என்று  கிருஷ்ணன் சாமி சொன்னார்.
எனக்கு கதைஎல்லாம் ஒழுங்கா சொல்ல தெரியாது. அவ்வளவு தான். சாமியை நினைக்கணும் அம்புட்டு தான்.”  மண்ணாங்கட்டி கதையை நிறுத்தியபோது மழை விட்டிருந்தது. எல்லோரும் சுண்டல் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போனாங்க.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *