யஜுர் உபாகர்மா — நங்கநல்லூர் J K SIVAN
ஆவணி அவிட்டம்.
எனக்கு வேதத்தில் சொல்லியபடி ஐந்து வயதிலோ ஏழு வதிலோ யக்னோபவீதம் நடக்கவில்லை. லேட்டாகத்தான்.நாளை 30.8.2023 யஜுர்வேதக்காரர்களுக்கு ஸ்ராவண உபா கர்மா. தமிழில் ஆவணி அவிட்டம். பூணல் மாற்றிக்கொள்ளும் சடங்கு. முன்பெல்லாம் நடந்தது போல ஆற்றங்கரை, குளத்தங்கரை, கோவில்கள் என்று பொது இடத்தில் கூடி உபா கர்மா நடப்பது குறைந்து போய், அவரவர் வீட்டுக்குளேயே உபாகர்மா தான் இப்போதைய வழக்கமாகி விட்டது. சிலர் வாத்தியார் உதவியுடன், சிலர் ஆன்லைன் வாத்யார் உதவியோடு, சிலர் மொபைல் பார்த்துக் கொண்டே. ஆன்லைன் உபாகர்மா கொரோனாவுக்குப் பிறகு ரொம்ப கொடி கட்டி பறக்கிறது.
உபாகர்மா அன்று பூணலை புதுப்பித்துக் கொள்வதற்கு சில விதி முறைகள் தாத்பர்யம் இருக்கிறது. பூணலை சும்மா வாங்கி மாட்டிக் கொள்வது அல்ல. , பௌர்ணமி அவிட்ட நக்ஷத்ரம். காயத்ரி மந்திரம், காமோகார்ஷின் ஜபம் இதெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளவை. இன்னும் ஒரு சில பதிவுகள் இதைப் பற்றியே எழுதப் போகிறேன்.
நாளைக்கு மறுநாள் 31.8.2023 அன்று காயத்ரி மந்த்ர ஜபம் . ஒரு நாளாவது முழுக்க சொல்வது. இந்த சடங்கு சாம வேதத்தினருக்கு வேறுநாள் வரும்.
”மஹா விஷ்ணு ஹயக்ரீவராக குதிரை முகத்தோடு ப்ரம்மதேவனிடமிருந்து வேதங்களை திருடிக்கொண்டு சென்ற மது கைடபர்களை வென்று வேதங்களை மீட்ட நாள் என்பது ஐதீகம். இதனால் ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் பெயர் உண்டு பிராமண குழந்தைகளுக்கு எட்டு வயதில் உபநயனம் செய்யும் வழக்கம் விட்டுப் போய்விட்டது. கல்யாணத்தன்றே பூணல் போட்டுக்கொள்பவர்கள் அநேகர் இப்போது. வேத காலத்தில் அதி புத்திசாலியாக, மஹா மேதாவி யாக ஞானம் நிறைந்த குழந்தை களுக்கு ஐந்து வயதில் உபநயனம் செய்வித்தார்கள். இந்த ரகம் முக்கால் வாசி ரிஷி குமாரர்களைதான் குறிப்பிடும்.
உபநயனம் என்பதில் ரெண்டு கார்யங்கள் இருக்கிறது. ஒன்று பூணூல் தரித்த பின் ஆசாரம், ஒழுக்கம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது. இந்த ஸம்ஸ்காரம் ஒருவனை ஆன்மீக உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது.
ரெண்டாவது உபநயனத்தில் பூணூல் போட்டுக் கொண்டவன் ஒரு பெரியவரிடம், அப்பாவிடம், குரு மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க முற்படுவது. அப்போதெல்லாம் உள்ளும் புறமும் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல் போட்டு வைத்தார்கள். இது தான் சார் உபநயனம், ப்ரம்மோபதேசம் .
உப நயனம் என்ற வார்த்தை களுக்கு காயத்ரீ மந்திரத்தை கற்றுக் கொள்ள குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல் என்று அர்த்தம். வேதம் படிப்பதற்கு தக்ஷிணாயனம் என்று ஆறுமாச காலம் ஒதுக்கப்பட்டது.
வேதத்தை ஓதி தர்ம சாஸ்திரங்கள் அர்த்தம் புரிந்து கொள்ள தெரிந்து கொள்ள உத்தராயணம் ஆறு மாச காலம். . தை மாதத்திலிருந்து ஆடி வரை உத்தராயணம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். ஆவணி மாசம் அவிட்ட நக்ஷத்ரம் ஆவணி அவிட்டம். ஆடி அமாவாசைக்கு பிறகு ச்ராவண மாசம். ஆவணி மாசம் என்று கணக்கு . பௌர்ணமி அன்று ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்வது வழக்கம்.
சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் அன்று உபா கர்மா. ருக் வேதம் தான் ஆதாரம் .அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும் உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். வேத சாஸ்திர பாடங்களை மேலே சொன்ன காலத்தில் ஆரம்பித்து முடிக்காமல் போய் விட்டால் என்ன பரிகாரம்?
அது தான் “காமோகார்ஷீத்” ஜபம். ‘காமோ கார்ஷீத்’ ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் புகுந்து விட்டது. அது தப்பு. பூணூல் மாற்றிக் கொள்வது மட்டும் உபா கர்மா ஆகாது. வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதற்காக பூணூலை மாற்றிக் கொள்கிறோம். வேத ஆரம்பம் செய்யவேண்டும். அதற்காகத்தான் “காமோர்கார்ஷீத்” ஜபம் செய்வது .பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம் அதற்காகவே உண்டானது. ஆவணி அவிட்டத் தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம் ஸ்திரமாக இருக்கும். அதற்காகத் தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து இருக்கிறார்கள். பூணூல் போட்ட முதல் வருஷத்தில் தான் காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலிய வைகள் பண்ண வேண்டும் என்று தவறாக எண்ணு கிறார்கள்.
தினந்தோறுமே சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி இருக்கிறது. ஆகவே ஒவ்வொருவரும் காய்த்ரி ஜபத்தன்றாவது ஆயிரம் தடவை காயத்ரீ மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்யலாம். பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம் கூட இருக்கிறது. ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரி ஜபத்தை நிறைய உச்சரித்தால் தான் அது நிறைவேறும். மற்ற ஜபங்களும் பலன் அளிக்கும்,
காயத்ரி மந்திரம் ஒன்று தான் வேதத்திலிருந்து பிறந்தது. மற்றவை புராணத்திலிருந்து வந்தவை. ஓம் நமசிவாய எனும் பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப் பட்டு இருக்கிறது.”— இப்படி சொல்வது நானல்ல, நமது மஹா பெரியவா.
காயத்ரி மந்திரம் ஜபித்த எல்லோருக்கும் ஒரே பலன், மனத்தூய்மை தான். மனோபலம் தான். மனோ பலத்தையும், மனத் தூய்மையும் வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும். இன்றைக்கு மனோ பலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே காயத்ரி அனுஷ்டானம் குறைந்து இருப்பதுதான். சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால் தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள் செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து விடுகிறது
வேதமே தெரியாமல் நாம் ஒருவருக்கொருவர் நீங்க என்ன வேதம் என்று கேட்கிறோம், அவரும் நாங்கள் சாம வேத காரர்கள், நாங்க ரிக் வேதம், யஜுர்வேதம் என்று பதில் சொல்கிறார்கள். அந்த வேதம் என்ன என்பது பற்றி தெரியாது. அறிந்து கொள்ளவும் விருப்பமோ, நேரமோ இல்லை என்பது பரிதாபமான விஷயம்.
உபாகர்மா என்றால் வருஷா வருஷம் ”ஆரம்பிப்பது”என்று அர்த்தம். எதை? வேதங்கள் கற்பதை. அன்று பூணலை புதுப்பித்துக் கொள்கிறோம். இதற்கு சில விதி முறைகள். ஆவணி அவிட்டம் எனும் உபா கர்மாவை யஜுர்வேதக் காரர்கள் ஆடி, பௌர்ணமி என்று கொண்டாடுகிறார்கள். அதாவது ஆவணி பிறப்பதற்கு முன்பே ஆவணி அவிட்டம் என்று பெயர் அதற்கு. ரிக் வேதக்காரர்கள் அவிட்ட நக்ஷத்ரம் என்றைக்கோ அன்று கொண்டாடுகிறார்கள். சாம வேதக்காரர்கள் அப்புறம் கிருஷ்ண பக்ஷ ஹஸ்த நக்ஷத்ரத்தன்று என்று வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.