தீ மிதி. நங்கநல்லூர் J K SIVAN
காப்பி போடும்போதோ, அப்பளம் பொரிக்கும்போதோ கொஞ்சம் சூடான பால் மேலே பட்டாலோ, சூடான எண்ணெய் ஒரு சொட்டு மேலே தெறித்தாலோ நான்கு அடி உயரம் துள்ளி குதிப்பவர்களில் நானும் ஒருவன். குளிக்கும்போது வெந்நீர் கொஞ்சம் சூடு அதிகம் இருத்தால் மேலே ஊற்றிக் கொள்வதற்கு முன் குளிர்ந்த நீர் கலந்து கொள்பவன்…. இப்படி செய்வது நான் மட்டுமல்ல உங்களில் பலருக்கும் இது வழக்கம் தான். கொதிக்க கொதிக்க சாப்பிடவோ, டீ காபி கூட குடிக்கவோ முடிவதில்லை. ஆனால் இதெல்லாம் தாண்டி இயற்கையையே வெல்லக் கூடியவர்கள் சிலர் இன்னும் இருக்கிறார்கள்.
பஞ்ச பூதங்களில் எல்லாமே அதீத சக்தி வாய்ந்தவை. நம்மையே உண்டாக்குபவை. கடைசியில் விழுங்குபவை. அவற்றின் சீற்றம் நம்மால் தாங்கமுடியாது. நெருப்பு சமைக்க உதவும், குளிர் காயலாம், வெளிச்சம் தரும். வனவிலங்குகளை விரட்டும். அளவுக்கு மீறி அதை நெருங்க முடியாது. சகலத்தையும் அழிக்கும் சக்தி கொண்டது. நீரும் அவ்வாறே, குளிக்கலாம், குடிக்கலாம், மிதக்கலாம், ஆனால் அது வெள்ளமாக, சுனாமியாக உருவெடுத்தால் சர்வ நாசம். காற்று சுகமாக தென்றலாகவும் அதேசமயம் கடுமையாக புயலாகவும் மாறும். அது மெல்லிய பிராணனாக உள்ளே இருப்பதால் தான் இதையே எழுத முடிகிறது. அதன் சீற்றம் தாங்கமுடியாது. பூமி எல்லாரையும் எல்லாவற்றையும் தாங்கும். அது நடுங்க ஆரம்பித்தால் நறநற வென்று பல்லைக் கடித்தால் சர்வமும் தவிடுபொடி.
ஆடி மாசம் தீ யை மிதிப்பது ஒரு வேண்டுதல். பக்தியின் உச்ச கட்டம். முஸ்லீம்கள் பக்தியோடு முஹர்ரம் பண்டிகையின் பொது தீ மிதிப்பதை சூளைமேட்டில் நேரில் பார்த்திருக்கிறேன். நேற்று ஆடி வெள்ளிக்கிழமை ஏகமாக வேம்புலி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம். தீ மிதி மேடை தயாராகிக் கொண்டிருந்தது.
ஹிந்துக்களில் சிலர் அம்மன் பக்தர்கள் தீ மிதிப்பது வருஷம் தோறும் ஒரு சடங்கு. நெருப்பில் இறங்குவதை பூ மிதிப்பது என்று சொல்வார்கள். அக்னி குண்டத்தை, பூக்குழி என்பார்கள், எப்படியும் பதினைந்து இருபது அடி நீளமாக பத்தடி அகலமாக ரெண்டடி ஆழமாக பூக்குழி நெருப்போடு ஜொலிக்கும்.இதற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருப்பார்கள். சிலரை மருளாளிகள் என்பார்கள். நங்கநல்லூரில் வேம்புலி அம்மன் கோவிலில் வருஷாவருஷம் தீமிதி பண்டிகை நடைபெறும். மஞ்சள் வஸ்திரம், நெற்றில் குங்குமம், மாலை தரித்துக்கொண்டு சிலர் பால் குடம், அம்மனுக்கு காணிக்கை தலையில் சுமந்து வெறும் காலில் தீயூட்டப்பட்ட மேடையில் நடப்பார்கள். சவுக்கு மரம், புளியமரம் கணகண என்று ஜிவாலையோடு எரியும். தணல் தூர நிற்கும் நமக்கே உஷ்ணத்தை தரும். எரியும் அனலில், சுகமாக நடந்து அந்த பக்கம் செல்வார்கள். காலில் எந்த காயம், புண் இருக்காது. இது பக்தியின் உச்சம். மனத்தின் திட வைராக்யம். புலன்களில்மேல் கட்டுப்பாடு.தீமிதிப்பது உலகின் பல பாகங்களில் இன்றும் நடக்கிறது. வெகுகாலமாக பழக்கத்தில் உள்ளது.
மிதித்தலுக்காக காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருக்கின்றார்கள். அம்மன் கோயில்களின் முன்பு தீ மிதித்தலுக்காக அக்னி குண்டம் தயார் செய்யப்படுகிறது. அம்மன் கோயில் திருவிழாக்களின் போது, சாமியாடிக் கொண்டு நீர்நிலைகளிலிருந்து நீராடி மாலையணிந்து பூக்குழிக்கு வருகின்றார்கள். பக்தியின் பரவசத்தில் இருந்துகொண்டு வரிசையாக பூக்குழிக்குள் இறங்குகிறார்கள்.
வருஷா வருஷம் ஒருநாள் நெருப்பு மிதிப்பது இருக்கட்டும். ஒரு யோகி நெருப்பிலே சுகமாக படுத்து எழுந்திருக்கிறார். அவரது பெயர் ராம்பாவ் . மராத்தியர் தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உச்சிஷ்ட கணபதி கோவிலில் காண்பவர். . நெருப்பில் படுக்கையில் படுப்பது போல் சுகமாக படுத்து புரள்கிறார். அவர்மேல் நெருப்பு துளியும் படவில்லை, அவரை எரிக்க வில்லை. அவர் உருத்தியிருக்கும் நூல் துணிகூட தீப்பற்றவில்லையே. எப்படி? கண்கட்டு வித்தையா? ஏதாவது கெமிக்கல் தடவிக்கொண்டிருக்கிறாரா? சே அதெல்லாம் நமது எண்ணங்கள். அவர் வெளிப்படுத்துவது பூரண பக்தி. மனோதிடம். சித்தர்கள் இதெல்லாம் சகஜமாக செய்யக்கூடியவர்கள். தீயில் புரளலாம், காற்றில் பறக்கலாம், நீர் மேல் நடக்கலாம். எல்லாம் அவர்களுக்கு சித்து விளையாட்டு.ராம்பாவ் அரை நூற்றாண்டுக்கு மேல் தீயில் படுப்பவர். வெறும் பால் துளி ஜலத்தோடு சேர்த்து பல ஆண்டுகள் ஆகாரமாக கொள்பவர். இது விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட .தெய்வீக சக்தி. தெரிந்த ஒரு யோகி ராம்பாவ் . நமக்குத் தெரியாத எத்தனையோ ராம்பாவ் கள் இருக்கிறார்கள்.நான் நம்புகிறேன். இத்துடன் ராம்பாவ் சுவாமி வீடியோ https://youtu.be/rGUMo4uj_dQ