அலமேலு மங்கா…… நங்கநல்லூர் J K SIVAN
சனிக்கிழமை வேங்கடேசனைப் போற்றி வணங்கும், தரிசிக்கும் நாள் என்றாலும் தனியாக திருமலை மேல் நிற்பவனை மட்டும் தரிசிப்பதால் வேங்கடேச தரிசனம் பூர்த்தியாகாது. வழக்கமாக மலையேறி திருமலை செல்லும் முன் முறைப்படி திருச்சானூர் சென்று, அலமேலு மங்கை எனப்படும் பத்மாவதி தாயாரைத் தரிசித்த பிறகே, வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும் என்பது தான் வழிபாட்டு முறை. திருச்சானூர் எனும் சிறிய கிராமம் திருப்பதியிலிருந்து 5 கி.மீ. தூரம். நடந்து போவோர் உண்டு. அந்த காலத்தில் குதிரை வண்டியில் போவோம். இப்போது நிறைய பஸ் ஓடுகிறது. அது தவிர ஆட்டோ வசதியும் இந்த ஸ்தலத்தில் புஷ்கரணி எனும் தீர்த்தக்குளத்தில் தாமரை மலராக அலர்மேல் மங்காதேவி அவதரித்தாள். பத்மாவதி என்று பெயர். பத்மம் என்றால் தாமரை. ஆயிரம் வருஷ கோவில். ஸ்ரீ பத்மாவதி தேவிக்கு ராஜா தொண்டைமான் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம்.
தொண்டமண்டல ஆகாச ராஜா தரணி தேவி தம்பதிக்கு புத்ரியாக பிறந்து ஸ்ரீனிவாசனை மணந்தவள் . தாயார் என்று வார்த்தை சொன்னாலே முதலில் கண்முன், நினைவில் நிற்பவள் பத்மாவதி தாயார். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள். கலியுகத்தில் பாபச்சுமையை குறைக்க இறைவன் பூமியில் அவதாரம் எடுக்க வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில், முனிவர்கள் யாகம் தொடங்கினர்.
யாகத்தை காண வந்த நாரதர், “யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்?’ என்று முனிவர்களைக் கேட்டார்.
”இவ்வுலகிலேயே சாந்தமான தெய்வம் யாரோ, அவருக்கு யாக பலனைத் தருவதென்று ‘ முடிவு செய்தனர்.
சாந்தமானவரைத் தேடி, பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார். அங்கே அங்கு சரஸ்வதியும் பிரம்மாவும் முனிவருக்கு தக்க வரவேற்பு தரவில்லை என்று கைலாஸம் சென்றார். அங்கும் பரமேஸ்வரன் பார்வதியின் அனுமதி இல்லை. அங்கிருந்து நேராக வைகுண்டம் சென்றார். மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மி மடியில் படுத்திருந்து முனிவரை உபசரித்து வரவேற்கவில்லை என்று காலால் அவர் மார்பில் உதைத்தார் ப்ருகு முனிவர். ஸ்ரீமந் நாராயணன் முனிவர் மார்பில் உதைத்ததற்கு வருந்தவில்லை. உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே, யாக பலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர்.
மஹா விஷ்ணுவின் மார்பில் உறையும் லக்ஷ்மி மார்பில் உதைத்த முனிவரை மஹாவிஷ்ணு தண்டிக்காததால், வெகுண்டு பூலோகம் சென்று தவம் இருந்தாள் . திருச்சானூர் வந்து விட்டாள் . அவளைத் தேடி மஹாவிஷ்ணு கடைசியில் வேங்கட மலையில் வந்து ஒரு புற்றுக்குள் அமர்ந்து பசியோடு தியானம் செய்தார். கணவர் மீது கோபமிருந்தாலும், அவர் தனித்து எங்கோ பசியுடன் இருப்பது குறித்து மஹாலக்ஷ்மி வருந்தினாள் . பரம சிவனும் பிரம்மாவும் பசுவாகவும், கன்றாகவும் மாற, லக்ஷ்மி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்பகுதியை ஆட்சி செய்த மன்னனிடம் பசுவை விற்கச் சென்றாள். மன்னன் வாங்கிய பசு, மேய்ச்சலுக்குச் செல்லும்போது, சீனிவாசன் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. அதைக் குடித்து சீனிவாசன் பசியாறினார். பசுவை மேய்த்த இடையன், பசுவின் பின்னால் சென்று, புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி, புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு, ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள், ஆசிரமம் ஒன்றைக் கண்டார். அது வராஹ மூர்த்தி என்பவரின் ஆசிரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன், பாசத்தில் மூழ்கினாள். திருமாலும், அன்புடன் வகுளாதேவியை, “அம்மா’ என்று அழைத்தார். திருமலை மடப்பள்ளி அருகே தனி சன்னதியில் இருக்கிறார் லகுளாதேவி.
வகுளாதேவி தன் பிள்ளைக்கு, “ஸ்ரீனிவாசன்’ (செல்வம் பொருந்தியவன்) என்று பெயரிட்டாள்.
சந்திரகிரி ராஜா ஆகாசராஜன், பிள்ளை வரம் வேண்டி, தன் குலகுரு சுக முனிவரின் ஆலோசனைப்படி, புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, நாள் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை இருந்தது. எனவே, குழந்தைக்கு, “பத்மாவதி’ என்று பெயரிட்டான். முற்பிறப்பில் வேதவதி என்னும் பெயரில் பிறந்திருந்தாள் பத்மாவதி தாயார். அழகில் சிறந்த அவள், ஒரு தபஸ்வினியாகி காட்டில் தவமிருந்தாள். ஒருமுறை, அவள் ராமபிரானைச் சந்தித்தாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டாள். “இப்பிறவியில் நான் ஏகபத்தினி விரதன். கலியுகத்தில், நான் திருமலையில் சீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். நீ, அந்த மலையை ஆளும் ஆகாசராஜன்- தரணிதேவி தம்பதியருக்கு புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று வாக்களித்தார் ராமபிரான். ஆகவே திருமலைக்கு சீனிவாசன் வர, பத்மாவதியைச் சந்தித்தார். தன் முற்பிறவி வரலாறை மறந்துவிட்ட பத்மாவதி, அவரைக் கண்டு அஞ்சினாள். பத்மாவதியின் தோழிகள் அவர் மீது கல்லெறிந்து துரத்தினர். காயமடைந்த சீனிவாசன், தன்னை வளர்த்து ஆளாக்கிய வகுளாதேவியிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார். சீனிவாசனுக்காக ஆகாசராஜனிடம் தூது சென்றாள் வகுளாதேவி. தன் மகன் சீனிவாசன், நாராயணனின் அம்சம் என்பதை மன்னனிடம் தெரிவிக்க ஆனந்தமடைந்த ராஜா, சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் விமரிசையாக திருமணம் செய்வித்தார். ஸ்ரீனிவாசன் திருமணச்செலவுக்காக குபேரனிடம் கடன் வாங்கினார். கடன் பெற என்ன நிபந்தனை தெரியுமா?
“குபேரா! என்னை வணங்குவதற்கு இந்த திருத்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களின் பாவக் கணக்குக்கு ஏற்ப அவர்களிடம் நான் செல்வத்தை வசூலித்து விடுவேன். அதை உனக்கு வட்டியாகத் தருவேன்! கலியுகம் முடியும் போது அசலை முழுமையாகத் தந்துவிடுவேன்…’ என்று எழுதிக் கொடுத்தார். கலியுக வரதனின் திருப்பதி உண்டியல் வசூல் காணிக்கை ஏன் உலகிலேயே அதிகம் என்று இப்போது புரிகிறதா?
சீனிவாசன்- பத்மாவதி திருமணம் இனிதே முடிந்தது. நாராயணன், இன்னொரு திருமணம் பண்ணிக்கொண்டு விட்டார் என்ற தகவலை மகாலட்சுமியிடம் போய் காதில் போட்டார் நாரதர். கோபமடைந்த மஹா லக்ஷ்மி சீனிவாசனிடம் வந்து நியாயம் கேட்டு அழுதாள். அவளைச் சமாதானம் செய்து விளக்கமளித்தார் சீனிவாசன்.
“லக்ஷ்மி ! முற்பிறவியில் நீ சீதையாக பிறந்த போது ராவணன் உன்னைக் கடத்த வந்தான். அப்போது அக்னியின் பாதுகாப்பில் இருந்த மாயசீதையான இவள், உனக்குப் பதிலாக ராவணனுடன் சென்றாள். உண்மையில் இவள் உன்னைக் காப்பாற்றியவள்…’ என்றார். சமாதானமடைந்த லக்ஷ்மி, பத்மாவதியைத் தன் தங்கையாக ஏற்றாள். லக்ஷ்மியிடம்
“நீ என் மார்பில் அமர்ந்துகொள். என் மார்பில் வலப்பக்கம் பத்மாவதி இருப்பாள். அவளது மற்றொரு வடிவத்தை பத்மசரோவர தீர்த்தக்கரையில் அமையும் வகையில் ஏற்பாடு செய். நீங்கள் இருவரும் இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அருள் வழங்குங்கள்…’ என்றார் சீனிவாசன். பத்மாவதி அமர்ந்த இடமே அலமேலுமங்காபுரம் எனப்படுகிறது. பிற்காலத்தில் திருச்சானூர் என்ற பெயர் சூட்டப்பட்டது. சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்து தங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம். ஆரம்ப காலத்தில் வேங்கடேஸ்வரனுக்கு இங்கு தான் கோவில் இருந்தது. இட வசதி நெருக்கடியால் ஸ்ரீனிவாசன் திருமலையில் கோயில் கொண்டு நிற்கிறார்.
இப்படி பெருமை பெற்ற அலமேலு மங்கா தாயாரைப் பற்றிய ஒரு அற்புத பாடல் சுநாத வினோதினி எனும் ராகத்தில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பாடியதைக் கேட்டு எனக்கும் அதைப் பாட வேண்டும் என்று தோன்றி அதை இத்துடன் இணைத்திருக்கிறேன் CLICK THE LINK https://youtu.be/pgiG-wGkZtY