கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்- ப்ரஸ்னோத்ர ரத்னமாலிகா
கேள்வி பதில் ரத்னமாலை 41-55
நமக்கு அடிக்கடி தோன்றும் ஒரு எண்ணம் என்ன?
‘சே, என்னடா வாழ்க்கை இது, அலுத்து போய் விட்டது. மிஷின் மாதிரி செஞ்சதையே திருப்பி திருப்பி செஞ்சுண்டு, சொன்னதையே திருப்பி சொல்லிண்டு, என்னிக்கு இதிலிருந்து விடிவு காலம்?’ என்று தோன்றுகிறது. ஸம்ஸார வாழ்வில் என்ன சாரம் இருக்கிறது? ‘கிம் ஸம்ஸாரே ஸாரம்?’- என்னய்யா ஸாரம் இருக்கிறது இந்த ஸம்ஸாரத்தில் ? (ஸம்ஸாரம் என்றால் மனைவி இல்லை. வாழ்க்கை.”என்ன ஸாரம் என்றா கேட்டாய்? நீ இப்போ கேட்டாய் பார்த்தியா, அந்த கேள்வியையே அடிக்கடி உனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிரு. அது தான் சம்சாரத்தின் ஸாரம் என்கிறார் ஆதி சங்கரர்.ஆதி சங்கரருக்கு நம்மை பற்றி ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே ரொம்ப நன்றாக தெரியும்,. ஆகவே தான் குட்டி குட்டியாக கேள்வி கேட்டகிறார்.
”தம்பி, நான் நீளமாக கேள்வி கேட்டால் அதைக் கேட்காமல் நீ சிட்டாய் பறந்துவிடுவாய். குட்டி குட்டி கேள்வியாக கேட்கிறேன். நீ பதில் சொல்லமாட்டாய் என்று தெரியும். உனக்காக நானே யோசித்து பதிலும் அதற்கு தருகிறேன். இப்போவாவது படிப்பாயா? புரிந்து கொள்வாயா ? ”
இப்படித்தான் கேள்வி பதில் ரத்னமாலை அமைந்துள்ளது. நீளமான கேள்விகளை உடைத்தது குட்டி குட்டியாக அவர் பதிலொரு நம்பர் கொடுத்து உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இனி தொடர்வோம்:
41 ”எது நிச்சயம் நன்மை பயக்கக் கூடியது?
சந்தேகமே இல்லாமல் தர்மம் ஒன்று தான் நன்மை தரும்”
42. இந்த உலகில் சுத்தமானவன் யார் தெரியுமா? சொல்”
”எவன் மனது பளிங்கு போல் பரிசுத்தமாக இருக்கிறதோ அவன். பேதம் விருப்பு வெறுப்பு இல்லாத , அன்பு, பண்பு நிறைந்த மனம் கொண்டவன்.
43 நமக்கு யாரைப் பார்த்தால் அறிவாளி என்று புலப்படும் ?”
”எது சரி, தப்பு, எது தர்மம், அதர்மம், எது ஸாஸ்வதம் , எதுநிரந்தரமில்லாதது என்று பகுத்து உணர்பவனைத்தான் நாம் அறிவாளியென்று போற்றுகிறோம் ”
44. வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்று சொல்?
நமது வாழ்கை பிறர் எந்த குறையும் காணாததாக பரிசுத்தமானதாக இருப்பதாக மெச்சபடும்படியாக இருக்கவேண்டும்.
45. எதை முட்டாள்தனம் என்று சொல்லலாம்?
கல்வி கற்றால் மட்டும் போதாது. வள்ளுவர் இதற்கு எப்போதோ பதில் சொல்லி இருக்கிறாரே. ‘கற்க கசடற. கற்றபின் நிற்க அதற்குத் தக”. நாம் கற்றுஅறிந்த உண்மையின் படி எது தர்மம், எது நல்லது என்று அறிந்தும் நன்றாக் தெரிந்தும், அதைக் கடைப்பிடிக்காமல், அதன்படி நாமே நடக்கவில்லையென்றால் அந்த கல்வியால் என்ன பயன்?. கல்லாத முட்டாளை விட நாம் கீழ்த்தரம்.
46. எது தூக்கத்துக்கு சமம் ஆகும்”
அஞ்ஞானம், அறியாமை தாமச குணத்தின் உச்சம் தான் தூக்கம்.
47. எது தாமரை இலை மேல் நீர்த்துளி போல் அநித்யமானது.?
”இளமை, செல்வம், ஒருவனது ஆயுசு, எதுவுமே நிரந்தரமானது அல்ல. ஒரு காரண்டீயும் யாருமே கொடுக்க முடியாது.
48. சந்திரனின் கிரணங்கள் போல் மக்களை சுகம் பெற மகிழ்விப்பவர்கள் யார் என்று சொல்ல முடியுமா?”
சத் சங்கமான நல்லவர்கள் தான். அவர்கள் வழிகாட்டல், அறிவுரை ஆஹா மனதுக்கு மிகவும் குளிர்ந்தது.
49.எது நிரந்தர சந்தோஷம்?”
பற்றுகள் எல்லாவற்றையும் விட்டொழித்தால் மட்டுமே நிம்மதியும் சதானந்தம் பெற முடியும்.
50. எதைச் செய்ய முயற்சிக்கவேண்டும்?”
எல்லா உயிர்களுக்கும் நல்லதே செய்வதை.
51. எல்லா ஜீவன்களுக்கும் எது அரிதானது?”அதனதன் பிராணன், அதாவது உயிர் சக்தி. அதற்கு மிஞ்சி உடலில் என்ன இருக்கிறது?
52, எது துர்பாக்யம் என கருதப்படுகிறது?
அகம்பாவம், தன்னைப்பற்றிய உயர்வான தப்பபிப்ராயம் ஏமாற்றத்தில் தான் முடியும்.
53. எது நமக்கு அளவிலா ஆனந்தம் தரும் ?”
நல்லவர்களின் நட்பு. இது தான் சத்சங்கம்.
54. துயரத்திலிருந்து, துன்பத்திலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள எவரால் முடியும்?”
எல்லாவிதத்திலும் எல்லாவற்றையும் உலக வாழ்க்கையில் துறப்பவனை ஒருபோதும் துயரம், கஷ்டம், துன்பம் எதுவும் நெருங்காது.
55. ஒருவனுக்கு மரணம் சம்பவிக்கும் வரை எது முள்ளாக அவன் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கும்?
அவன் எப்போதோ யாருக்கோ செய்த துரோகம், பாபம்.வெளியே யாருக்கும் தெரியாமல் அவன் மனதில் ரகசியமாக உறையும் எப்போதும் அவன் மனதை உறுத்திக்கொண்டே தான் இருக்கும்.