நினைவெல்லாம் நீயே கண்ணா! .. நங்கநல்லூர் J.K. SIVAN
என் நண்பர்கள், உறவினர்கள் என்னைப்பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி சிந்திக்கவே நேரமில்லை. எனக்கே தெரியுமே . நான் நேரத்தை கணக்கிடுபவன். இருக்கும் நேரம் எவ்வளவோ? அது போதுமா, என் எண்ணங்களை செயலாக்குவதற்கு? என்னால் படிக்க முடியுமா, புரிந்து கொள்ள முடியுமா, தெளிவாக புரிந்து கொண்டு சுருக்கமாக சொல்ல, எழுத முடியுமா????? முடியவேண்டும் என்று தான் என் ஆசை. தாகம். என்னை ஒரு பைத்தியம் என்று கூட சொல்லுங்கள். கோபித்துக் கொள்ள மாட்டேன். நான் கிருஷ்ண பைத்தியமாகிவிட்டேன் என்பது பத்து வருஷங்களுக்கு மேல் எனக்கு தெரியும். இதில் என்ன விசேஷம் என்றால், இந்த பைத்தியம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது… நாளுக்கு நாள் கிருஷ்ண பைத்தியம் முற்றுகிறது. ஒருநாளைக்கு 18-20 மணி நேரத்துக்கு குறையாமல் அவனை நினைப்பது, பாடுவது, பேசுவது, எழுதுவது என்று இருந்தால் பைத்தியம் தானே! இந்த பைத்தியத்தால் யாருக்கும் கெடுதல் இல்லை. ஏதோ ஒரு மூலையில் கம்ப்யூட்டர் எதிரே தன்னை மறந்து, உலகை மறந்து ஏதோ எழுதும், படிக்கும், பாட்டு பாட வைத்து கூடவே பாடும். எல்லாம் கிருஷ்ணா, உன்னைப் பற்றிய சமாச்சாரங்கள் தான். இப்போது சில நாட்களாக இருமல் விடாமல் வந்து எனக்கு பிடித்த ஒரு காரியம் செய்ய முடியவில்லை. பேசமுடியவில்லை, அதிலும் பாட முடியவில்லை. இருமல் எங்கிருந்ததோ நம்பியாராக, வீரப்பாவாக வந்து தடை செயகிறது….. டாக்டர் கைலாஷ் எனக்கு உதவுகிறார். அவரே ஒரு கிருஷ்ண பக்தர். இருமல் நெஞ்சு கபம், சளிக்கு ஜென்ம வைரி அவர். பரவாயில்லை. இன்னும் ஒனறிரண்டு மாதங்களில் என்னை பாடவைக்கவேண்டும் என்று அவருக்கும் ஒரு ஆசை. நாங்கள் சேர்ந்து பலமுறை பாடி இருக்கிறோமே.
கிருஷ்ணா, சில சமயம் ரொம்ப களைத்துப் போய் விடுகிறேனடா. ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை, முதுகு வலிக்கிறது. படுத்துக்கொண்டே உன்னை நினைக்கிறேன். யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. நம்பினவர்கள் நம்பியார்களாக மாறுவதை கவனிக்கும்போது மனதுக்குள் விரிசல். பேச்சும் செயலும் துன்புறுத்துகிறது. ஒரு பெரும் இழப்பை என் மனம் அனுபவித்தது. நம்பி நம்பியே நம்பியாண்டார் நம்பியாக போய்விட்டோமோ? எதுவுமே உருப்படி இல்லையோ? இப்படி ஒரு நாடா? இது ஒரு கேடா?
ஏதோ ஒரு பாட்டில் வருமே அது உண்மை என்றே நீ நிருபித்து விட்டாய். ”வஞ்சகன் கண்ணனடா” என்பதை நிரூபித்துக் கொண்டே வருகிறாய். இந்த உலகில் உள்ள நல்ல நல்ல மணிகளை எல்லாம் பொறுக்கித் தேடி எடுத்துகொண்டு போய்விட்டு வெறும் உமியும் தவிடும் இங்கே வாழ்வதற்கு நிறைய விட்டு வைத்திருக்கிறாய். சரி, எல்லாம் ”போகட்டும் கண்ணனுக்கே” என்று தான் நாங்களும் இருக்கிறோம்.
”கண்ணா, நீ உருவில் ஈடிணையற்றவன், அறிவுச்சுடர். அனைத்து உயிர்களின் உள்ளேயும் ஊற்றாக ஒளிர்கின்றவன். ஒவ்வொரு உயிரிலும் மற்றொன்றாக உருவாகி வளர்கின்றவன். உன்னை நான் எப்படி போற்றுவேன்?. உன் கமலத் திருவடிகளை நெஞ்சில் மாறாமல் வைத்து வணங்குவது ஒன்றே தான் நான் செய்ய வேண்டியது. என்னால் செய்ய முடிந்தது இது ஒன்றுதான் கண்ணா.
என்னோடு எப்போதும் இரேன். என் ஆவியோடு கலந்து இரு. என்னை விட்டு விடாதே. என் இதயத்தைப் பார். சுத்தமாக உனக்காக அதை காலி செய்து வைத்திருக்கிறேனா இல்லையா?. அதில் வந்து இருக்க வேண்டியது தானே உன் வேலை?. ஏன் என்னைக் காக்க வைக்கிறாய்? வா என் உள்ளே இதயத்தில் ஜம்மென்று அமர்ந்து கொள். அங்கேயே நிரந்தரமாக இரு . எப்போது தேவையோ அப்போது வெளியே போய் நீ அழிக்க வேண்டிய அசுரர்களை கொன்று விட்டு சமத்தாக மீண்டும் என் இதயத்துக்குள்ளே உடனே திரும்பி வா. என் உள்ளேயே நீ அழிக்க நிறைய அசுரர்களை வளர்த்து வைத்திருக்கிறேனே . உனக்கு அவர்களை, அவைகளைக் கொல்லவே நேரம் சரியாக இருக்கும். கவலையே படாதே.
என் எதிரே பார்க்கிறேனே நீண்ட கடல், அதற்கு வெள்ளைக்காரன் வைத்த பெயர் வங்காள விரிகுடா…. திருவல்லிக்கேணியில் இருக்கும்போது தினமும் சாயந்திரம் வங்காள விரிகுடா கடலின் மணலில் அமர்ந்து, படுத்துக் கொண்டு கடலின் அலையை, ஓசையை ரசிப்பேன். மெரினா என்று எவண்டா அதற்கு பெயர் வைத்தது?
அதன் மீது ஒவ்வொரு காலையிலும் விடியலில் உதிக்கும் சூரியா, என் உள்ளக்கடலிலும் நீ தினமும் உதிக்கவேண்டாமா?.
உன்னை நான் கண்டு வணங்கித் தொழ வேண்டாமா?. சிவன் சம்ஹார மூர்த்தி. அவன் வேறு நீ வேறா? நீயே தான் அது. நானும் ஒரு சிவன் தானே. என் உள்ளத்தில் எழும் தீய எண்ணங்களை சம்ஹரித்து விடு. நான் மட்டுமா உன்னை தொழுபவன்?. இந்த ஈரேழு உலகமும் உன்னை தொழுகிறதே. தேவாதி தேவன் அல்லவா நீ.கிருஷ்ணா. நீ பலே ஆள்.!
இது மாங்காய் சீசன் இல்லை. முடிந்து போய்விட்டது. மரத்தில் இருந்த அத்தனை புளிப்பு மாங்காய்களை செந்நிறம், மஞ்சள் நிறம் பெற்று இனிக்கிறது. தொப் தொப் என்று கீழே விழுந்ததில் பாதிக்கு மேல் அணிலின் பல் பட்டது தான்.
காய்கறி கடைக்கார பாலன் நாடாரிடம் கொடுத்தேன். ” நல்லா இருக்கு ஐயரே , ஒரு கடி கடித்தேன். அப்பப்பா, என்ன புளிப்பு!. அத்தனை பல்லும் ஆடி கீழே கொட்டிடுச்சி..” எனக்குள் சிரிப்பு. ஏன் தெரியுமா? உன்னை நினைத்தேன் . காயிலே புளிப்பு நீ தானே. அப்படியென்றால் பழுத்த பழத்தின் இனிப்பும் நீ தான். உடல் சரியில்லை என்று படுக்கும்போது என் உடலில் தோன்றிய நோயும் நீ என்றே தான் இருக்க வேண்டும். அந்த நோய் தீர டயட்டில் DIETல் விரதம் இருந்தேனே அப்போது அதெதாமும் நீயல்லவா?
இதோ நடக்கிறேன். எதிரே தெரிகிறதே பெருங்கடல். கரையோரம் நடக்கும் என்னோடு கூடவே வருகிறதே. அதிலிருந்து தான் எத்தனை சுகமாக குளிர்ந்த காற்று வீசுகிறது. இல்லையப்பனே, நீ தான் அப்படி என்னை மகிழ்வூட்ட என் உடலைத் தழுவுகிறாய். நீ வேறு காற்று வேறா? பகல் பன்னிரண்டு மணி நேரத்திலும் இதே கடற்கரையில் நடந்திருக்கிறேனே. கால் செருப்பையும் மீறி அனல் வீசி கால் உடல் எல்லாம் என்னை காய்ச்சும்போது அந்த கனலும் அனலும் கூட நீ தான்.
ஒரு சிறு மழையே போதும். கிராமங்கள் அல்ல பட்டினங்களும் தான். சேற்றை வாரி வேட்டியில் பூசும். அது சரி. அந்த சேற்றைக் குழம்பாக்கியது யார்.? நீ தானே? அந்த சேற்றின் குழம்பு போலவே தான் என் உள்ளத்தில் ஊரும் எண்ணங்களும் மொத்தமாக கலந்து குழம்பாகிறது.. என் எண்ணக் குழம்பிலிருந்து தானே எல்லா குழப்பமும் வருகிறது கோபம் தாபமும் ….! அப்போது நான் நாலா பக்கமும் திரும்பிப் பார்ப்பேனே. அந்த திக்குகளில் எல்லாம் நீயே அல்லவோ எனக்கு உடனே நான் தேடும் தெளிவாக காட்சி அளிப்பவன்.
எனக்கு இன்னும் ஒன்று சரியாக தெரியவில்லை. உன்னை எப்படித் தொழுவது? எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டு மானாலும் யார் வேண்டுமானாலும் உன்னை ”நினைத்தாலே தொழுவது” தானே கண்ணா முறை? நீ தான் சுலபமானவன் ஆயிற்றே. ”கேட்டதும் கொடுப்பவனாயிற்றே கண்ணா….உநினைப் பொருத்தவரையில் இருப் பவன், இல்லாதவன் எவருமே ஒன்று தானே. முக்யமாக எளியோரைச் சேர்ந்தவன் நீ. அதே சமயம் யார் உன்னைப் போற்றினாலும் அவர்க ளுக்கும் அதே அன்பு கருணை அருள்பவனல்லவா? பகைவனுக்கும் அருள்பவன்…
ஆனால் வஞ்சகம், பொய், பிறருக்கு துன்பம் செய்வோரை மட்டும் நீ வேறு மாதிரி அணுகுகிறாயே, எப்படியப்பா? அப்போது மட்டும் உன்னிடம் கருணை, அன்பு எதையுமே காணுமே. நீ விசித்ரமானவன் கண்ணா. உண்மையில் துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் என்ன என்று எனக்கு நன்றாக புரிய வைக்கிறாய் கண்ணா.
++
நான் மேலே சொன்னது என் எண்ணத்தோடு பாரதியாரின் இரு பாடல்களின் பொருளும் ஒரு சேர கலந்தது. அந்த இரு பாடல்களும் கீழே உள்ளவை தான். எல்லோருக்கும் தெரிந்தவை. கண்ணனைப் போல் பாரதியும் எளிமை யானவர் தானே.
என் எண்ணங்கள் வெறும் வர்ணப்பூச்சு. உள்ளே இருப்பது பாரதியின் எண்ணங்கள். அவற்றின் வடிகால்.
”வருவாய், வருவாய், வருவாய் — கண்ணா
வருவாய், வருவாய், வருவாய்.
சரணங்கள்
உருவாய் அறிவில் ஒளிர்வாய் — கண்ணா
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் — கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் — கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் — கண்ணா(வருவாய்)1
இணைவாய் எனதா வியிலே — கண்ணா
இதயத் தினிலே யமர்வாய் — கண்ணா
கணைவா யசுரர் தலைகள் — சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)2
எழுவாய் கடல்மீ தினிலே — எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே — கண்ணா,
துணையே, அமரர் தொழும்வா னவனே! (வருவாய்)
கண்ணன் துதி
காயிலே புளிப்பதென்னே?கண்ண பெருமானே! — நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே?கண்ண பெருமானே! — நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானே!
காற்றிலே குளிர்ந்ததென்னே?கண்ண பெருமானே! — நீ
கனலிலே சுடுவதென்னே?கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்பலென்னே?கண்ண பெருமானே! — நீ
திக்கிலே தெளிந்ததென்னே?கண்ண பெருமானே!2
ஏற்றி நின்னைத் தொழுவதென்னே?கண்ண பெருமானே! — நீ
எளியர் தம்மைக் காப்பதென்னே?கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்பதென்னே?கண்ண பெருமானே! — நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?கண்ண பெருமானே!3
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!கண்ண பெருமானே! — நீ
பொன்னடி போற்றி நின்றேன்,கண்ண பெருமானே!”