மலையைக் குடைந்து கைலாசநாதர் – நங்கநல்லூர் J K SIVAN
நான் எல்லோரா போனதில்லை. அதைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விருப்பம் ஏற்பட்டு சில விஷயங்களை தேடி அறிந்து கொண்டேன். அங்கே மலையை செதுக்கி ஒரு சிவன் கோவில் கட்டி இருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டு ராஷ்டிரகூட ராஜா கிருஷ்ணன் என்பவன் காலத்து கோவில். சிவனுக்கு எதிரே அழகான நந்தி தேவன். எல்லோரா குகைக் கோயில் ஒரு பழைய சிவாலயம். வடக்கே ஒளரங்காபாத் திலிருந்து 29 கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்கே சிவன் பெயர் கைலாசநாதர். இதில் என்ன விசேஷம் என்றால் இந்த கோவில் ஒரு மலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழகாக குடைந்து நிர்மாணிக்கப்பட்ட குடவரை கோவில்.
8 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட ராஜாக்கள் ராஷ்டிரகூடர்கள் எனும் வம்சத்தினர். சிவபக்தி மிக்கவர்களாக இருந்த ராஜாக்கள். அவர்களில் யாருக்கோ இந்த மலையை செதுக்கி கோவில் கட்ட தோன்றி இருக்கிறதே. அதெப்படியோ தெரியவில்லை, ராஷ்டிரகூடர்கள் கட்டிய இந்த மலைக்கோவிலில் உள்ள சிற்பங்கள், நமது பல்லவர்கள் கை வண்ணம் நிறைந்ததாக காண்கிறது. ராஷ்ட்ர கூடர்கள் தெற்கே பல்லவர்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆகையால் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று படி இந்த கோவிலை கட்ட பல நூறு ஆண்டுகள் ஆகி இருக்க கூடும் என்றும் அதனால் இந்த கோவில் பல மன்னர்களால் கட்டப் பட்டிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கோவிலை கட்ட கிட்டதட்ட 400,000 டன் எடையுள்ள பாறைகள் குடைந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டுமென கணக்கிடப்பட்டுள்ளது. 250அடி நீளமும் 150அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் முழுவதையும் தங்களுடைய தோளில் தாங்குவதைப்போல மிகப்பெரிய யானைச் சிற்பங்கள் அடிபீடத்தில் வரிசையாக இங்கு வடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோயிலில் கைலாசநாதர் மேற்கு பார்த்தபடி லிங்கமாக அருள் பாலிக்கிறார். கோயிலின் வடக்குப் புறத்தில் உள்ள சிற்பங்களில் ராவணன் தன்னுடைய 10 தலைகளில் 9 தலைகளை சிவனுக்கு காணிக்கையாக தருவது போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அந்த ஒன்பது தலைகளையும் மாலையாக கோர்த்து சிவன் அதை அணிந்திருப்பது போன்ற சிற்பங்களும் உள்ளன.
இது போன்ற எண்ணிலடங்கா பல சிற்பங்கள் இந்த கோவிலில் உள்ளன. இந்த கோவிலை வடிக்க நூற்றிற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆனதால் 3 வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த சிற்பிகள் இணைந்து இங்குள்ள சிலைகளையும் சிற்பங்களையும் வடித்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இவ்வளவு அற்பதங்களை கொண்டு இந்த கைலாசநாதர் கோவிலை கட்டுவதற்கு முன்பே தென் இந்தியாவில் உள்ள இரண்டு கைலாசநாதர் கோவில்களும் கட்டப்பட்டுவிட்டன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அதில் ஒன்று காஞ்சிபுரத்திலும் மற்றொன்று கர்நாடக மாநிலத்திலும் உள்ளது. இந்த கோவில்களை மாதிரியாய் வைத்து தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்த மலைக்கோவில் கைலாசநாதர் ஆலயமாக உருவெடுத்திருக்கிறது.