சப்த விடங்க க்ஷேத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN சுந்தர விடங்கர் . நாகப்பட்டினம்
முசுகுந்த சோழ சக்கரவர்த்தி திருவாரூரை தலைநகராக கொண்டு ஆண்டபோது , தேவாசுர யுத்தம் கடுமையாக நடந்தது. தேவர்களுக்கு உதவ முசுகுந்தன் படையோடு சென்றான். முசுகுந்தனின் வீரத்தால், யுத்த சாமர்த்யத்தால் இந்திரன் ஜெயித்தான். ”முசுகுந்தா, உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன்” என்றான் இந்திரன் ” நான் சிவபக்தன், இந்த்ரதேவா , நீ பூஜை செய்யும் சிவலிங்கத்தை எனக்கு கொடுத்தால் அதுவே பெரிய மகிழ்ச்சி அளிக்கும்” என்றான் சோழராஜா. இந்திரன் அதிர்ச்சியடைந்தான். அது அவன் தவறாமல் நித்ய பூஜை செய்யும் சிவலிங்கமாயிற்றே, அதை எப்படி சோழனிடம் தர முடியும். ஆனால் வாக்கு தந்து விட்டானே. என்ன செய்வது? .
தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம் ”என்னிடம் இருப்பது போல் ஒரு சிவலிங்கம் சீக்கிரம் செய்து கொடு ” என்றான் இந்திரன். முசுகுந்தனுக்கு அது டூப்ளிகேட் என்று தெரியாது. அவன் கனவில் சிவபெருமானே வந்து அது உண்மைச் சிலை இல்லை என்று சொல்லிவிட்டார். இந்திரனிடம் சென்ற முசுகுந்தன், கொடுத்த வாக்கை நிறைவேற்று என்று வாதாடினான். ழன். ஆறுமுறை ஏமாற்றிய பிறகு ஏழாம் முறை தன்னிடம் உள்ள சிவலிங்கத்தை இந்திரன் சோழராஜாவுக்கு கொடுத்தான். இந்திரன் பூஜை செய்த விக்ரஹத்தைத் திருவாரூரிலும் மற்ற ஆறு லிங்க மூர்த்திகளை சுற்றியுள்ள ஆறு ஊர்களிலும் முசுகுந்தன் பிரதிஷ்டை செய்தான்.
“டங்கம்” என்றால் பொன், வெள்ளி உலோகச் சிற்பங்களைச் செதுக்கும் உளி என்றும் பெயர். தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட இந்த லிங்க சொரூபங்கள் உளியால்(டங்கம்) செய்யப்படாமல் அவருடைய மனோசக்தியினால் செய்யப்பட்டவை என்று நம்பிக்கை உண்டு. இதனால் மேலே சொன்ன ஏழு லிங்கங்களும் சப்த விடங்க மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு தலத்திலும் இறைவனின் திருநடனம் பல்வேறு வகையில் பிரசித்தி பெற்றது. கீழ்க்கண்ட ஏழு மூர்த்திகளின் பெயர்களும் நடனங்களும் வெவ்வேறாக இருந்தாலும், பொதுவாக அனைத்து சுவாமிகளும் ‘தியாகராஜா’ என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.
திருவாரூர் – வீதி விடங்கர் – அஜபா நடனம் (சுவாச ரூபம்)
நாகப்பட்டினம் – சுந்தர விடங்கர் – பாராவார தரங்க நடனம் (கடல் அலை நடனம்)
திருக்காறாயில் – ஆதி விடங்கர் – குக்குட நடனம் (கோழி நடனம்)
திருக்குவளை – அவனிவிடங்கர் – பிருங்க நடனம் (வண்டு நடனம்)
திருவாய்மூர் – நீலவிடங்கர் – தாமரை நடனம்
திருநள்ளாறு – நாக விடங்கர் – உன்மத்த நடனம்
திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்சபாத நடன
நாகைக்காரோணம் என்கின்ற நாகப்பட்டினம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்கே அம்பாள் ஸ்ரீ நீலாயதாக்ஷி . சிவன் ஸ்ரீ காயாரோகணேஸ்வரர். அம்பாள் பெயரில் நீலாயதாக்ஷி அம்மன் கோவில் என்றுதான் நாகப்பட்டினத்தில் இந்த கோவில் அறியப்படுகிறது.
அம்பாள் சந்நிதியில் நந்தி சிலை அற்புதமாக அழகாக, கம்பீரமாக திருப்பி சிவனைப் பார்க்கிறது. ஒரு கண்ணால் அம்மாவையும் இன்னொரு கண்ணால் அப்பாவையும் பார்ப்பதால் இந்த நந்திகேஸ்வரனின் பெயர் *இரட்டைப் பார்வை நந்தி.நாகப்பட்டினம் ரொம்ப அற்புதமான க்ஷேத்ரம். என் மனதில் அடிக்கடி பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் ஸ்தலம்.