சப்த விடங்க க்ஷேத்திரம் 3 – நங்கநல்லூர் J K SIVANதிருநள்ளாறு
நளன் பூஜித்து சனியின் துன்பம் விலகியதால் நள்ளாறு எனப்படுகிறது. ஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது.
முசுகுந்தச் சக்கரவர்த்தி ஸ்தாபித்த சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்று. இங்கு விடங்க தியாகராஜருக்கு நகவிடங்கர் என பெயர். சிவன் ஆடிய நடனம் -உன்மத்த நடனம்).
சனிக்கிழமை, மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் பொங்கி வழிகிறார்கள். தங்க இடங்கள் இருக்கிறது. சனி தோஷம் நீங்கும் சிறப்புடைய தலம். தர்பாரண்யேஸ்வரரை வழிபட்ட பின்னரே சனிபகவான் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். போகமார்த்த பூண்முலையாள் என்ற சம்பந்தரின் தேவார பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபடுவோருக்கு சனி தோஷம் விலகும்.
நான் சென்ற அன்று பிரதோஷம். நந்திகேஸ்வரருக்கு அற்புத அபிஷேகம் அலங்காரம். சிவனுக்கு பிறகு தியாகேசனுக்கு மரகத லிங்க உருவில் அருகில் நின்று அபிஷேகம் பார்த்தேன். மரகத லிங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அபிஷேகம் பூஜை நேரம் மட்டும் வெளியே கொண்டுவரப்பட்டு உடனே திருமம்ப பாதுகாப்பு பெட்டகம் செல்கிறது. தரும புர ஆதீனம் செய்துவரும் எண்ணற்ற நற் காரியங்களில் இந்த ஆலய பரா மரிப்பும் ஒன்று. சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றும் சில தமிழ் வார்த்தைகள் படிக்க முடிகிறது. மற்றபடி முயற்சி வீண். இதையெல்லாம் யாராவது ஏற்கனவே தற்கால தமிழ் படுத்தி போற்றி பாதுகாத்து நகல் எடுத்து வைத்திருக்கிறார்களா என்று ஒருவரும் சொல்வதில்லையே, ஏன்? அக்கறை அவ்வளவு தானா? இருந்தால் கல்வெட்டு அருகே தற்கால தமிழில் அதன் மொழிபெயர்ப்பும் இருந்தால் எல்லோரும் புரிந்துகொள்ளலாமே . இல்லாவிட்டால் அங்கே கல்வெட்டு எதற்கு?
இங்கு வருபவர்கள் முக்கியமாக சனிபகவான் சன்னதிக்கே பரிகாரம் தேடி வருகிறார்கள்..
ஒரு சின்ன கதை. இது நளனைத் தெரியாதவர்களுக்கு. நிடத நாட்டு ராஜா நளன் சேதி நாட்டு ராஜகுமாரி தமயந்தியின் ஸ்வயம்வரத்துக்கு சென்றான். அவளை தேவர்களும் மணக்க விரும்பி வந்திருந்து அவர்கள் தோற்று நளன் மேல் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடி ஏழரை ஆண்டுகள் சனியின் பிடியில் நளன் அல்லல் படுகிறான். சனீஸ்வரன் பிடியில் சிக்கினால் அவ்வளவு தான் என்று தெரியுமல்லவா? நாடு, செல்வம், மனைவி, மக்களை இழந்து, இடுப்பில் துணியும் மிஞ்சாமல் கூட எல்லாம் இழந்து நளன் அவஸ்தைப் படுகிறான்.
ஒரு கட்டத்தில் திருநள்ளாறு வந்த நளன் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது.
‘எனக்கு துன்பம் தீர்த்தது போல் உன் பக்தர்களுக்கும் சனி கஷ்டங்கள் நீங்கவேண்டும் என்று வேண்டுகிறான். இங்கே கிழக்கு நோக்கி அமர்ந்து “சனீஸ்வரன்’ அவ்வாறே அவன் வேண்டுகோளை நிறைவேற்ற இன்றும் அருள் பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நள சரிதம் படித்தவர்களும் சனித் தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.
திருநள்ளார் ஸ்தலம் பேரளம் – காரைக்கால் ரயில் பாதையில் உள்ளது. காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலி ருந்து பேருந்து வசதி உள்ளது.