PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN                                                                

மனதும்  மாற்றமும்

‘மஹா பெரியவா  ஏதாவது இன்னிக்கு சொல்லுங்கோ.  நான் கேக்கணும். அதை நாலு பேருக்கு எழுதி அனுப்பணும்னு ஒரு ஆசை’.’சரிடா சொல்றேன் கேள். புதுசு இல்லை. ஏற்கனவே காது புளிக்க பல தடவை சொன்னதை தான் சொல்றேன்’.’உலகத்திலேயே  புரிந்து கொள்ள முடியாதது  எது? பல விதமான  பதில் வந்தாலும் ரொம்ப பொருத்தமானது  ‘மனிதமனம்’
 ‘மனித மனத்தை’ எப்படி புரிந்து கொள்வது, அறிந்து கொள்வது?
” மனம் ஒரு குரங்கு ‘  . ரொம்ப  ரொம்ப பொருத்தம் தான்.   ஒரு நிலையில் இல்லாமல் குரங்கு   கிளைக்கு கிளை தாவுகிறதைப்போல்  எதிலும் ஒரு கண  நேர விருப்பம், ஈடுபாடு,  உடனே  அதில் அலுப்பு, சலிப்பு, மீண்டும் இன்னொன்றின் மேல்.  இப்படி  மாறி மாறி செயல்படும் நமது மனது குரங்கைக் காட்டிலும் டேஞ்சரானது. படு மோசம். இதற்கு என்ன காரணம்? மனிதனுக்கு அடிக்கடி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுதல் வேண்டி இருக்கு.  அதை பக்தி வழியிலேயே  தந்தால் என்ன?கடவுளுடன் மன உறவில் ஈடுபடுவதற்காக  நமது பெரியவர்கள், முன்னோர்கள் ஏற்படுத்திய  வழிமுறையை  ஞாபகப்படுத்துகிறேன் கேள்.மாறுபாட்டில் ருசி  என்பது  மனித இயற்கை  –  சலிப்பையே, வெறுப்பையே,  விருப்பாக  மாற்ற என்ன வழி?  அதற்குத்தான்   பகவானையே  பல  ரூபங்களில் பல விதங்களில், முறைகளில் பார்ப்பது, தரிசிப்பது, அவனுக்கென்று பல   பண்டிகைகள், அதற்கு என்று தனித்தனியாக பல  பட்சணங்களோடு  வழிபடுவது என்று வைத்திருக்கிறது..  சாதாரண மநுஷயர்கள் மட்டுமல்ல, ரொம்ப பக்குவப்பட்டவர்களாக இருந்தாலும்  மநுஷ ஸ்வபாவம் எப்படியிருக்கிறது?
யாராக இருந்தாலுமே   ஒண்ணு மேலேயே எக்காலமும் முழு மனஸையும் ஈடுபடுத்துவது முடிவதில்லை.
எவ்வளவு தான்  நன்றாயிருந்தாலும், நல்லதாக இருந்தாலும், அது  ஒன்றிடமே முழு ஈடுபாட்டை ஸதா காலமும் வைக்க முடிவதில்லை. மாறுதல்  அவசியமாகிறது. இன்றைக்கு வீட்டில்  ஸாம்பார், ரஸம், கறி—நன்றாகத்தானிருக்கிறது. அத்ருப்திக்குக் கொஞ்சங்கூட இடமில்லை. ஆனால், நித்யம் (தினந்தோறும்) இதே   சமையல் என்றால்?  பிடிக்குமா? எல்லோரும் நீங்கள் சரி ஆஹா  அப்படியே என்பீர்களா?
கறி காய்களை, குழம்புத் தானை எல்லாம்  மாற்றி மாற்றி  உபயோகிக்க மனம் விரும்புகிறது. திடீர் என்று  ‘இது எதுவுமே வேண்டாம் இன்றைக்கு சித்ரான்னங்களாகச் சாப்பிடலாம்’ என்று தோன்றுகிறது.
அதே மாதிரி  ஒரு சங்கீத கச்சேரியிலே வித்வான் எத்தனை நன்றாகப் பாடினாலும், அதே பாட்டு, அதே ராகத்தை ஒவ்வொரு கச்சேரியிலும் பாடினால்  கேட்க  விருப்பமில்லை. அலுத்துப் போகிறது.
மொத்தத்தில் எதில் (எந்தத் துறையில்) போனாலும் இப்படித்தான் பல தினுஸாக,  மாற்றம்  வேண்டியிருக்கிறது.
எவ்வளவு தான் பிடித்தாலும்  முழு ஈடுபாடு இருந்தாலும்-  இன்றைக்குத் தயிர்வடை என்றால் சப்பு கொட்டிக்கொண்டு ஐந்து ஆறு என்று உள்ளே தள்ளினாலும், நாளைக்கு, நாளன்றைக்கு, நாலாம் நாள், அஞ்சாம் நாளும் தயிர் வடை தான் என்றால் , இன்றைக்குச் சப்புக் கொட்டினவர்களே அன்றைக்கு முகத்தைச் சுளிக்கிற மாதிரி-திரும்பத் திரும்ப அது ஒன்றேதான் என்று வரும்போது அதிலே ருசி, ஈடுபாடு குறைந்து  அலுப்பு தட்டி விடுகிறது.  இது மனித வாழ்க்கையில் சகஜம்.
இவ்வளவு சுற்றி வளைத்து சொல்வது  எதற்காக? நம்முடைய மதத்தில் அதற்காகத்தான்  இத்தனை ஸ்வாமி, விதவிதமான ரூபம், விதவிதமான அலங்காரம், விதவிதமான வாஹனம், அததற்கும் விதவிதமான பூஜா பத்ததி என்று வைத்திருக்கிறது.
கோயிலுக்குப் போகிறோம். பிள்ளையார் ஸந்நிதியில் நிற்கிறோம். அப்போதைக்கு ஒரு க்ஷணம், இரண்டு க்ஷணம் மனஸு குவிந்த மாதிரிதான் இருக்கிறது. அப்புறம் கையைக் , காலைச்  சொறிந்து கொள்கிறோம்.  அங்கே  இங்கே பார்க்கி றோம் மனஸு பிய்த்துக்கொண்டு கிளம்பி விடுகிறது!
மனஸை அப்படியே எந்தக் குப்பைத் தொட்டிக்கு வேண்டுமானாலும் ஓடட்டும் என்று விட்டு விடுவது நல்லதில்லையே.
மனசை அப்படி விட்டு விடாமல், நல்லதிலேயே, தெய்வ ஸம்பந்தமாகவே அந்த மனஸை இழுத்தால் தானே தேவலை? எவ்வளவு நல்லது நமக்கு.  ஆமாம் மனசை எப்படி இழுப்பது?
இந்த பாழும் மனஸுக்கு இந்த விக்னேஸ்வரமூர்த்தி, தொப்பையும் தொந்தியுமாக இத்தனை அழகாக உட்கார்ந்திருந்துங் கூட, அவரிடமே தொடர்ச்சியாக ஒட்டிக் கொண்டிருக்க முடியவில்லையே!’
பரவாயில்லையப்பா!’  என்று இங்கேதான் நம் ஸமயாசார புருஷர்கள் ஆறுதல் தர வருகிறார்கள்.
‘மனஸின் நேச்சர் அப்படித்தான் அப்பா!   அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திருத்தி நிலையாக ஒருமுகப் படுத்த முடியுமப்பா!  ‘சேஞ்ச்’  தெய்வ ஸம்பந்தமாகவுங்கூட  வேண்டும். அதையும் நம்முடைய அற்புத  ஹிந்து சமயம்  தருகிறதே!
 ஓஹோ, பிள்ளையாரிடம்  ஈடுபாடு குறைகிறதா,  அலுத்துக்கொள்ளாதே . அடுத்த சந்நிதிக்கு போ. அங்கே   சேஞ்சா’க ஸுப்ரஹ்மண்யர், அப்புறம் இன்னும் பல ‘சேஞ்ச்’கள் -அம்மன், ஸ்வாமி, தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை, நடராஜா, மநுஷ்ய ரூபத்தில் வந்த அறுபத்து மூவர் என்று எல்லாம் ஆங்காங்கே சேர்த்துத்தானே கோவில் என்று வைத்திருக்கிறோம். ஆகவே
ஒவ்வொரூ  தெய்வத்திடமும், சந்நிதியிலும்  ஒரு க்ஷணம், இரண்டு க்ஷணம் மனஸ் ஈடுபட்டுக் கும்பிட்டு விட்டுப் போயேன். மொத்தத்தில்  அதனால் ஒரு கணிசமான நாழி, நேரம்,  உன் மனசு தெய்வ ஸம்பந்தமாகவே ஈடுபட்டிருக்கும் இல்லையா?
நம்முடைய மதத்தின் பெரிய சிறப்பு  எது?  ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றேதான் என்று காட்டுவது. எந்த மதத்திலும் இல்லாத அத்வைத ரத்னம்  நம்மிடம் இருக்கிறது. எந்த  மதத்திலும் இல்லாத அளவுக்கு இத்தனை த்வைதமான ஆசார அநுஷ்டானங்களும், சாமிப்  பட்டாளமும் இருக்கிறதே!  மாறுபாடு, மாற்றத்தை வேண்டும் மனசே ஏன் இத்தனை தெய்வங்கள்? ஏன் ஒன்றுக்கொன்றுமுரண்பாடாக இருக்கிறது? என்று கேள்வி கெடுக்கிறது. அதுவும் ஒரு மனசின் மாற்றம் தானே!.
அத்வைதம் நம்முடைய பெரிய சிறப்புத்தான். ஆனால்  அதைவிடவும் சிறப்பாக எது தோன்றுகிறது?  இப்படி ஒன்றேயான அத்வைதத்தைச் சொன்ன மதத்திலேயே வித்யாஸம் வித்யாஸமாக இத்தனை வர்ணாச்ரம வ்யவஸ்தைகளும், இத்தனை பட்டாளமாக தெய்வங்களும் வைத்திருப்பதுதான்!
அத்வைதம் ஏக பரமாத்மா என்பது ஐடியல்.   அதே சமயம்  எதற்கு இத்தனை ஸ்வாமி பட்டாளம்? இத்தனை விதமான ஆசார வ்யவஸ்தைகள்?  என்பது ப்ராக்டிகல்.    ப்ராக்டிகலில் ஆரம்பித்து க்ரமேண (படிப்படியாக) முன்னேறினால்தான் ஐடியலுக்குப் போய்ச் சேர முடியும். இப்போதே ஐடியல் என்று யத்தனம் பண்ணினால் ஒன்று தோல்வியாக ஆகும், அல்லது, அதைவிடத் தப்பாக ஹிபாக்ரிஸியாக, போலி வேஷமாகத்தான் ஆகும்.  மாற்றங்கள் தேடும் மனசை திருப்த்தி படுத்தி மாற்றங்கள் காட்டி, கொடுத்து, அதை மாறாத  ஒன்றான ஆத்மாவோடு ஒன்று சேர்க்கத்தான் அத்வைதம் . இப்போது புரிகிறதா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *