அம்புலிமாமா – நங்கநல்லூர் J K SIVAN
அப்போது என் வயது 9-10. என் போன்ற சிறுவர்களுக்கு தமிழ் மட்டும் தான் படிக்க பேச எழுத தெரியும். ஆங்கிலத்தில் பாடத்தை மனப்பாடம் பண்ணி கேள்வி பதில் நெட்டுரு பண்ணி மார்க் வாங்குவோம். எங்களுக்கு பிடித்த தமிழ் பத்திரிகை அப்போது அம்புலிமாமா. ஆஹா என்ன ஒரு அற்புதமான புத்தகம். மாதாமாதம் அதற்காக ஆவலாக காத்திருப்போம். எங்களால் அந்த பத்திரிகையை வாங்க முடியாது. லைப்ரரியில் ஓடிப்போய் வந்துவிட்டதா என்று பார்ப்போம். என் வீட்டுக்கு சற்று தூரத்தில் சூளைமேட்டு (இப்போது zakkariya காலனி) அங்கே செல்வராஜ் என்ற நண்பன் இருந்தான். அவன் பெற்றோரை இழந்தவன். ஒரு சொந்தக்காரர் வீட்டில் அவனை காசில்லாமல் வளர்த்தார்கள். சகல வேலைகளும் அவன் செயது அங்கே வாழ்ந்து வந்தான். அவன் வீட்டில் கல்கண்டு அம்புலிமாமா வாங்குவார்கள். அவனை கெஞ்சி கூத்தாடி அம்புலிமாமா வாங்கி படிப்பேன்.
1948 ஆகஸ்ட் மாத அம்புலிமாமா பச்சை கலர் அட்டையில் நேருபடத்தோடு வந்தது. விலை ஆறு அணா. அட்டையை திருப்பினால் சுயராஜ்ய தேர் உத்சவம். காந்தி தான் கடவுள். ரெண்டுபக்கம் மூவர்ண கோடி படம். நிறைய தலைகள். டாடா கம்பெனியின் 501 பார் சோப்பு ஒரு பக்க விளம்பரம் . 50 பக்கம் புத்தகம். ஒரு பக்கத்தில் பாதி உள்ளடக்கம் இன்னொரு பாதி திலகர் படத்தோடு கல்பூர வில்லை விளம்பரம். ஜேம்ஸ் ‘போமெட்’ ஸ்னோ. pomade விளம்பரம். டோங்க்ரே DONGRE பாலாம்ருதம் குழந்தைகளுக்கு டானிக். இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா இதெல்லாம்? மதராஸ் கைத்தறி நெசவாளர் சங்க வேஷ்டி துண்டு புடவை விளம்பரம்.
அப்புறம்தான் எங்கள் வேட்டை ஆரம்பம். ‘புத்தி கெட்ட புலி கதை, சீர்திருத்தம், தவளை ராஜன்,நல்ல தீர்ப்பு, மூன்று படங்கள், பெரிய துணை, திருட்டு சன்யாசி, கர்ணம் முத்துசாமி கதைகள் படிக்க தெவிட்டாதவையாக இருந்தது.
‘ வர்த்தமானர் விதேச யாத்திரை’ என்ற சுவாரஸ்யமான கதை அப்போது கல்லிவர் ட்ராவல் GULLIVER’S TRAVEL கதை என்று தெரியாமலே சுகமாக படித்தேன். ‘பழிக்கு பழி பாட்டு’ அப்போது புரியவில்லை என்பதால் படிக்கவில்லை. ஆஹா அப்போது ரொம்ப ரொம்ப பிடித்த விறுவிறுப்பான கதை ஒவ்வொருமாதமும் ஆவலோடு எதிர்பார்த்த வேதாளம் சொல்லும் விக்ரமாதித்தன் கதைகள். எத்தனை முறை படித்திருப்பேனென்று சொல்லவே முடியாது.
பகுத்தறிவு போட்டி என்று ஒரு பக்கம் கட்டத்தில் சரியான எழுத்தை எழுதி மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் வலமிருந்து இடம் என்று கொடுத்துள்ள வாக்யத் துக்கு பொருத்தமான வார்த்தை கண்டுபிடிக்க ரொம்ப தவித்தேன். இது தமிழில் CROSSWORD . உள்ளே இருந்து எப்படி வெளியே வருவது என்று கருப்பு வெள்ளை வளைந்து வளைந்து பாதைகள் இருக்கும் அதில் பென்சிலால் வழி கண்டுபிடித்துக்கொண்டே வெளியே வந்து முயலைத் தொடவேண்டும். இது ரொம்ப பிடிக்கும். இப்போதுள்ள PUZZLE TYPE அதெல்லாம் அப்போது.
அம்புலிமாமா ஒவ்வொரு பக்கத்திலும் அற்புதமாக தத்ரூப சித்திரங்கள் சித்ரா, சங்கர் போன்றவர்கள் வரைந்து கண்ணுக்கு விருந்து கொடுத்தார்கள். இப்போது அவர்களுக்கு என்னால் நன்றி உணர்வோடு கண்ணீர் கலந்த ஒரு பெரிய மனப்பூர்வ நமஸ்காரம் தான் செலுத்த முடிகிறது.
எனது 84+ வருஷ வாழ்வில் அற்புதமான ஆனந்தமான சில நேரத்தை கொடுத்தவர்களில் அம்புலிமாமா பத்திரிகை சார்ந்த அனைவரும் மறக்க முடியாதவர்கள்.