பக்தியின் சக்தி – நங்கநல்லூர் J K SIVAN
அப்பர் எனும் திருநாவுக்கரசரும் ஞான சம்பந்தரும் சேர்நது நடந்து ஸ்ரீ வாஞ்சியம் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருமறைக்காட்டை (வேதாரண்யம்) அடைந்தார்கள். பழைய காலத்து பெரிய ஆலயம். அதைப் ப்ரதக்ஷிணம் செய்து விட்டு வாசலுக்கு வந்தார்கள். வெகுநாட்களாக ஆலயத்தின் பெரிய வாசல் மரக்கதவுகள் திறக்கப்படாமலேயே. அசைக்க முடியாதபடி இருந்தது. ஆகவே ஊர் மக்கள் வேறொரு சிறிய கதவின் வழியே உள்ளே சென்று வழிபட்டு வந்ததை அறிந்தார்கள்.
”அப்பரே, மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறதே, இவ்வளவு பெரிய உயர்ந்த ஸ்தலத்தில் வாசல் வழியாக உள்ளே சென்று தரிசிக்க வழி அடைத் திருக்கிறதே. நாம் அந்த நேர் முக பழைய பெரிய வாயில் வழியே உள்ளே செல்வோம். மறைக்காட்டுறையும் பெருமானை வழிபட வேண்டும். நீங்கள் தான் இக்கதவு திறக்கும்படி ஒரு பதிகம் பாடிய ருள வேண்டும். என்கிறார் சம்பந்தர். அப்பர் சிரம் மேல் கரம் குவித்து பாடுகிறார்.
அப்பரின் தமிழைக் கேட்பதில் விருப்பம் கொண்டு மகிழ்ந்து அவரை திருநாவுக்கரசரே என்று திருவதிகை வீரட்டானேஸ் வரன் பட்டமளித்தது நினைவிருக்கிறதா? அதுபோல் வேதாரண்யத்திலும் ஈஸ்வரன் அவர் செந்தமிழ்ச் சுவையைத் துய்க்க விரும்பிக் கதவை லேசில் திறக்க வைக்க வில்லை.முதல் பாடல்:
‘பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலம் செய்ம் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காண கதவினைத்
திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே”
வேதாரண்யத்தில் அம்பாள் பெயர் “வீணாவாத விதூஷணி” அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் ”யாழைப் பழித்த மொழியாள் ” என்று தமிழில் நாமம்.
பதிகத்தில் கடைசி பாடல்:
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம்-ஒன்று இலீர், எம்பெருமானிரே;
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ;
சரக்க இக்-கதவம் திறப்பிம்மினே
‘ராவணனை வதம் செய்த பெருமானே திரு மறைக்காடனே, எங்கள் மேல் இரக்கம் சிறிதும் இல்லையோ’ என்று பாடினதும் ”சரி திறப்போம்” என்று ஈஸ்வரன் வேதாரண்ய கோவிலின் பெருங் கதவுகளை தானே தாள் திறக்க வைத்தான். இருவரும் உள்ளே சென்று சிவனை தொழுதார்கள். நிறைய பதிகங்கள் பாடினார்கள்.
”ஞானசம்பந்தா நீ இந்த பெருங்கதவுகள் மீண்டும் மூடிக் கொள்ள ஒரு பதிகம் பாடு ” என்கிறார் அப்பர். குருநாதா அப்படியே செயகிறேன் என்று சம்பந்தர் ஒரு பாடல் பாடுகிறார்:
”சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே”
‘ மனதுக்கும் கண்ணுக்கும் இனிய பூஞ்சோலைகள் நிறைந்த வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் மஹாதேவா, உன் திருக்கோயில் கதவுகள் முன்பு இருந்தபடியே மீண்டும் சாற்றிக்கொண்டு கதவு மூடிக்கொள்ளட்டும்” என்று சம்பந்தர் பாடியதும் அந்த ஆலயப் பெருங்கதவுகள் பலத்த க்ரீச் என்ற சப்தத்தோடு மீண்டும் மூடிக்கொண்டன.