OPPILI – J K SIVAN

தன்னொப்பர் இல்லப்பன் ஒப்பிலி எனும் உப்பிலி. – நங்கநல்லூர் J K SIVAN

இலையில் பரிமாறும்போது, சாம்பார், ரசம், கூட்டு, கறியில் கொஞ்சம் உப்பு கம்மியாக இருந்தாலோ, கூட இருந்தாலோ குப்புசாமி அய்யர் ருத்ரனாக மாறி விடுவார். தட்டு டம்பளர் மாமி தலைக்கு மேல் பௌன்ஸர் BOUNCER ஆக பறக்கும். வாயில் காளிதாசன் போல் வார்த்தைகள் வெள்ளமாக வரும். ஆனால் அவ்வளவும் கோபமான திட்டு, வசவு தான். ராஜம் மாமி நடுங்கிவிடுவாள். கதவிடுக்கு தான் அடைக்கலம்.

‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பது ஒரு காலத்து பழமொழி. ‘உப்பு போட்டு தானே சாப்பிடறே. சொரணை யில்லையா?’ என்பது பழைய வாக்கியம். இப்போது எல்லா டாக்டர்களும் காசு வாங்கிக்கொண்டு உப்பைக் குறை என்கிறார்கள் சர்க்கரை போல் உப்பும் கூடாது என்றால் என்ன வாழ்க்கை இது? சே. அல்வாவில் கூட ஒரு கல் உப்பு இருந்தால் தான் தூக்கலாக இருக்கும்.
நம்மை விடுங்கள். ஸ்வாமிக்கே கூட உப்பு கிடையாது ஒரு கோவிலில். ரெண்டாயிரம் வருஷ கோவில். கும்பகோணம் போகும்போதெல்லாம் உப்பிலியப்பனை பார்க்காமல் வந்ததே இல்லை. அவர் உப்பிலியப்பனா, ஒப்பிலியப்பனா என்று தான் இப்போது என் யோசனை.
இந்த க்ஷேத்ரத்தின் முற்கால பெயர் விஷ்ணுக்ரஹம் (தமிழில் விண்ணகரம்)பெருமாள் ஒப்பிலியப்பன், திருவிண் ணகரப்பன் என்று ஆஜானுபாகுவாக நிற்பவர். தாயார் பூமா தேவி மேலே சொன்ன ராஜம் மாமி மாதிரி பொறுமை யானவள். உப்பிலியப்பன் கோவில் இருக்கும் முற்கால திரு விண்ணகரம் தான் இப்போது கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம். அழகிய ஒரு புஷ்கரணி.அதற்கு பெயர் அஹோராத்ர புஷ்கரணி . முக்கியமான வைணவ 108 திவ்ய தேசங்களில் விண்ணகரமும் ஒன்று.
பூமாதேவிக்கு தானும் மஹா விஷ்ணுவின் மார்பில் மஹா லட்சுமி போல் வாசம் பண்ண ஆசை. பெருமாளை வேண்டி னாள்.
”பூலோகத்தில் மகரிஷி ஒருவருக்கு துளசி (திருத்துழாய் )என்கிற பெயரில் மகளாக நீ ஒரு சமயத்தில் வளர்வாய். அப்போது என் மார்பில் உனக்கும் இடம் உண்டு” என்றார் பெருமாள்.
மார்கண்டேய மகரிஷி ஒரு நாள் துளசி வனத்தில் மஹாலக்ஷ்மியின் அம்சங்களுடன் ஒரு குழந்தை இருப்பதை கண்டு வியந்து அதற்கு துளசி என்று பெயர் சூட்டி வளர்த்தார். கல்யாண வயசு வந்தபோது ஒரு பிராமணர் மார்கண்டேயரிடம் வந்து ‘உமது மகள் துளசியை எனக்கு விவாஹம் பண்ணி வையுங்கள்’ என்று கேட்டார்.
”ஆஹா ப்ராமணரே ஆனால், என் பெண் ரொம்ப சின்னக் குட்டி. உணவில் சரியான பதத்தில் உப்பு சேர்த்து சமைக்கும் பக்குவம் கூட அறியாதவள் ஆயிற்றே, அவளை எப்படி உங்களுக்கு மணமுடித்து தருவது?” என்று பதில் சொன்னார் மார்க்கண்டேயர்.
”சுவாமி அதைப்பற்றி நீர் கவலைப்படாதேயும். நான் துளசி பண்ணும் உப்பில்லாத உணவை அம்ருதமாக கருதி சாப்பிடத் தயார்” என்று பதில் சொன்னார் பிராமணர்.
மார்கண்டேயருக்கு வந்த பிராமணர் பெருமாள் என்று தவ மகிமையால் தெரிந்துவிட்டது. துளசிக்கும் பெருமாளுக்கும் டும் டும் டும் நடந்தது. அன்றிலிருந்து இன்றுவரை பெருமாளுக்கு இந்த கோவிலில் உப்பில்லா சாப்பாடு நைவேத்தியம். இப்பேர்ப்பட்ட ‘தன்னொப்பர் இல்லப்பன் ஒப்பிலியப்பனாகவும் உப்பிலி அப்பனாகவும் மாறிவிட்டான். பூமாதேவி, தான் விரும்பியபடி பெருமாளின் மார்பில் துளசிமாலையாக இடம் பெற்றாள். இப்போது புரிகிறதா ஏன் பெருமாள் கோவிலுக்கு துளசி எடுத்துக்கொண்டு செல்கிறோம் என்று?
நம்மாழ்வார் ‘ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர் என மங்களாசாசனம் செய்துள்ள ஆலயம். பெருமாள் திருவிண்ணகரப்பன், பொன்னப்பன், மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் ஆகிய ஐந்து கோலங்களில் காட்சி தந்தருள்பவர்.
இங்கே கோயிலில் அனைத்து உணவுகளிலும் உப்பு கிடையகாது. அருமையான ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்து நிற்கிறது. தாயாருக்கு பூமிதேவி, பூதேவி, பூமிநாச்சியார், தரணிதேவி, வசுந்தரை என்ற திருநாமங்கள்.
பூமாதேவி பெருமாளை துளசியாக ஐப்பசி மாதத்தில் திருவோணத்தன்று மணந்து கொண்டதால் வருஷா வருஷம் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் 12 நாள் கோலாகலமான உத்ஸவம் : ஸ்ரீவைகானஸ ஆகம முறைப்படி பூஜைகளும், விசேஷ உற்சவங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொருநாளும் ஆறுகால பூஜை :
விஸ்வரூப பூஜை05:40 AM to 06:00 AM
திருவானந்தல் பூஜை07:00 AM to 07:30 AM
திருவாராதனம் பூஜை (மலர்)08:00 AM to 08:15 AM
உச்சிக்கால பூஜை12:00 PM to 12:15 PM
சாயரட்சை பூஜை07:30 PM to 08:00 PM
திருவாராதனம் (இரவு பூஜை)08:00 PM to 08:15 PM
அர்த்தஜாம பூஜை09:00 PM to 09:15 PM புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம்.
பரகேசரி ராஜராஜன், ராஜேந்திர சோழன் கால கோவில்.
பொன்னியின் செல்வன் கதையில் அழகாக இந்த கோவில் பற்றி கல்கி எழுதியிருக்கிறார்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *