நான் ஒரு விளையாட்டு பொம்மை – நங்கநல்லூர் J K SIVAN
கண்ணனின் பரிசு
பாரதியார் கண்ணனை தாயாக பார்க்கிறார்.எவ்வளவு சந்தோஷத்தோடு கிருஷ்ணா, என் கிருஷ்ணம்மா எனும் தாயே, நீ சொல்லும் கதைகளைக் கேட்டு மகிழ்வேன் தெரியுமா?
விந்தை விந்தை யாக எனக்கே – பல விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப்பாள் என் கண்ணன் எனும் தாய். எனக்கு எத்தனை பொம்மைகள் தருவாள், காட்டுவாள் தெரியுமா, சொல்கிறேன் கேளுங்கள்.
சந்திரனென் றொரு பொம்மை – அதில் தண்ணமுதம் போல பால் நிலவின் ஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையாக மேகம் என்று ஒரு பொம்மை, – பல வர்ணங்கள் கொண்டது அந்த ”மேக”, ‘மெகா’ பொம்மை. கருப்பு, சிவப்பு,வெள்ளை,ஆரஞ்சு நீல மேகங்கள். வித வித உருவங்களில். ”வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்” சுகமான மழையும் தரும் அது. நீரின்றி அமையாது உலகம் அல்லவா? இன்னொரு பொம்மை அதற்குப் பெயர் சூரியன்.”முந்த ஒரு சூரியனுண்டு – அதன் முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே.” அப்பப்பா ” அந்த சூரிய பொம்மையின் ஒளி என்னால் எப்படி வர்ணிக்க முடியும்.?
கண்ணன் எனும் என் தாய் எனக்கு விளையாட்டு காட்டி மகிழ்விக்கும் மற்றும் சில பொம்மைகளின் பெயர் நக்ஷத்ரங்கள்.
”வானத்து மீன்களுண்டு – சிறு மணிகளைப் போல் மின்னி நிறைந்திருக்கும். எவ்வளவு ராத்திரிகள் நான் அவற்றை முழுவதும் கண்டு எண்ணி முடியாது ஏமாந்திருக்கிறேன். ”நான தைக் கணக்கிடவே – மனம் நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
மற்றும் சில பொம்மைகளை என் தாய் கிருஷ்ணம்மா எனக்கு இந்த உலகில் விட்டு வைத்திருக்கிறாள். அவற்றைக் காணும்போதெல்லாம் என் மனம் என்ன வியப்படைந்திருக்கிறது. மலர்ச்சி மனதில் பரவி இருக்கிறது. அவைகள் மலைகள். காடுகள், எங்குமே நகராது அங்கேயே எப்போதும் இருந்து மகிழ்த்துபவை. ”கானத்து மலைக ளுண்டு – எந்தக் காலமு மோரிடம்விட்டு நகர்வதில்லை;
உலகத்திலேயே சிறந்த மொழி மௌனம். அது விளக்குவது போல் எந்த மொழியிலும் கற்க முடியாதே. இதையும் பொம்மையாகத்தான் என் தாய் நீ, கண்ணா, எமக்கருளியிருக்கிறாய். ” மோனத்தி லேயிருக்கும் – ஒரு மொழியுலை யாது விளை யாடவருங் காண்”
குழந்தைகள் மகிழ்வது பொம்மைகளில் தானே. நான் இந்த உலகில் உன் குழந்தை. நான் சொன்ன பொம்மைகளைத் தவிர இன்னும் சில நீ எனக்கு அருமையாக தந்திருக்கிறாய் என் கண்ணம்மா. அவை நதிகள். ”நல்ல நல்ல நதிகளுண்டு – அவை நாடெங்கும் ஓடி விளை யாடி வருங்காண்; மெல்ல மெல்லப் போயவை தாம்” —அவை மைல் மைலாக நீளமாக ஓடி கடலில் விழும் கடல் இருக்கிறதே அது ஒரு பெரிய அழகிய பொம்மை.— ” விழும் விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்; எல்லையதிற் காணுவ தில்லை; – அலை எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்; ஒ வென்று பெரும் சப்தமுடன் ஒலிக்கும் அலைகள் ஓயாமல் கடலில் எழும்பி கரை நோக்கி ஓடி வந்து மீண்டும் கடலை நாடி ஓடும் அழகை, அந்த இன்னிசையை, என் சொல்வேன்.
இந்த கடல் பொம்மையை பாரதியார் திருவல்லிக்கேணியில் மரினா என்கிற கடற்கரையில் எத்தனை மாலைகள், இரவுகள், காலைவேளைகளில் கண்டு மகிழ்ந்திருக்கிறார். ”ஒல்லெனுமப் பாட்டினிலே – அம்மை ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண்.” கடலின் ஒ வென்ற பெரும் சப்தம் அவர் காதில் ப்ரண வஸ்வரூபமாக ”ஓம் ஓம் ஓம் ” என்று விழுந்ததாம். மனம் ஆனந்தத்தில் திளைத்ததாம்.”
குழந்தைகளை எதற்கு பார்க் என்று பசுஞ் சோலைகளுக்கு கூட்டி செல்கிறோம்?. குழந்தைகள் கண்டு களிக்கின்றனரே. பாரதியாரும் இந்த உலகில் கண்ணன் அருளால் தோன்றி மகிழ்விக்கும் சோலைகள் தோட்டங்கள் தோப்புகள் காய் கனி வர்கங்கள், புஷ்பங்கள் பூத்துக் குலுங்குவது எல்லாம் கண்டு மகிழ்கிறார். கை கூப்பி ” கண்ணா, என் தாயே என்னே உன் கருணை” என வணங்குகிறார். ”காவினங் கள் – அங்கு சூழ்தரும் பலநிற மணிமலர் கள் சாலவும் இனியன வாய் – அங்கு தருக்களில் தூங்கிடும் கனிவகை கள் ஞாலமுற்றிலும் நிறைந் தே – மிக நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
குழந்தைகள் கேட்குமே ”இந்த பொம்மை எல்லாம் எனக்கேவா ?” என்று, அது போல் இது எல்லாம் எனக்கே தந்திருக்கிறாயா கண்ணா என் தாயே என்று மகிழ்கிறார். கோலமுஞ் சுவையு முற – அவள் கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். ”
தின்றிடப் பண்டங்களும் – செவி தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்களும், ஒன்றுறப் பழகுதற்கே – அறிவுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்; கொன்றிடு மெனஇனி தாய் – இன்பக் கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய், நன்றியல் காதலுக் கே – இந்த நாரியர் தமையெனைச் சூழவைத் தாள்.” நடுவில் ஒரு சந்தேகம் பாரதிக்கு. ஏண்டியம்மா, என் கண்ணம்மா இத்தனை அழகாக விளையாட்டு பொம்மைகள் எனக்கு கொடுத்தவளே, எனக்கு காதல் உணர்வைக் கொடுக்க என் புத்தியை மயக்க அழகழகாக எதற்கு இந்த பெண்களைப் படைத்தாய்? என்னை ஆட்டிவைத்து நீ பார்த்து மகிழவா?
சாவி கொடுத்தால் ஓடும் கார், பட பட வென்று அடித்துக்கொண்டு நகரும் டமாரம், மணியடிக்கும் குரங்கு பொம்மை, தலையாட்டும் கரடி பொம்மை அடடா எத்தனை பொம்மைகள் நம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்கிறோம். என் தாய் கண்ணம்மா என்னை மகிழ்விக்க கலர் கலராய் எத்தனை வண்ண வண்ணப் பறவைகளை, சிறிதும் பெரிதுமாகவும், வித வித நிற உருவம் கொண்ட மிருகங்களையும் படைத்திருக்கிறாள். zoo சென்று மகிழாத குழந்தை உண்டா? வர்ண ஜாலம் மட்டுமில்லை, அந்த பறவைகள் மிருகங்களின் ஒலியும் நம்மை மகிழ்விக்கிறதே. ”இறகுடைப் பறவைக ளும் – நிலந் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள் அறைகடல் நிறைந்திட வே – எண்ணில் அமைத்திடற் கரியபல் வகைப்பட வே ”.
இதெல்லாம் தரையில் தோன்றி மகிழ்விப்பது ஒரு புறம் இருக்கட்டும். தண்ணீரில் தான் எத்தனை வகை உயிர்கள் படைத்து என் பொம்மையாக என்னை மகிழ்விக்கிறாய் கண்ணம்மா. எண்ணிச் சொல்ல முடியுமா, மீன் வகைகளை, சுராவை, ஆமைகள், திமிங்கிலங்கள், நீர் யானைகள், அம்மம்மா, போதுமடி தாயே என்னால் சொல்லி மாளவில்லை.
”சுறவுகள் மீன்வகை கள் – எனத் தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்; நிறைவுற இன்பம்வைத் தாள்; – அதை நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. ”
குழந்தைகளுக்கு பெரிய எழுத்தில் பொம்மை போட்ட கதைப் புத்தகங்கள். ஒவ்வொரு பக்கமும் கனத்த அட்டையோடு மழ மழவென்று வண்ணத்தோடு இருக்குமே ஆசையாக சிறுவயதில் நண்பர்கள் வீட்டில் சென்றுதான் பார்த்திருக் கிறேன். என் வீட்டில் அதெல்லாம் ஏது? இவையெல்லாம் குழந்தைக்கு கல்வியறிவு ஞானம் ஊட்டத்தானே. எனக்கும் இந்த உலகில் எத்தனை எத்தனை ”சாத்திரம் கோடி வைத்தாள்; – அவை தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்; ஜோக் புத்தகம் போல ”வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே கோத்தபொய் வேதங்களும் – மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும், மூத்தவர் பொய்ந்நடை யும் – இள மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்;”.
நீ தராதது ஒன்றுமே இல்லையடி என் தாயே. கிருஷ்ணம்மா. ”வேண்டிய கொடுத்திடு வாள்; – அவை விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்; ஆண்டருள் புரிந்திடு வாள்;
எப்படி அருச்சுனனைக் கண்ணும் கருத்துமாக கவனித்து மகிழ வைத்தாயோ அது போல் கிருஷ்ணம்மா எனக்கு வேண்டியதையெல்லாம் பார்த்து பார்த்து அளித்திருக்கிறாய் இந்த மா பெரும் பூமியில், ஆகாயத்தில், எங்கு நோக்கினும் அங்கே ”அண்ணன் அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்; யாண்டுமெக் காலத்தி னும் – அவள் இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்; நீண்டதொர் புகழ்வாழ் வும் – பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள்”
இவ்வளவும் நீ எனக்குத் தந்திருக்கிராயே என் கிருஷ்ணம்மா, நான் உனக்கு என்ன கைம்மாறு செய்வேன். ஒன்றுமே செய்யப்போவதில்லை, பேசாமல் இரு கை கூப்பி உன்னை என் மனதில் நிறைத்து ”ஹரி ஹரி ஹரி என்று சுருக்கமாக உன் பெயரை நினைப்பேன், பாடுவேன், பேசுவேன், கேட்பேன். அம்புட்டு தான்.