FATHER’S LOVE – J K SIVAN

ஒரு  எண்ணச்சுழல்  –   நங்கநல்லூர் J K  SIVAN

பகவானுக்கு   நாம்  எல்லோரும்  குழந்தைகள். எல்லோரும் சமம். எல்லோருக்கும்  ஒரே அளவு மூளை, இதயம்  ரத்தக் குழாய்கள், எலும்புகள், தோல், முடி எல்லாம் கொடுத்து தான் பூமிக்கு அனுப்புகிறான்.நாம் தான் சகல வித்தியாசங்களையும் நமக்குள் உண்டாக்கிக் கொள்கிறோம்.  கஷ்டங்கள் துக்கங்கள், துன்பங்கள் அனுபவிப்ப  தெல்லாம் நம்முடைய  ஸ்ரிஷ்டியே தவிர  பகவானுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் ஒரே சீராகத்தான்  போய்க்கொண்டிருக்கிறது.  அவரவர்  மனம் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைத்துக் கொள்கிறோம்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ரொம்பவும் உன்னதமானவர்கள் அவனது தாயும் தந்தையும் தான். அம்மா  அற்புதமான தெய்வம்.   என்றும் தேவையானவள்.
 தந்தை ஒரு தியாகி,  அதிகம் உணர்ச்சியை வெளிக்காட்டாத  உழைப்பாளி.  நம்மைப் பற்றி நிறைய கனவு காண்பவர். அவரைப் பற்றி மட்டும் ஒரு கற்பனை இப்போது.
நாலு வயதில் நமக்கு அப்பா தான் உலகிலேயே  மிகச்சிறந்த மனிதன்.”வேறு யாரும் எங்கப்பா  மாதிரி இருக்கவே  முடியாது. அவருக்கு இணை அவரே தான்.”ஒன்றாவது ரெண்டாவது படிக்கும்போது :  ” நமது அப்பாவுக்கு எப்படி இத்தனை பேரைத்  தெரிகிறது. ரோட்டில் நிறைய பேரோடு பேசுகிறாரே” என்ற ஆச்சர்யம் மேலிடுகிறது.ஐந்தாவது ஆறாவது படிக்கும்போது தான் அப்பாவைப் பற்றி ஒரு அபிப்ராயம் –” ஏன் அப்பா இப்படி எதற்கெடுத்தாலும் கோபிக்கிறார்?. பயமா இருக்கு”ஹைஸ்கூலில்  ஆறாவது ஏழாவது படிக்கும்போது:”இந்த அப்பா நாம் சின்ன குழந்தையாக இருந்தபோது எவ்வளவு ஆசையாக பாசமாக நம் மேல்  இருந்தார்.  இப்போது நம்மை கண்காணிக்கிறார். நடவடிக்கைகளை கவனித்து அவ்வப்போது எதற்கெல்லாமோ குறுக்கிடுகிறார். அப்படிச் செய் இப்படிச் செய் என்று அதிகாரம்  வேறு. வள்  வள்ளென்று விழுகிறாரே”
அடுத்த  சில மாதங்களில் பள்ளிப்படிப்பு முடிந்து விடும்  சமயம்: ” இந்த அப்பாவுக்கு ஒண்ணுமே  தெரியலை. எல்லாம் தெரிந்த  மாதிரி நினைத்துக் கொள்கிறார்”  என்று அவரை எடைபோடும் வயது.
காலேஜ்  சேர்ந்த  பிறகு :” நமக்குன்னு ஒரு அப்பா வந்து வாய்ச்சாரே…சே.. இந்த  அப்பா  ஒரு லூஸ்.  பைத்தியம்.  ஏன்  இப்படி விவரம் தெரியாம பிஹேவ் பன்றார். என் பிரெண்ட்ஸ் எல்லாம் சிரிக்கிறாங்க.” காலேஜ் படிப்பு முடியப்போகிறது  வேலை தேடிக்கொண்டிரும் சமயம்:” இந்த அப்பாவை  ஏன் நம்மால்   சகிக்க முடியவில்லை.  ஏம்மா, நீ எப்படி இந்த  ஆளோடு இத்தனை வருஷம் குப்பை கொட்டினாய்?”
வேலை கிடைத்து  கல்யாணம் பண்ண ஏற்பாடுகள் பண்ண  அம்மா துடிக்கிறாள். அப்பா அவனுக்கு இன்னமும் பொறுப்பில்லை,கழுதை, சகவாசம் சரியில்லே, ரெண்டு வருஷம் போகட்டும் என்று தடுக்கிறார்.”நாலு போடு போடணும் அவனை”  என்கிறாரே  இங்கிதம் தெரியாத மனுஷன்.  எப்போது பார்த்தாலும் ஏன்   என்னை எதற்கெடுத்தாலும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்”.
கல்யாணம் ஆகி  மனைவி வந்துவிட்டாள்.  ஒரு ஆண்  குழந்தை  ஐந்தாறு வயது. ”அடே யப்பா  என் முகன் சுப்ரமண்யனை  சமாளிப்பது உலகிலேயே ரொம்ப ரொம்ப கஷ்டமான காரியம்.  எப்படி தான் அப்பா எங்களையெல்லாம் சின்ன வயதில் சமாளித்தாரோ!  என்  மகனுக்கு என்னிடம் பயமே இல்லையே.  நாங்கள் எல்லோரும் அப்பா என்றால் எவ்வளவு பயப்பட்டோம் சின்ன வயதில்.”
” நம்ம  பையன்  மேல் பள்ளிக்கூடத்திலிருந்து அடிக்கடி புகார்.  க்ளாஸ் கட்  பண்றானாமே.  மார்க் ரொம்ப குறைச்சு தான் வாங்கறான்.   சே,   எங்கப்பா எப்படி எல்லாம் எங்களை கண்ணும் கருத்துமாய்  ஒழுக்கத் தோடு வாத்யார்களிடம் மரியாதையாக இருக்கும்படி வளர்த்தார். நானும் இருக்கிறேனே!”

காதோரம்  நரைத்து விட்டது. முன் வழுக்கை ஆரம்பமாகிறது.  ”சே  இந்த சுப்பிரமணியன் எவ்வளவு என்னை படுத்துகிறான். செல்லம் கொடுத்து குட்டிச்சுவராகி விட்டானே.   எத்தனை சுகம்  வசதி எல்லாம் நான் அவனுக்காக கடன் வாங்கி அளிக்கிறேன். பொறுப்பில்லாத பயல். பாவம்  நம்ப  அப்பா  எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையே நம்பளை ஒரு கவலையும் இல்லாமல் வளர்த்தார்.  நாங்கள்  நாலு பேர் சகோதரர்கள். ஒரு சகோதரி. யாருக்கும் ஒரு குறைவுமில்லாமல்  வளர்த்தார்.  அனால் எனக்கோ  ஒரே ஒரு பயல்.  தத்தாரி . அவனை  என்னால் சரியாக வளர்க்க  முடியாமல் போய் விட்டதே!”
அடுத்த மாசம் வேலையிலிருந்து ஒய்வு. ”ஏதாவது வேறு வேலை தேடவேண்டும் இப்போதே.  இந்த பயல் சம்பளத்தில் வாழ்வது குதிரைக் கொம்பு.  அவன் மனைவி ராக்ஷஸி. சுப்பிரமணியன் டெல்லியில் இருக்கிறான்.   வருவதுமில்லை. அடிக்கடி பேசுவதுமில்லை.   என் அப்பா சாதாரண  முனிசிபாலிட்டி  குமாஸ்தாவாக  இருந்தாலும் எவ்வளவு பாசமாக எங்கள் மேல்  இருப்பார்.    விளையாடுவார். என் அப்பா ஒரு பெஸ்ட் அப்பா. அவரை விட வேறே அருமையான அப்பாவே இருக்க முடியாது”அப்பா  கருப்பு வெள்ளையாக  சுவற்றில் படமாக நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். .முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு  குறைந்தது   50-55  வருடங்கள் பிடிக்கிறது.

 மேலே சொன்னது ஒரு கற்பனை குடும்ப  வாழ்க்கை வளர்ச்சி.  இது மாதிரி எத்தனையோ சம்பவங்கள் எத்தனையோ பேர்கள் குடும்பத்தில் நிகழ்கிறது. அம்மா அப்பா அருமை  புரிய  அரை நூற்றாண்டு தேவை போலிருக்கிறது.

தாய் தந்தையர்  இருப்பவர்கள் பாக்யசாலிகள்.  இப்போதாவது வணங்கி அவர்களைப்  பின் பற்றி அவர்கள் ஆசியோடு வாழ்க்கை  தொடரட்டும்.  வீட்டில் தாத்தா பாட்டி இருந்தால் அது பெரிய  செல்வம். புதையல். அதன் அருமை தெரியாதவர்களுக்கு  அது  நியூஸன்ஸ்.  இடைஞ்சல்.தொந்தரவு, சனியன்கள். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *