VAZHOOR DHARSHAN – J K SIVAN

வழூர் தரிசனம்.   –  நங்கநல்லூர்  J K  SIVAN
12.2.2023  அன்றுவந்தவாசி பக்கமாக  செல்லும்போது நிச்சயம்  வழூர்  கிராமம் செல்லவேண்டும் என்று திட்டம். வழூரில் என்ன இருக்கிறது?  சேஷாத்ரி ஸ்வாமிகள்  ஜன்ம ஸ்தலம் அது. இந்த சின்ன கிராமத்தில் ல்பல அற்புதமான விஷயங்கள் இருக்கிறது.  ரொம்ப  ரசித்து  அனுபவித்தேன். அவற்றை பற்றி எழுதுவதற்கு முன்னால்  இங்கு அவதாரம் எடுத்த  ஸ்ரீ சேஷாத்ரி  ஸ்வாமிகள்  சரித்ர  சுருக்கம் தருகிறேன்.
 உத்திரமேரூர்  வந்தவாசி சாலையில்  அம்மையப்பநல்லூர் பக்கமாக   திரும்பி  ஏரிக்கரை ஓரமாக நேராக சென்றால் வழூர் கிராமம்  10 கி.மீ. தூரத்தில் வரும்.  நல்ல  பாதை. இந்த கிராமத்தில் தான் காமகோடி சாஸ்திரி வாழ்ந்தார். யார் அவர்?
நர்மதா நதிக்கரையில் வசித்த  தேவி உபாசகர்களில்  30 வேத ப்ராமணர்கள் குடும்பத்தை தெற்கே  காஞ்சிபுரம் சென்று ஸ்ரீவித்யா,  காமாக்ஷி உபாஸனையை தொடருங்கள்  என்று  ஆதி சங்கரர் அனுப்பினார். அந்த குடும்பங்களை காமகோடியார் என்று சொல்வார்கள். அந்த வம்சத்தில் 200 வருஷங்களுக்கு முன்பு தோன்றிய ஒருவர்  காமகோடி சாஸ்திரிகள். காஞ்சிபுரத்தை அடுத்து வந்தவாசி பக்கம் வழூரில் வாழ்ந்தவர். காமாக்ஷி  ஸ்ரீவித்யா  உபாசகர். புத்ரபாக்யம் இல்லை.  சகோதரர் சிதம்பர சாஸ்திரிகள் குழந்தைகளை தம் குழந்தைகள் பாவித்தார்.  அண்ணா  பெண்  மரகதத்தை தன் பெண் போல் வளர்த்தார்.  தனது சிஷ்யன்  வரதராஜ சாஸ்திரிக்கு  மரகதத்தை கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்.   மரகதம்  வரதராஜ  சாஸ்திரிகள் தம்பதிக்கு  கல்யாணமாகி புத்ர பாக்கியம் இல்லை.   காமாக்ஷி அம்பாளை வேண்டிக்கொண்டார்கள்.   ஒரு நாள் இரவு  அம்பாள் காமாக்ஷி  சாஸ்திரிகள் கனவில் தோன்றி  ”நவநீதம் (வெண்ணை) எனக்கு கொடு,  ஸர்வ ஞானமும் பொருந்திய குழந்தை பிறப்பான்”  என்று அருள் பாலித்தாள் .
22.1.1870  சனிக்கிழமை  ஹஸ்தம் நக்ஷத்திரத்தில்  வழூரில்  சனிக்கிழமை பிறந்த  பிள்ளைக்கு  குலதெய்வம்  வேங்கடேசன் நாமத்தை அளிக்க சேஷாத்ரி என்று பெயர் இட்டார்கள். காமாக்ஷி பிரசாதமான சேஷாத்ரி சிறுவயதிலேயே அம்பாள் மேல் பக்தி கொண்டவன். அடிக்கடி நிஷ்டையில் ஆழ்ந்து விடுவான். அப்பா  வரதராஜன் மடியில் அமர்ந்து  தியானம் செய்வான். சின்முத்ரை  காட்டுவான். அப்பா சிஷ்யர்களுக்கு  வேத பாடம் கற்பிக்கும்போது தானும் அங்கே அமர்ந்து அவர்  புஸ்தகத்தை ஆழ்ந்து உற்று பார்ப்பான். படிக்கத்  தெரியாத வயதிலும் புத்தகங்களில் உள்ள விஷயம் அவனுக்கு தெரிந்திருந்தது.  4 வயதில் தங்கக்கை என்று பெயர் வாங்கிய நிகழ்ச்சி எல்லோரும் அறிந்தது. அதை சுருக்கமாக சொல்கிறேன்.
காஞ்சிபுரத்தில் கோயில் அருகே  ஒரு பொம்மைக்கடையில்  ஒரு  சிறு  தவழும் நவநீத கிருஷ்ணன் பொம்மையை ”எனக்கு வேணும்  நான்  பூஜை பண்ணப்போறேன்”என்று கேட்டு  அம்மாவின் கையை பிடித்து நடந்து கொண்டிருந்த  சேஷாத்ரி எடுத்துக் கொண்ட போது  கடைக்காரன்   அந்த பொம்மைக்கு காசு வேண்டாம் என்றான். அன்றே  என்றுமில்லாத  அளவுக்கு  அந்த கடையில் 1000 பொம்மைகள்  விற்றுப் போனதாக  மறுநாள்  கடைக்காரன் மரகதத்திடம் சொன்னான். ”அம்மா  ஒருநாளைக்கு  ஒன்னு ரெண்டு பொம்மை தான்  விக்கும்.  உங்க  குழந்தை  எந்த வேளை  என் கூடையிலே கையை வைச்சானோ, அதனாலே இப்படி ஒரு  அதிசயம் நடந்தது.  ”தங்கக்கை ”அம்மா உந்த குழந்தைக்கு” என்று பேர்  வாங்கினான் சேஷாத்ரி.  ஊரில் பரபரவென்று இந்த  சேதி பரவியது. அந்த  நவநீத தவழும் கிருஷ்ணன் சிலை வெகுகாலம் சேஷாத்ரி ஸ்வாமிகள் தம்பி  நரசிம்ம ஜோசியர்  குடும்பத்தில் இருந்து வருகிறது. சேஷாத்ரிக்கு 14 வயதில்  அப்பா  வரதராஜன் மறைந்தார். தாத்தா  காமகோடி சாஸ்திரிகள்  மரகதத்தையும்  குழந்தைகளையம் வழுருக்கு  அழைத்து வந்துவிட்டார். ஸ்வாமிகளின் 17வது வயதில் அம்மா மரகதமும் மறைந்தாள். சித்தப்பா  ராமஸ்வாமி ஜோசியர், சித்தி கல்யாணிக்கு  புத்ர பாக்யம் இல்லாததால்  சேஷாத்ரி, நரசிம்மன் இருவரையும்  அவர்கள் வீட்டில் பராமரித்தார்கள். ஆவி பிரியும் முன்பு  அம்மா  மரகதம் சேஷாத்ரிக்கு  அருணாச்சலம் திருவண்ணாமலை  முக்தி ஸ்தலத்தை   நினைவூட்டினாள்.   இரவும் பகலும்  தீவிரமாக  அம்பாள் பூஜையில், தபஸில்,  ஈடுபட்ட சேஷாத்ரி 19வது வயதில் பாலாஜி ஸ்வாமிகள் எனும் வடக்கத்திய  அவதூதரை சந்திக்கிறார். அவரிடம் சந்நியாச  தீக்ஷை பெறுகிறார். மஹா வாக்ய உபதேசம் பெறுகிறார்.  அவ்வளவு தான் அப்புறம்  சேஷாத்ரிக்கு வீடு வாசல் உறவு உற்றார் எதுவும் இல்லை. திருவண்ணாமலைக்கு  நடக்கிறார். 40 வருஷங்கள் அந்த இடத்தை விட்டு எங்கும் நகரவில்லை. அம்மா அப்பா  மறைவுக்கு பிறகு  சேஷாத்ரி ஸ்வாமிகள்  காஞ்சிபுரத்தில்  வீட்டில் தங்குவதில்லை. சித்தி சித்தப்பா அவரை அப்பாவுக்கு ஸ்ராத்தம் பண்ண  தெருவில் எங்கோ பிடித்து அழைத்து வந்து ஒரு அறையில் வைத்து பூட்டி விடுகிறார்கள்.  ஸ்ராத்த காலத்தில் வீட்டில் இருக்கவேண்டும் என்று.  ஆனால் பூட்டிய கதவை திறந்தபோது உள்ளே  ஸ்வாமிகள் இல்லை. அந்த வீடு வரதராஜர் ஆலயம் தெற்கு வீதியில் சேஷாத்திரி நிவாஸம் என்ற பெயரோடு உள்ள இல்லம். அங்கே  சென்று சேஷாத்ரி ஸ்வாமிகள் படத்தை தரிசித்து கட்டுரை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். மஹா பெரியவா அருளினால் பரணீதரன் கண்டுபிடித்து நமக்கு கிடைத்த அடையாளம் அந்த இல்லம்.
இன்னும் வரும் 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1399

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *