MOTHER’S LOVE – J K SIVAN

”ஒரு  ராத்திரி” –   நங்கநல்லூர்  J K  SIVAN 

சிவராத்ரி பற்றி  எழுதினதுக்கப்பறம் ஒரு ராத்ரி பற்றி ஒரு விஷயம் சொல்லவேண்டாமா? காரணம் இந்த கதையின் பின்னால் ஒரு  விவரிக்கமுடியாத  தாய்ப்பாசம் ஒட்டிக் கொண்டி ருக்கிறதே அது தெரியவேண்டாமா?. த்ரி
”என்னடா  கோபு ரொம்ப  குதூகலமா  வரே?  என்ன  விஷயம்?
”உங்களுக்கு  ஒரு  பை நிறைய  பழம்  தந்திருக்காளாம்  எங்க  வாத்தியார்  மதன கோபால் அம்மா?”
”எனக்கேதுக்கடா  பழம்  எல்லாம்?  நானே  ஒரு  பழம்,  கிழம்   தானே?”
‘தாத்தா,  நீ  சொன்ன   பள்ளிக்கூடம்  விஷயத்தை  வாத்தியார்  அவா  அம்மாகிட்ட  சொன்னதுக்கு   ரொம்ப  சந்தோஷப்பட்டாளாம் .   என்னாலே  முடிஞ்சுது  நம்ப  வீட்டு  கொய்யாபழம் தான்  என்று  அவர்கள்  வீட்டில்  அந்த  அம்மா  30 வருஷத்துக்கு முன்னாலே  வச்ச  கொய்யா மரத்தின்  பழங்களை  பறிச்சு  கொடுத்திருக்கா.  இந்தா”
”அந்த  அம்மா மேலே  உங்க வாத்யார்  எவ்வளவு  ஆசை வச்சிருக்கிறாரோ அதே போல்  பசங்க  நீங்கல்லாம்  கூட  அப்பா  அம்மா மேலே  ஆசையா இருக்கணும்.  அது  முதல்  கடமை. ”    பேரன்  கோபுவின் நண்பன்   ராமு  கூடவே  இருந்தவன்  ஏதோ  அவன் காதில்  சொல்வதை பார்த்த  தாத்தா   என்னடா  ஏதோ  குசு குசுன்னு ரஹஸ்யம் சொல்றான் அவன்” என்று கேட்டார்.
”தாத்தா,   இந்த  அம்மா  ஆசை  பத்தியும்   உங்க தாத்தா  ஏதாவது  ஒரு  கதை   சொல்லுவாரா  இப்போ? ” என்று கேட்கிறான்.
”சரி  சொல்றேன்’ ரெண்டு பேரும்  உட்கார்ந்து கேளுங்கோ ”
++
”  உலகத்துலே  எந்த  கடனை  வேணுமானாலும்  திருப்பி கொடுத்துடலாம்.  அம்மாவுக்கு  அவள் நமக்கு செய்ததை  எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த  கடன்  திருப்பி தந்தது  ஆகாது.. அது பத்தி தான் நான் சொல்லப்போற கதை.  கேளுங்கோ ”

“கிட்டப்பா  ஒரே  புள்ளை. அவனை  ரொம்ப  கஷ்டப்பட்டு  வளர்த்து படிக்க வெச்சு  பெரிய  ஆளாக்கிட்டா  அவன்  அம்மா  மதுராம்பா, அவளுக்கு  இப்போ  75வயசு.  பெருமாள் கோவில் பக்கத்திலே தனியா  ஒரு சின்ன   ஒட்டு  வீட்டிலே  இருந்தா.  அவன்  டில்லி  பாம்பே, கல்கத்தான்னு   சுத்திண்டே இருக்கிற பெரிய  கம்பனி  அதிகாரி. அப்பப்போ  டயம் கிடைச்சபோது   சில  மணி நேரங்கள்  அவளை ஊரில்  போய்  பார்த்துட்டு வருவான்.  ஏதாவது பணம்  வேணுமான்னு கேட்டா  வேனாம்னுடுவா.
”உனக்கு  என்னதான்  வேணும்  சொல்லேன்  செய்றேன்”  அப்படின்னான்   ஒரு நாள்.
”எனக்கென்னடா  வேணும்  உன்னைத்தவிர.  கொஞ்சம்  நாள்  என்னோடு  இரேன்  அப்படின்னா  அம்மா கிழவி.
கிட்டப்பா  எப்பவாவது யோசிப்பான்.  இந்த அம்மாவால்  தானே  நான்  இன்னிக்கு  இவ்வளவு  பெரிய  உத்தியோகத்திலே  இருக்கேன்.  பாவம்  அவளுக்கு  எதாவது செய்யணும்னு  நினைப்பு  வரும்.  அதனாலே  தான்  கேட்டான்  அப்படி.
”எனக்கு  ஒன்னும்  வேண்டாம்ட  பையா.   எல்லா  அம்மாவுமே  இப்படித்தான்  பிள்ளை  என்ன  செய்யும்  என்று  எதிர்பார்த்து  ஆசையும்  பாசமும்  வைக்கிறதில்லே.   குருவிக்காரி,  பிச்சைக்காரியும்  பணக்காரியும்  ஒண்ணு  தான்  இந்த  ஒரு  விஷயத்திலே.  என்ன கொடுத்தாலும்  அம்மா  செய்த  கடமையை  திருப்பிக்  கொடுக்கவே,ஈடுகட்டவே  முடியாது  தெரிஞ்சுக்கோ”
அவனும்  விடாம  பார்க்கும்போதெல்லாம்   உனக்கு  என்ன செய்யட்டும்  என்றே  கேட்டுக் கொண்டிருப்பான்.
”  நீ  குழந்தையா  இருந்தபோது  என்னோடு  இருந்தே  அது  ஞாபகத்துக்கு  வருது.  அதே  மாதிரி  என்னோடு என் பக்கத்திலே  படுத்துக்கோ  இன்னிக்கு ஓரே  ஒரு  ராத்திரி மட்டும்”  என்றாள்  மதுராம்பாள்.
”ச்சே,   இது தான்  உனக்கு  நான்  திருப்பித்தற நன்றியா.  இப்பிடி ஒரு ஆசையா, உனக்கு.  சரி  இன்னிக்கு  ராத்திரி  இங்கே  தான்  எனக்கு  படுக்கை. ஹோட்டல் ரூமை கான்சல் பண்ணிடுறேன் ” . சிரித்துவிட்டு  அன்றிரவு  அம்மாவோடு அவள்  அறையில் தங்கினான்.  

கிட்டப்பா பெரிய  5 நக்ஷத்ர ஹோட்டலில்  தங்குபவன்.  அம்மாவோ  ஒரு  பெஞ்சில்  துணி விரித்து  படுப்பவள். எனினும் அன்றிரவு  அம்மாவோடு டபுள் பெஞ்சில்  அவள்  பக்கத்தில்  படுத்தான்.  ரொம்ப  அசதி.  படுத்த உடனே  தூங்கி விட்டான்.  அம்மா  எழுந்தாள்   ஒரு  பக்கெட்  தண்ணீர்  கொண்டுவந்து  அவன்  பக்கத்தில்  துணியில்  ஊற்றினாள் . தூக்கத்தில்  தண்ணீர்  மேலே படவே  ”ப்ச்” என்று  தூக்கத்தில்  சொல்லியவாறே  நகர்ந்து  மறுபக்கம்  திரும்பி  ஓரமாக  படுத்தான். அந்த  பக்கத்திலும்  ஒரு சொம்பு  தண்ணீர் ஊற்றினாள்அடித்து போட்ட மாதிரி  தூங்கினவன்  மீண்டும்  இடது பக்கம்  திரும்ப  அங்கு  மீண்டும் படுக்கையில்  தண்ணீர் காத்திருந்தது.  மீண்டும்  எங்கு  திரும்பினாலும்  தண்ணீர் படுக்கை  அவனை  அரவணைக்க  தூக்கம் கெட்டுப் போய் ஈரமான  உடைகளோடு  படுக்கையில்  எழுந்து உட்கார்ந்தவன்  எதிரே  அம்மா  ஒரு செம்போடு  நிற்பதை பார்த்து விட்டான்.

கிட்டப்பா என்கிற  கிருஷ்ணமூர்த்தி  பெரிய கம்பெனி அதிகாரி  அல்லவா?  எவ்வளவு  கோபம்  வரும் அவனுக்கு?  உனக்கு  அறிவிருக்கா, பைத்தியமா,   எதுக்கு  என்  தூக்கத்தை  கெடுக்கிறே?  இருக்கிற இந்த  மர பெஞ்சு  படுக்கையையும்  ஈரம்  பண்ணிட்டேயே   எப்படி  படுக்கறது.  படுக்கணும்னு  சொல்ல மட்டும்  தெரியறது, ஆனால்  படுக்க விடாமல் தொந்தரவு  பண்றியே  உனக்கு  வெக்கமாயில்லே?”  கிட்டப்பா அம்மாவிடம் உரக்க கத்தினான்.
அவள்  சிரித்தாள்.  அவனுக்கு  ஒன்றும் புரியவில்லை.  அவளையே  பார்த்தான். அவள்  மெதுவாக  பதில்  சொன்னாள் .
”கிட்டப்பா,  எத்தனை  வருஷம், உன்னோடு  பக்கத்திலே  படுத்திண்டிருக்கேன்.  எத்தனை  ராத்திரி  நீ,   படவா, என்கிட்ட இருந்த   சின்ன  பாயையும் துணியையும்  ஈரம்  பண்ணி யிருக்கே.  ஸ்ரத்தையா  நான்  எழுந்து  உன்   ஆடையெல்லாம்  கழட்டி  புதுசு  மாத்தி,  உன்னை  ஈரமில்லாம  இடத்திலே  என்  பக்கத்திலே  போட்டுண்டு  நான்  ஈரத்தில் படுத்துண்டு இருக்கேன்.  கொஞ்சமாவது  முணு  முணுத்திருப்பேனா?  அதுக்கு பதிலா  சந்தோஷமா  உனக்கு  முத்தம்  குடுத்திருக்கேண்டா.   நான்  செஞ்சதுக்கு  பதில் மரியாதை,  கடன் திருப்பி தரேன் என்கிறே,  ஒரு  ராத்திரி கூட  ஈரத்திலே  படுக்க முடியலேயே டா  உன்னாலே ? ‘
++
”தாத்தா  நீங்க  சொன்ன  கதை ரொம்ப  மீனிங் கோட இருக்கு”  என்று  ராமு  அந்த கதையை  தனது  அம்மா கிட்ட  சொல்ல  ஓடினான்.  

கடவுளுக்கும்   அந்த  ஸ்வரூபத்தில்  இருக்கிற  அம்மாவுக்கும்   நாம்  செய்நன்றி கூற முடியாது.  பதிலுக்கு  நன்றியோடு  வணங்கலாம். மனம்   இனிக்கும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *