கிருஷ்ணன் தான் ராமன் – நங்கநல்லூர் J K SIVAN
நாம் அதிக பக்ஷம் 100 வயது இருந்தால் பெரிய காரியம். அவ்வளவு வருஷம் வாழ்வதற்கே நிறைய பேருக்கு பிடிப்பதில்லை. ரயில் வர காத்திருக்கிறேன். சீக்கிரம் வரவில்லையே என்கிறார்கள். வாழ்க்கை ஒரு சமயம் அலுத்து விடுகிறது. சிரஞ்சீவியாக இருந்தால் ஒருவன் எத்தனை விதமான மனிதர்களை, எவ்வளவு மாறும் தல்களை உலகில் சந்திக்கவேண்டும். ஆனால் ஒரு சிரஞ்சீவிக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. அவன் உயிர் மூச்சே ராம நாமம் தான். ராமனோடு இருந்த த்ரேதா யுகம் 7000 வருஷம் முடிந்தாலும் தன் உயிருக் குயிரான ராமன் மறைந்தாலும் ஆஞ்சநேயன் ராமனையே நினைத்து ஜெபத்தில் தனது வாழ்வின் பெரும் பகுதியை தனிமையில் கடத்தினான். த்ரேதா யுகம் முடிந்து துவாபர யுகம் வந்துவிட்டது.
ஒருநாள் நாரதன் ஆஞ்சநேயனை சந்தித்தான்.
“ஆஞ்சநேயா இன்னும் எத்தனை நாள் ராமனையே நினைத்து ஜபம் செய்வாய்?”
“நாரதா, முனீஸ்வரா, என் மூச்சே ராமன் தான். ஆகவே மூச்சு முடியும் வரை ராமன் தான் எனக்கு எல்லாம்.”
நாரதன் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறாய் நாரதா? நான் சொன்னது வேடிக்கை இல்லையே “
“ஹனுமான், நீ நிஜத்தை விட்டு நிழலையே தேடிக்கொண்டு இருக்கிறாய். என்றபோது எனக்கு சிரிப்பு வந்தது”
“என்ன சொல்கிறாய் நாரதா, எனக்கு புரியவில்லையே””
“எப்படிப் புரியும். புரிந்து கொள்ள முயற்சித்தால் அல்லவோ புரியும்!”
”நாரதா நிஜம் என்கிறாய் நிழல் என்கிறாய், என் ராமன் என்ன நிழலா?”
“ஆம், வேறென்ன. நாராயணனின் ராம அவதாரம் முடிந்தவுடன் ராமன் மறைந்து வெகு காலம். ராமன் இப்போது வேறு அவதாரம் தொடங்கிவிட்டானே இந்த புது யுகத்தில்!”
“அப்படியா? என் ராமன் இப்போது என்னவாக அவதாரம் எடுத்துள்ளான் எங்கிருக்கிறான் சொல்லேன்?”
“இந்த துவாபர யுகத்தில் அவன் பெயர் கிருஷ்ணன். த்வாரகையில் உள்ளான். சமீபத்தில் நான் அவனிடம் பேசும்போது தான் உன்னை பற்றியும் பேச்சு வந்தது”.
“என் பிரபு என்னை நினைத்து கொண்டிருக்கிறாரா. ஆஹா நான் பாக்கியசாலி. நான் அவரை உடனே பார்க்க வேண்டுமே “
“உனக்கு அவரை பார்க்க வேண்டுமானால் நீ ஒரு மாறு வேடத்தில் துவாரகை வா. அங்கு ராம நவமி அன்று அன்னதானம் செய். நான் அப்புறம் உன்னை பார்க்கிறேன்”.
நாரதன் நகர்ந்தான்.
ஆஞ்சநேயன் ஒரு பிராமணன் வேடத்தில் துவாரகை சென்றான். துவாரகையில் ஸ்ரீ ராம நவமி அன்று அன்னதானம் அளித்தான் எண்ணற்றவர்களுக்கு தன் கையாலேயே அன்னமிட்டான். வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தில் கொஞ்சமும் அயராது ஆஞ்சநேயன் குனிந்து ஸ்ரத்தையோடு அனைவருக்கும் இலையில் அன்னமிட்டான். திடீரென்று அப்போது ஹநுமானுக்கு ஒரு அதிர்ச்சி.
“என்ன இது? ஏன் என் தலை சுற்றுகிறது…
ஒரு வரிசையில் கால் மடக்கி அமர்ந்திருந்த ஒரு வயோதிக பிராமணருக்கு எதிரில் ஆஞ்சநேயன் குனிந்து கையில் அன்ன வட்டிலோடு நின்றவன் நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்தான்.
ஏன்? ஏன் ? இது எதற்காக? நான் என்ன அபசாரம் செய்து விட்டேன்?”
ஆஞ்சநேயன் கதறினான்.
அந்த வயோதிகரின் கால்கள் அவனுக்கு நிறைய பரிச்சயமானவை. அவன் எப்போதும் வணங்கும் சாக்ஷாத் ராமனின் கால்கள்””.
பிரபு என்னை இப்படியா சோதிக்கவேண்டும்?.
அலறினான் ஆஞ்சநேயன். பிராமணர் சிரித்தார். மெதுவாக எழுந்தார். அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பிராமணரான நாரதரும் எழுந்தார். வேடத்தைக் களைந்து கிருஷ்ணன் ஆஞ்சநேயனை அணைத்து கொண்டான்.
நீண்ட பிரிவல்லவா? ஆஞ்சநேயா. உன்கையால் சாப்பிட ஆசை வந்தது. எனவே நானும் நாரதனும் உனைக்காண வந்தோம்.”
“பிரபு எனக்கு ஒரு வருத்தம்!”
“என்ன ஆஞ்சநேயா?”
“நான் உடனே துவாரகைக்கு வரவேண்டும் உங்களையும் என் தாய் சீதா பிராட்டியையும் சேர்த்தே பார்க்கவேண்டும்.. உங்களைத் தனியாக பார்த்தால் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்து வதைக்கின்றன”
“வாயேன் எங்களோடு”
ஆஞ்சநேயன் கிருஷ்ணனோடு துவாரகை சென்றான். ருக்மிணி என்கிற உருவில் தனது மாதாவைக் கண்டான். பலராமன் என்ற உருவில் லக்ஷ்மணனையும் கண்ணார கண்டு களித்தான்.
பேச்சே எழவில்லை.
எனக்கும் மேலே எழுத முடியவில்லை