கோவிந்தவாடி குருஸ்தலம், நங்கநல்லூர் – J K SIVAN
சென்னையைச் சுற்றியே பல அதிசயமான புராதன ஆலயங்கள் இருக்கிறதே. சென்று தரிசிக்க வேண்டாமா? என்று என்னையே நான் கேட்டுக்கொண்டு சில வருஷங்களுக்கு முன்பு தொடர்ந்து பல ஆலயங்களுக்கு நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று களித்தேன். அப்படி ஒரு மறக்கமுடியாத ஆலயம் கோவிந்தவாடி குரு பகவான் ஆலயம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் கோவிந்த வாடி அகரம் ஒரு சின்ன க்ராமம் . குருஸ்தலம். சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ. திருமால் போரிலிருந்து கிட்டே 1 கிமீ. காஞ்சிபுரத்திலிருந்து 10 கி.மீ.எல்லா சிவன் கோயில்களிலும் தெற்கு பக்கம் நோக்கி தக்ஷிணாமுர்த்தியின் கோஷ்டம் பிரகாரத்தில் இருக்கும். இங்கே அவர் தான் பிரதான மூலவர். கைலாசநாதர் என்று திருநாமம். அவரைச்சுற்றி மற்ற தெய்வங்கள். சப்த ரிஷிகள் ஆதி சங்கரர் வந்து வழிபட்ட க்ஷேத்ரம். இந்த ஆலயத்திலிருந்து பூமிக்கடியில் சுரங்கத்தில் காஞ்சி புரம் கைலாசநாதர் ஆலயம் போக வழி உண்டாம். மூடி எத்தனையோ காலம் ஆகிவிட்டதே. இப்போது யார் போய் பார்க்க முடியும்?
தக்ஷிணாமூர்த்தி ஜடாமுடியில் அர்த்த (பாதி)பிறைச் சந்திரனைச் சூடிக்கொண்டு, இடது மேல் கையில் அக்னி, வலது மேல் கையில் சர்ப்பம், இடது கீழ் கையில் வேத ஓலைச்சுவடிகள்,வலது கீழ் கையில் சின்முத்திரை யோடு, வலது காலை தொங்கவிட்டு இடது காலை அதன் மேல் மடித்து. வலது பாதத்தின் அடியில் அசுரனை அழுத்திக்கொண்டு யோக தக்ஷிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். பெரிய விக்ரஹம். வேறு எங்கே இவ்வளவு பெரிய அழகான தக்ஷிணாமூர்த்தி? அவரது பாதம் அருகே எதிரே சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நாலு ரிஷிகள் ஆதிகுருவிடம் மௌன உபதேசம் பெறுகிறார்கள்.
நவக்ரஹங்களில் ஒருவர் வியாழன் எனும், பிரஹஸ்பதி, அவர் வேறே. அவரும் இங்கே வந்து பூஜித்ததால் தேவ குருவானவர். வியாழக்கிழமை குரு பெயர்ச்சி சமயங்களில் இங்கே பக்தர்கள் அலைமோதுகிறார்கள். திருமணம், உத்தியோகம், புத்திர பாக்கியம், மற்றும் வியாபார விருத்தி போன்றவைகளை எதிர்பார்த்து பக்தர்கள் இங்கே வருகிறார்கள். நம்பிக்கை வீண் போகாததால் தானே பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், வியாழக்கிழமை காலை 5 மணி முதல் தொடர்ச்சியாக இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
காஞ்சீபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ெரயில் நிலையத்திலிருந்து (தற்போது பள்ளுர் ரெயில் நிலையம்) 1 கி.மீ. தூரத்தில் கோவிந்தவாடி உள்ளது. திருமால்பூருக்கு ரயிலில் போக வசதி இருக்கிறது.