Ekadhasi vratham. J K Sivan

ஏகாதசி  உபவாசம் –  நங்கநல்லூர்  J K  SIVAN

இன்று  தை. ஏகாதசி. இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு மாதமும்  ஏகாதசி வருகிறது.  அது பற்றி ஒரு தடவை மஹா பெரியவா  ஒரு அற்புதமான விஷயம் சொன்னது நினைவுக்கு வருகிறது. ”வழக்கமா ஒண்ணு என்றால் ஏகாதசி அன்னிக்கி ரெண்டு தடவை போஜனம்! ” என்னடா  இது.  தினமும் ஒரு தடவை சாப்பிடறவன்  பட்டினி கிடைக்க வேண்டிய  ஏகாதசி அன்னிக்கு ரெண்டு தடவை  சாப்பிடறதா..?போஜன த்வயம்” இது எப்படி இருக்கு? ஆனால் இதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. ”போஜனா” என்றால்  சாப்பாடு அல்ல.   ”ஓ ,ஜனங்களே,” என்று அர்த்தம்.   ”ஜனங்களே, ரெண்டு காரியம் ஏகாதசி அன்று நீங்கள் பண்ணவேண்டும். ஒன்று சுத்த உபவாசம். ரெண்டாவது சத் கதா காலக்ஷேபங்களை கேட்பது. இதை தான் ஒரு ஸ்லோகம் சொல்கிறது. ”ஏகாதச்யாம் து கர்தவ்யம் போஜனா த்வயம் ஸர்வேஷாம் உபவாசம் பிரதமா; ஸத்கதா ஸ்ரவணம் தத” ஏகாதசி புண்யகாலத்தில் உபவாசம் இருப்பது மூச்சை அடக்கி பிராணாயாமம் செய்வதற்கு. வயிறு புடைக்க தின்று விட்டால் மூச்சு விடுவதே கஷ்டம் அல்லவா?.   அதுவும் இல்லாமல் வார விடுமுறை விட்டு மெஷினுக்கு ரெஸ்ட் கொடுப்பது போல் 24மணி நேரம் உழைக்கும் நமது உடம்புக்கும் ரெஸ்ட் தான் உபவாசம். ஸத்கதா ஸ்ரவணம் என்பது பகவத் விஷயங்களை கேட்பது. அதில்  மனதைச் செலுத்துவது. இதனால் டென்ஷன் கிடையாது,  கோப தாபங்கள் உணர்ச்சி இல்லை. வாய் பேசாமல் காது மட்டும் கேட்பதால் சக்தி விரயம் இல்லை.உபவாசம் பலவகைப் படும். அதற்கு எத்தனையோ விரதங்களை புராணங்கள் அனுஷ்டிக்கச் சொல்கின்றன.

மஹா விஷ்ணு அவதாரங்கள் எடுக்கும்போது கூர்ம, ,வராஹ,மற்றும்  தன்வந்தரி, மோஹினி யாக வந்தது ஏகாதசியில் தான். ஆலகால விஷத்தை பரமேஸ்வரன் விழுங்கியது கூட ஏகாதசியில் தான். காலப் போக்கில் ஏகாதசி ஒரு பொழுது என்று கொஞ்சம் உப்புமா, தோசை, இட்லி, வடை,  பலகாரங்கள்  இல்லை, ‘பலாகாரங்கள்” வழக்கத்தில் வந்து விட்டது.

ஏகாதசி விரதம்  ரொம்ப  சிலாக்யமானது. ”அம்மாவைக்   காட்டிலும் தெய்வமில்லை, காயத்ரியை விட மந்திரமில்லை,   காசியில் கங்கையை  விட தீர்த்தம் எதுவும்  இல்லை, ஏகாதசி விரதத்தை விட வேறு விரதமில்லை ”   சாஸ்திரம் என்ன சொல்கிறது? எட்டு வயசு பையன் முதல் எண்பது வயஸு வயோதிகன்  வரை உபவாசம் இருக்கலாம்.

சந்திராயணம் விரத உபவாசம் ரெண்டு வகையாக முன்னோர்கள் அடையாளம் வைத்திருந்தார்கள். கட்டெறும்பு  உபவாசம். கோதுமை உபவாசம் என்று சொல்வார்கள்.  என்னய்யா இது? கட்டெறும்பா? உபவாசமா? என்ன பேத்தல்? — இல்லை சுவாமி. கட்டெறும்பைப்   பாரும். எப்படி இருக்கு ? தலை பெரிசு. அப்புறம்   நடு  இடைப்ப குதி சிறுத்து, சின்னதாக,  மறுபடியும் பின் பகுதி பெருசு இல்லையா. அதுபோல பௌர்ணமி யிலிருந்து ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமாக உபவாசத்தை கூட்டி கூட்டி ஆகாரத்தை குறைத்து அமாவாசை உபவாசம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உபவாசத்தை கூட்டிக் கொண்டே போவது. இன்னொன்றான கோதுமை  உபவாசம்  என்றால் எப்படி?  கோதுமை எப்படி இருக்கிறது? ஆரம்ப நுனி சின்னது. அப்புறம் பெரிசாகி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இன்னொரு நுனி சின்னதாக இல்லையா? அப்படி உபவாசத்தை கூட்டிக் கொண்டே போய் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்வது கோதுமை உபவாசம்.

மொத்தத்தில் உபவாசம் பட்டினி கிடந்து உடம்பைக் கெடுத்துக் கொள்வதற்கு இல்லை. ஆகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, உடலைச் சீர்படுத்த. ஜீரணிக்க கடுமையான உணவை ஒதுக்கி சிறிது சிற்றுண்டி, பால் பழம் அப்புறம் வெறும் நீர் மட்டும் என்று உடலைப் பழக்குவதற்கு. உபவாசம் என்று மேற்கொள்ளும்போது உணவை தவிர்க்க பழக்கம் வரவேண்டும். எனக்கு தெரிந்து பல பேர் நிர்ஜல ஏகாதசி கடைப்பிடிப்பவர்கள். தண்ணீர் கூட மறுநாள் துவாதசி காலை விரதம் முடிந்த பிறகு தான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *