BRAMMA’S WORKSHOP J K SIVAN

ப்ரம்மாவின் தொழிற் சாலை.  —   நங்கநல்லூர்  J K  SIVAN
நம் உடலில் உள்ள ஒரு அருமையான  அற்புதமான வஸ்து  உயிர், அதை ஜீவன், ஆத்மா, பிராணன் என்றெல்லாம் எப்படி சொன்னாலும் அதை நாம் சுத்தமாக அறிவதில்லை. அதன் அருமை தெரியாம லேயே அதோடு வாழ்ந்து கடைசியில் நம்மை விட்டு அது  ஒருநாள்  போனபின் நாமும் அழிகிறோம். சொத்து சுதந்திரம், வீடு வாசல், ஆஸ்தி பாஸ்தி,உறவு நட்பு என நாம் சேர்த்தது எல்லாவற்றையும் விட்டு விட்டு தான் போகிறோம். அப்போது நம்மோடு கூட வருவது நமது கடைசி எண்ணங்கள் மட்டும் தான். அடுத்த பிறவியில்  எந்த உடல் கிடைக்கிறதோ அதில் பிராணன் குடி புகும்போது அதோடு இந்த  வாசனாக்கள் எனும் நமது கடைசி  எண்ணங்களும் கூடவே போய் ஒட்டிக்கொள்கிறது. அந்த எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பதை பொறுத்து  அடுத்த உடல் அமையும். அதற்கு தான் கடைசியில் உருவன் கிளம்ப தயாராகும்போது அவன் காது அருகே  விஷ்ணு சஹஸ்ரநாமம்,  ராமாயணம்,சுந்தர  காண்டம்,  கீதை ஸ்லோகம், தேவாரம், திருவாசகம், பாசுரம்  போன்ற  பகவானை  துதிக்கும் ஸ்தோத்திரங்களை  சொல்கிறோம்.  அதைக் கேட்டு  அந்த எண்ணத்தோடு அவன் புறப்பட்டால்  ஒருவேளை  அடுத்ததாக, ஒரு நல்ல பிறவி, உடல் கிடைக்காதா?
பிராணன் உடலை விட்டு  எப்படி பிரிகிறது?இந்த பிறவியிலேயே  நல்ல காரியங்கள் செய்தவன்  பிராணன்  கண் வழியாக  சூரியனை அடைகிறது.  ரிஷிகள்  துறவிகள்  ஞானிகளின் உயிர்கள்   உச்சந்தலை,   சிரசில், ஸஹஸ்ராரம்  வழியாக வெளியேறி  ப்ரம்மலோகத்தில்  ஹிரண்யகர்பனை  அடைகிறது. கபால மோக்ஷம்.    மற்ற  புலன்கள், காது மூக்கு வாய், மற்ற துவாரங்கள் மூலம் வெளியேறும்  ப்ராணன்  ஒருவன் செய்த கர்ம பலனுக்குத் தக்கபடி தான் அடுத்த பிறவி, உடலைப் பெரும்.    ப்ராணன்  போனபின் உடலின்  ஐம்புலன்களும் ஒவ்வொன்றாக  முழுசாக தனது சக்தியை  இழக்கும். எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பி போகும்.   காலியான உடல் நாறும் முன்பு எரிக்கவோ புதைக்கவோ வேண்டுமே.நம்  ஒவ்வொருவரின் குணம், நடத்தை,  எண்ணம்  எல்லாம்  அவரவர்  முற்பிறவிகளின்  நடத்தை, எண்ணங் களின் சாயல், பதிவு என்று இப்போது  புரிகிறதா? இப்போது நான் நல்லவன் என்றால், நான் முந்தைய பிறவியில் ஒரு நல்லவன் ஸார் , நம்புங்க ஸார் .இனியாவது அடுத்த பிறவி நல்லதாக அமைய  வேண்டுமானால் இன்னும்  ரொம்ப லேட் ஆகவில்லை.இன்னும் டைம் இருக்கு. இதைப் படித்த பிறகாவது நல்ல சிந்தனை, பரோபகாரம், கோவில் குளம் சுவாமி மேல் நம்பிக்கை,  பெரியோரிடம் பணிவு  குழந்தைகளிடம் பாசம்,  சுயநலமற்ற  தாராள மனசு, தியாகம் இதெல்லாம் நிறைய வேகமாக பெற ஓடுவோம்.
எனக்கு வேறே என்னசெய்வது என்று தெரியாததால்  என்னைப்  பொறுத்தவரை,   நிறைய நல்ல விஷயங்கள் சேகரிக்கிறேன், அறிந்ததை, தெரிந்ததை, தேடி, அடைந்ததை,எல்லாம்   இரவு பகலாக முடிந்தவரை புரியும்படி சொல்ல முயற்சிக்கிறேன்.சொல்கிறேன், பேசுகிறேன், பாடுகிறேன், எழுதுகிறேன். ஒரு நல்ல நாய்க்  குட்டியாகவாவது நான் அடுத்து பிறக்கவேண்டும் என்ற நப்பாசை. எப்படியாவது சூடான  எண்ணெய் கொப்பறையிலிருந்து தப்பவேண்டுமே.
 சொந்தமாக  எதையும்  சொல்லவோ  எழுதவோ  நான் ரமணரோ , மஹா பெரியவரோ  அல்ல.  எனக்கு உபயோகமாக நான்  தேடிக்கொள்வது பிறருக்கும்  உபயோகமாகட்டுமே என்ற  ஒரே எண்ணம் தான் நான் இப்படியெல்லாம் எழுதி உங்களை வாடுவது. என் மேல் கோபம் கூட வரலாம். இந்த ஆள் விடாமல் நம்மை துளைக்கிறானே, இவ்வளவா தினமும்   மூச்சுத் திணற திணற  திணிப்பது . யார் கேட்டா இவனை,இதெல்லாம்  தா என்று?.
சிலர்  இளம் வயதிலேயே  சிறந்த ஓவியனாக,  பாடுபவனாக,  பேசுபவனாக, எழுதுபவனாக, நடிப்பவனாக, அழகனாக,   திறமைசாலியாக  வீரனாக, திருடனாக இருப்பது எல்லாம் இப்படி அவனவன் முன் பிறவியில் சம்பாதித்த சொத்து.  ஞானம், செயல்,  அனுபவம்  இந்த மூன்றும்  அடுத்த பிறவியில் மனிதனுக்கு  உதவுபவை.  ஒரு புது உடல்  உயிர் பெற்றதும் அதற்கு பஞ்ச பூதங்களின் தன்மைகள் அதன் புலன்கள் வழியாக  எல்லோருக்கும்  கிடைத்தாலும்  மேலே சொன்ன,   ”சம்பாதித்த  சொத்து” அதோடு சேர்ந்து  அவனது குணம் , திறமை, பேச்சு, நடத்தை, எல்லாம்  அதிகமாகவோ,   பொது அளவை விட குறைந்தோ அவனை அடைகிறது. பிறர் கவனம் கவரும் அளவு வெளிப்படுகிறது.
இப்படி கடவுள் அமைக்கவில்லை என்றால் எப்படி இருக்கும் என ஒரு கணம்  சிந்திப்போம்.  எல்லோரும் ஒரே மாதிரி நினைப்போம், பேசுவோம், நடந்துகொள்வோம்.  மெஷின்கள் மாதிரி இருப்போம்.  நரகவேதனை அது.  ஒரு தொழிற்சாலையில் லக்ஷம் கோடி  தயாராகும் எல்லா  வஸ்துக்களும் ஒரே மாதிரி இருக்கும், ஒரே அளவில், ஒரே எடையில் ஒரே சக்தியோடு  ஒரே வேலையை மட்டும்  செய்யும், அழியும்.  மாறுதல் இருக்காதே.  உலகமே இருக்காது. மனுஷனுக்கும்  மெஷினுக்கும் இது தான் வித்யாசம்.  நமது தொழிற்சாலை மட்டம் ஸார், பிரம்மன் தொழிற்சாலை  டாப்  க்ளாஸ் ஸார்.  ஹிரண்ய கர்பன் எனும் பொற்கொல்லன் எதிரே  நிறைய தங்க உருண்டைகள், ஒவ்வொன்றையும் தட்டி நீட்டி, மடக்கி, வளைத்து வெவ்வேறு நகைகள், பெயர்களோடு, வண்ணங்களோடு, எடையோடு,  கீழே அனுப்புகிறான்.  ஒரே தங்க குண்டு வேறு வேறாக வெளிவருகிறது. அது தான் நாம்  எல்லோரும்.  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1399

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *