ஹிங்க்லஜ் சக்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN
52 சக்தி பீடங்களில் ஒன்று பாகிஸ்தானில் நம்மை விட்டு பிரிந்து இருக்கிறது. பத்ரிநாத் ஹிங்க்லஜ் தேவி ஆலயம் என அதற்கு பெயர். கராச்சிக்கு மேற்கே 120 கி.மீ தூரம். ஹிங்கோல் நதிக்கரையில் உள்ளது. ஹிங்க்லஜ் மலைக்கோவில் அது.
கணேசன், காளிகா மாதா, குரு கோரக்நாத், ப்ரம்ம குண்டம், தீர் குண்டம், இதெல்லாம் அங்கே உள்ளன
.உலகில் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் வர பாகிஸ்தான் அனுமதிக்கிறது. ராமர் தரிசித்த ஆலயம். சதியின் உடலிலிருந்து அவள் நெற்றி வகிட்டில் வைத்திருந்த சிந்தூரம் விழுந்த இடம் இந்த சக்தி பீடம். இந்தியா பாகிஸ்தான் பிரியும் முன் அநேக பக்தர்கள் வழிப்பட்ட ஸ்தலம் இது.
இந்த ஆலயம் பலுசிஸ்தான் பகுதியில் இருப்பதால் அழியாமல் தப்பி இருக்கிறது என்கிறார்கள். இன்னொரு விஷயம். பலுசிஸ்தான் மக்கள் இந்த ஆலயத்தை ”பாட்டி கோவில்” என்று வழிபடுவது நமக்கு இந்த ஆலயத்தை சக்தி பீடமாக இன்னும் விட்டு வைத்திருக்கிறது. முஸ்லிம்கள் வருஷா வருஷம் இங்கே பாட்டி கோவிலுக்கு வழிபட வருகிறார்கள். சிகப்பு வஸ்திரம், அத்தர், ஊது பத்தி எல்லாம் காணிக்கையாக கொண்டு செல்கிறார்கள். ஆலயத்தை இடிக்காமல், விக்ரஹத்தை உடைக்காமல் விட்டதற்கே நன்றி சகோதரர்களே.
ஒருகாலத்தில் இந்த அடர்ந்த காட்டிற்குள் சென்று தேவி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்த பக்தர்களை எரிக்காமல் புதைத்து தெய்வமாக வழிபட்டார்கள் என்றால் எவ்வளவு கடினம் இந்த ஆலய தரிசனம் என்று புரியும். இப்போது போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் பாகிஸ்தான் கராச்சி பிரதேச போலீஸ் விசாரணைக்கு பிறகு 7 மணி நேர பிரயாணம். சமைத்து சாப்பிட இடம் பாத்திர வசதி இருக்கிறதாம்.