வயிற்று வலி போயிந்தி….. நங்கநல்லூர் J K SIVAN

வயிற்று வலி போயிந்தி….. நங்கநல்லூர் J K SIVAN

சில வருஷங்களுக்கு முன்பு நண்பர்களோடு திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயம் சென்றபோது அங்கே ஒரு சமண சிலையைப் பார்த்தேன். அது தான் திருநாவுக்கரசர் என்று அறிந்தேன். அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என தோன்றியது.
மருணீக்கியார் என்றால் புருவத்தை கேள்விக் குறியாக்கி உயர்த்துகிறோம், திருநாவுக்கரசர் என்றால் எந்த கட்சி தலைவர்? என கேட்கிறோம். ஆனால் ”அப்பர்;; என்றால் எல்லோருக்கும் தெரியும். யார் அந்த கோவிலில் எல்லாம் முள் புல் எல்லாம் இல்லாமல் செதுக்குவாரே அவரா? என்ற அளவாவது தெரியும், அவரது தேவாரங்கள் அவ்வளவாக தெரியாது, புரியாது, கேட்பதே இல்லை என்றாலும் இன்று உங்களை விடப்போவதில்லை, அவரைப் பற்றி சொல்லியே தீருவேன். அக்பரைத் தெரிந்தவர்கள் நீங்கள் என் அப்பரை தெரிந்து கொள்ளவேண்டாமா?

7ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாலு சைவ சமய குரவர்களில் (நரி பிடிக்கும் குறவர் இல்லை,தெய்வ நெறி பிடித்த ஒருவர்) திருவாமூரில் பிறந்தவர்.திருமுனைப்பாடி எனும் ஊர் நடு நாடு எனும் பகுதியை சேர்ந்தது. அதில் ஒரு கிராமம் திருவாமூர். அங்கே வேளாளர் குலத்தில் வாழ்ந்த ஒரு தம்பதி புகழனார் – மாதினியார். இவர்கள் மகன் தான் மருள் நீக்கி. சகோதரி திலகவதி.
திலகவதிக்கு 12 வயதில் பல்லவ தளபதி கலிப்பகையாருக்கு கல்யாணம் நிச்சயம் செய்து கலிப்பகை போரிலே மாண்டு திரும்பி வரவே இல்லை. இது தான் திலகவதி மணவாழ்க்கை. அப்பா அம்மாவும் மறைந்தபின் தம்பி மருணீக்கியை வளர்க்கும் பொறுப்பு வந்துவிட்டது.

மருள் நீக்கிக்கு சமண மதம் அதன் கொள்கை ரொம்ப பிடித்துவிட்டு தர்ம சேனன் என்று பெயர் மாற்றிக்கொண்டு வீர சமணன் ஆனான். பல்லவமன்னன் மகேந்திரவர்மன் ஆதரவில் சமண சமயத்தினைப் பரவச் செய்யும் முயற்சியில் மருணீக்கியார் பாடலி புத்திரம் சென்றார். சமணரின் பள்ளியைச் சார்ந்தார். சமண முனிவரும் தங்கள் தர்க்கவாதத் திறமையால் தங்கள் சமயமே மெய்ச்சமயம் என்று கூறி அவர் அறிவை மருட்டித் தங்கள் மதத்தில் ஈடுபடுத்தி வந்த காலம் அது.

தனது ஆசைத் தம்பி சமணனாகியதில் வாழ்க்கை இழந்த திலகவதி திருவதிகைக்கு குடியேறி அங்கே மடத்தில் சேர்ந்து மனம் உடைந்து ”வீரட்டானேஸ்வரா, என் மருணீக்கியை மீட்டுக் கொடு ”என வேண்டுகிறாள்.சிறந்த சிவபக்தை திலகவதி. வீரட்டானேஸ்வரர் கனவில் தோன்றி `கவலைப்படாதே, அவன் என்னவன்.அவனை நாம் ஆட்கொள் வோம்` என்று அருளினார்.
திடீரென்று தர்மசேனனுக்கு பொறுக்க முடியாத வயிற்று வலி. சமண முனிவர்கள் வைத்தியத்தில் நிபுணர்கள். மணி மந்திர ஒளஷதம் கற்றவர்கள். அவர்களாலும் திடீரென வந்த வயிற்று வலி தீரவில்லை, குணமாகவில்லை. ”அக்கா நான் என்னசெய்வேன்” என்று திருவதிகையில் திலகவதியிடம் தஞ்சம் புகுந்தான் மருள்நீக்கி. ”கவலைப்படாதே இது கண்கண்ட மருந்து” என வீரட்டானேஸ்வரரின் விபூதியை தடவுகிறாள் அக்கா.

ஆஹா என்ன ஆச்சர்யம் .இதுவரை வாட்டி வதைத்த சூலை நோய் மட்டுமா காணாமல் போனது? மருள் நீக்கியே காணாமல் போய் திருநாவுக்கரசரனானான். திருவதிகை வீரட்டானேஸ்வரன் முன் நின்று நன்றியோடு ஒரு பதிகம் ல் இசைத்தார் திருநாவுக்கரசர். நமக்கு அப்பர் கிடைத்தார். நிறைய தடவை இந்த பாடலை நான் பாடுவேன். ரொம்ப பிடிக்கும்;

”கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே”…

வீரட்டானம் க்ஷேத்திரத்தில் அருள் பாலிக்கும் தலைவா ! யான் இப்பிறப்பில் என் மனம் அறிந்து அறிவு இடம் கொடுத்து, பல கொடுஞ் செயல்களைச் செய்தேனா, நல்லவனாக இல்லலையே . ஏன் என்றே எனக்குத் தோன்றவில்லை. இந்த சூலைநோய், யாருக்கும் நோய் முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் புகுந்து குடல் முதலான ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்கி ஒடுக்கி, சுருட்டி, என்னால் அவ்வலியைப் பொறுக்க இயலாதவனாக துடிக்கிறேன். இரவு பகல் உண்ண முடியாமல் உறங்க முடியாமல் துடித்து வாடுகிறேன். கொடிய யமதர்மனைப்போல் அந்நோய் என்னை வாட்டி வதைத்து துன்புறுத்தும் செயலை நீங்கள் அல்லவோ போக்கும் நீக்கும் சக்தி உடையவர். ஐயா, பரமேஸ்வரா, தயவு செயது என் குறைகளை பொருட்படுத்தாமல் என் மேல் கருணை கொண்டு என் சூலை நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது வலம் வரும் உங்கள் அருளால் என் மனத்தில் சைவ சமய பக்தியும் துணிவும் பண்பில் தணிவும் மொழியால் பணிவும் பெற அருளி இனி எக்காலமும் நான் உங்கள் அடிமையாக திருவடியை வணங்க அருளவேண்டும். ”

இப்படி மனமுருக நாமும் இறைவனை மனமார நினைத்து வணங்கவேண்டும். அப்புறம் காசு பிடுங்கும் ஆஸ்பத்திரிகள் பக்கமே கால் போகாது.

சென்னையிலிருந்து ரெண்டு மணி நேரத்தில் வேகமாக வழவழ சாலையில் காரில் சென்றால் கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் திருவதிகை எனும் வீரட்டான க்ஷேத்ரம் சென்றுவிடலாம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *