ரத சப்தமி -நங்கநல்லூர் J K SIVAN
காஸ்யப ரிஷி மனைவி அதிதி பூரண கர்ப்பிணி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமா றிக் கொண்டிருந்தபோது வாசலில் ஒரு குரல். யாரோ ஒரு பிராமணன் வாசலில் நின்று குரல் கொடுத்தான்
”பவதி பிக்ஷாந் தேஹி -பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு”
” இரு கொண்டு வருகிறேன்” .அதிதி மெதுவாக நடக்க முடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் தனக்கு என்று வைத்திருந்த ஆகாரத்தை எடுத்துக்கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்த பிராமணனுக்கு அளித்தாள் .”ஏன் இவ்வளவு நேரம்கழித்து வந்து உணவைக் கொடுத்தாய். என்னை அவமதித்து உதாசீனமா பண்ணினாய். உனக்கு இதோ என் சாபம். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறந்து போகட்டும்” .கோபமாக அந்த பிராமணன் சாபமிட்ட்டுவிட்டு போனான்.அதிர்ச்சியோடு அழுது கொண்டு அதிதி திரும்பி காஸ்யபரிடம் விஷயம் சொல்கிறாள்.’அதிதி, ‘நீ இதற்கெல்லாம் வருந்தாதே, அவன் சாபம் பலிக்காது. அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்றார் காஸ்யபர் ரிஷி சொல்லியது போல பிரகாசமான ஒளி வீசும் சூரியன் அவர்களுக்கு மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சூரியனின் தேர் வடக்கு நோக்கி பயணிக்கும் நாள்.
ரத சப்தமி இப்போது யாருக்கும் தெரியாத காலமாகி விட்டது. அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத் தையும், செல்வ வளத்தையும் தரும். ரத சப்தமி தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கிறது புராணம்.
ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும். ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.