திருவேளுக்கை.16.1.2023 அன்று நான் சில ஆலயங்களில் தான் தரிசனம் பெற முடிந்தது. காரணம் என் ஊழ்வினை ட்ரைவர் ரூபத்தில் வந்தது. விடிகாலை 6 மணிக்கு புறப்படும்போது போட்ட திட்டத்தை தவிடு பொடி செய்தது அந்த ட்ரைவர் மூலம் வந்த விதி.”கோவிலுக்கா போகணும்னு கூப்பிட்டீங்க. நான் கோவில் சவாரி எல்லாம் வர்ரதில்லை. என்கிட்டே ஏஜென்ட் சொல்லலை. ஏதோ காஞ்சிபுரம் வந்தவாசி போவணும்னாரே ன்னுட்டு ஒத்துக்கிட்டேன். கோவிலுக்கு நான் போகறதில்லைங்க.”
அடுத்த அணுகுண்டு காஞ்சிபுரத்தில் சங்கரமடத்தில். ட்ரைவர் வந்து ஐயா ”ஏதோ பூரான் கடிச்சுட்டுது.கை கால் நடுங்குது. ஊசி மருந்து போட்டுக்கிட்டிருக்கேன். ஓட்டறது கஷ்டமுங்க ”
84ம் 87ம் ஆன நானும் நண்பன் ராஜகோபாலனும் இடிந்து போனோம்.
”சரி உங்களுக்கு ஏதாவது மருந்து வேணும் என்றால் வாங்கித்தருகிறோம், டாக்டர் கிட்டே போகணுமா?” “வாணாம் ங்க.. சென்னை திரும்பிடலாம்”
இஷ்டமில்லாத, சந்தேகமாக கூறும் ட்ரைவரை வைத்துக்கொண்டு இரவு வரை கோவில் தரிசனம் செய்வது சாத்தியமில்லை. புத்திசாலித்தனமுமில்லை. ரொம்ப ரிஸ்க். ஆகவே திரும்பிவிட்டோம். அடுத்த சந்தர்ப்பத்தில் காஞ்சி ஆலயங்கள் அழைக்கும்.திருவேளுக்கை 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று. பேயாழ்வார் திருமஞ்சனம் பெற்றது. காஞ்சியில் திருத்தண்கா விளக்கொளிப் பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அஷ்டபுஜக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. உலகளந்த பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், பாண்டவ தூத பெருமாள் ஆலயங்கள் கும்பாபிஷேகத்துக்கு காத்திருப்பதால் பாலாலயம் செய்திருக்கிறார்கள்.”வேள்” என்றால் ஆசை. இந்த க்ஷேத்திரத்தில் நரசிம்ஹர் ஆசையோடு வாசம் செய்ய, இருக்க, விரும்பியதால் திரு வேள் இருக்கை, காலப்போக்கில் சுருங்கி திரு வேளுக்கை ஆகிவிட்டது.
மகாவிஷ்ணு நரசிம்மனாக அஸ்திசைலம் எனும் குகையிலிருந்து புறப்பட்டு ஹிரண்யன் மாளிகை தூணிலிருந்து வெளி வந்து, வேறொரு நரசிம்ம ரூபம் கொண்டு, தன்னை எதிர்த்த அசுரர்களை விரட்டிக் கொண்டே வந்து திருவேளுக்கை வந்து சேர்ந்தார்.பயந்து ஓடிய அசுரக் கூட்டங்கள் எங்கோ தப்பி ஓடி ஒளிந்து கொண்டதால், ”சரி இங்கே மறுபடி வந்தால் பார்த்துக் கொள்வோம் ” என்று இங்கேயே ஆசையாக யோகா நரசிம்மராக தங்கி விட்டார். பிருகு மகரிஷிக்குக் கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்த இடம் என்றும் சொல்வார்கள். கூட்டமே இல்லாமல் ஏகாந்தமாக நான் யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தந்த அழகிய சிங்கரை தரிசித்தேன். மகிழ்ந்தேன். வேறு பெயர்கள்: ஆளரி, முகுந்த நாயகன்.வேளுக்கைவல்லி, அம்ருதவல்லி, தனிக் கோவில் நாச்சியார் என்ற பெயர்களில் தாயார் தரிசனம் வெகு ஜோர். இத்தலத் தீர்த்தம் கனக சரஸ், ஹேம சரஸ் என பெயர் கொண்டவை. விமானம் கனக விமானம் .பேயாழ்வார் திருமங்கையாழ்வார் இங்கே அழகிய சிங்கரை தரிசனம் செய்து மங்களாசாஸனம் செய்த பாசுரங்கள் நிறைய இருக்கிறது.
மன நிம்மதியையும் தைரியத்தையும் கொடுக்கக் கூடிய ஒரே இடம் இந்த அழகிய சிங்க பெருமாள் சன்னதி தான்.எப்பேர்ப்பட்ட ப்ரச்னைகள் வந்தாலும் அதை எல்லாம் தூக்கி கடாசிவிட்டு சுகமாக இருக்க காரணம் தெய்வத்தின் துணை.இது காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது.அந்த ஆலயத்தைப் பற்றி தனியாக ஒரு பதிவு இடுகிறேன்.அழகிய சிங்கர் ஆலயம் மூன்று நிலை கோபுரம், ஒரு ப்ரஹாரம் என்று சின்ன கோயிலாக இது காணப்பட்டாலும் மூர்த்தி பெரிது.வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி, தனிக் கோவில் நாச்சியார் என்ற பெயர்கொண்டு விளங்குகிறார். இத்தலத் தீர்த்தம் கனக சரஸ், ஹேம சரஸ் ஆகியன. விமானம் கனக விமானம் எனும் அமைப்பைச் சார்ந்தது.