CHANAKYA NEETHI J K SIVAN

தீர்க்க தரிசி – நங்கநல்லூர் J K SIVAN

சாணக்ய நீதி

சாணக்கியன், கௌடில்யன், என்றெல்லாம் பெயர் கொண்ட ஒரு அதி புத்திசாலி பிராமணன் அவன். சந்திர குப்தன் என்ற சாதாரணன், பாரதத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை, தன் தாய் மூரா பெயரால் மௌரிய சாம்ராஜ்யம் என்ற பலமான ராஜ பரம்பரையை நிர்மாணிக்க காரணமானவன். கௌடில்யன் எழுதிய சாணக்ய நீதி ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் ஏற்று மதிக்கக் கூடிய நூலாக இருக்கிறது. அற்புதமான நீதி களை சொல்கிறது.
அதில் ஒரு சில ஸ்லோகங்களை படிக்கும்போது கௌடில்யனின் அறிவாற்றலை அறிய முடிகிறது.

आयुः कर्म च वित्तं च विद्या निधनमेव च ।पञ्चैतानि हि सृज्यन्ते गर्भस्थस्यैव देहिनः ॥ ०४-०१
āyuḥ karma ca vittaṃ ca vidyā nidhanameva ca pañcaitāni hi sṛjyante garbhasthasyaiva dehinaḥ ॥ 04-01

ஒவ்வொரு மானுடனும் தாயின் கருவில் உருவாகும்போதே ஐந்து விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அது என்ன ஐந்து?
1. அவன் ஆயுட்காலம். பிறந்து எத்தனை வருஷம் வாழப்போகிறான்?
2.அவன் என்ன காரியத்தில் ஈடுபடப் போகிறான்?
3.அவனிடம் எவ்வளவு பணம் இருக்கும்? தரித்திரனா? செல்வந்தனா?
4.அவன் எவ்வளவு படிப்பான்? என்ன படிப்பான்? அவன் கல்வியறிவு?
5.அவன் என்று எப்படி கடைசி மூச்சை விடப்போகிறான்?
என்னைப் பொறுத்தவை இதெல்லாம் ப்ரம்ம ரஹஸ்யம் என்று தான் நினைத்திருந்தேன். கௌடில்யனைப் படித்த பிறகு ஒருவேளை சாணக்கியன் தான் ப்ரம்மனோ என்று தோன்றுகிறது.

2. साधुभ्यस्ते निवर्तन्ते पुत्रमित्राणि बान्धवाः ।ये च तैः सह गन्तारस्तद्धर्मात्सुकृतं कुलम् ॥ ०४-०२
sādhubhyaste nivartante putramitrāṇi bāndhavāḥ । ye ca taiḥ saha gantārastaddharmātrsukṛtaṃ kulam ॥04-02

பகவானை சரணடைந்த தூய பக்தன் வாரிசுகள், சந்ததி, நண்பர்கள், உறவினர், எல்லோரையும் விட்டு பிரிபவன். அப்பற்று கொண்ட பிறகு இப்பற்று எதற்கு என்று இருப்பவன். அவனை பணிந்தவர்கள் பின்பற்றுவோர்கள், அவர்களது பக்தியால்,அவரவர் குடும்பங்களுக்கு நற்பெயரை, நன்மதிப்பை பெற்றுத் தருவார்கள். இதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். என் குடும்பத்தில் ஒருவர் சிறந்த யோகி, அருணகிரிநாதர் என்றால் எனக்கும் அவரை வணங்கி தொழுவதால், பக்தி, கொஞ்சமாவது இருக்கும், என்னால் என் குடும்பத்துக்கும் மதிப்பு தான் . சந்தேகமில்லை. உண்மையில் என் தாத்தா, வசிஷ்ட பாரதிகள், தூர உறவினர் தமிழ் தாத்தா இவர்களால் எனக்கும் பெருமை.

3दर्शनध्यानसंस्पर्शैर्मत्सी कूर्मी च पक्षिणी । शिशुं पालयते नित्यं तथा सज्जन-संगतिः ॥ ०४-०३
darśanadhyānasaṃsparśairmatsī kūrmī ca pakṣiṇī । śiśuṃ pālayate nityaṃ tathā sajjana-saṃgatiḥ ॥ 04-03

மீன் ஆமை போன்றவை கண்ணால், எண்ணத்தால் தமது சந்ததிகளை பரிபாலிக்கிறதே.மஹான்கள், ஆச்சார்யர்கள், தம் கண்ணால், மௌனத்தால், சைகையால் உன்னை ஆசிர்வதித்து, உனக்கு நல்வழி காட்டுபவர்கள் என்று புரிந்து அவர்களை சரணடைவாய்.

यावत्स्वस्थो ह्ययं देहो यावन्मृत्युश्च दूरतः । तावदात्महितं कुर्यात्प्राणान्ते किं करिष्यति ॥ ०४-०४
yāvatsvastho hyayaṃ deho yāvanmṛtyuśca dūrataḥ ।tāvadātmahitaṃ kuryātprāṇānte kiṃ kariṣyati ॥ 04-04

அப்போதைக்கு இப்போதே சமாசாரம் இது. உன் உடம்பு ஆரோக்யமாக, உன் கட்டுப்பாட்டில், ஆஸ்பத்திரி பக்கமே போகாமல் இருக்கும்போதே, மரணம் தொலை தூரத்தில் இருக்கும்போதே, உன் ஆத்மாவை உணர்ந்து கொள் . மரணம் நெருங்கிவிட்டால், உன் உடல் வியாதிகள் வசம் சிக்கிவிட்டால், உன் ஆரோக்யம் கெட்டு நீ ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும்போது ஆத்மாவை எப்போது எப்படி நினைப்பாய்?. நினைக்கவே மாட்டாயே . உன் எண்ணம் பூரா உடல் மேலே தானே இருக்கும். மரண பயத்தில் தானே தவிப்பாய்.

कामधेनुगुणा विद्या ह्यकाले फलदायिनी ।प्रवासे मातृसदृशी विद्या गुप्तं धनं स्मृतम् ॥ ०४-०५
kāmadhenuguṇā vidyā hyakāle phaladāyinī । pravāse mātṛsadṛśī vidyā guptaṃ dhanaṃ smṛtam ॥ 04-05

தம்பி, நான் சொல்வதை உன் மனதில் எழுதி வைத்துக் கொள் .காமதேனு எனும் கேட்டதையெல்லாம் கொடுக்கும் பசுவைப் போல தான் கல்வியும். கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. கல்வியைத் திருடன் கொள்ளையடித்துக் கொண்டு போக முடியாது. முதுகில் மூட்டையாக சுமந்து கொண்டு போகவேண்டாம். கல்வி ஒரு சுமை அல்ல. அது மனதில் எண்ணத்தில் குவிந்த ஒரு புதையல். கை வீசிக்கொண்டு காலாற எங்கு வேண்டுமானாலும் போகலாம். கல்வி எங்கு சென்றாலும் வாழ உதவும்,. கைகொடுக்கும். மரியாதை பெருமை எல்லாம் பெற்றுத் தரும். ஒன்றுமே தெரியாமல் வளர்ந்த பெரிசு நானே சில விஷயங்களைத்தெறிந்து கொண்டு அதைச் சொல்லும் எனக்கே எவ்வளவோ நண்பர்கள் இருக்கிறார்களே, சிறந்த கல்விமானைப் பற்றி கேட்கவேண்டுமா,சொல்ல வேண்டுமா, எழுத வேண்டுமா? பசித்த போது உணவூட்டும் அம்மா மாதிரி கல்வி. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்வது தான் கல்வி. ஞானம்.