சங்கடம் … நங்கநல்லூர் J K SIVAN
மனது சந்தோஷமாக சில சமயம் இருக்கும். பல முறைகள் ஏதோ கவலையில், துக்கமாக இருக்கும், சிற்சில சமயங்களில் அர்த்தம் புரியாத கலக்கத்தில் இருக்கும். ஏதோ ஒரு நிம்மதியின்மை அதன் அஸ்திவாரமாக இருக்கும். இது எல்லோரும் அனுபவிப்பது தான். அப்படி ஒரு நிலை எனக்கு ஒருநாள் கையில் பேப்பர் இருந்தது கண் அதை மேய்ந்தாலும் கருத்தில் எந்த எழுத்தும் புகவில்லை. அந்த சமயம் ஹாலில் tv யில் இருந்து பாட்டு என் செவியில் புகுந்தது. அது எப்போது கேட்டாலும் அலுக்காமல் என்னுள்ளே கிருஷ்ணனை பலப்படுத்தும் ஒரு பாடல் .”ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா” என்ற T.M.S.ன் அற்புத குரல். அதைக் கேட்டுகொண்டிருந்தபோது ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. சகாதேவனும் கண்ணனும் சந்திக்கும் கற்பனை. அதை எழுத உட்கார்ந்தேன். என் மனநிலை தான் சகாதேவனுக்கும். ஏதோ ஒரு சஞ்சலம்.
பாண்டவர்கள் எல்லாவற்றையும் தருமனின் சூதாட்டத்தினால் இழந்து பஞ்ச பராரியாக அமைதியான வனத்தில் இருக்கிறார்கள். பேரே அமைதியாக இருக்கிறதே. காம்ய வனம். ‘calm’ ய வனம்.
அந்த வனத்தில் பாண்டவர்கள் தங்கியஇருந்த ஆஸ்ரமத்திற்கு சற்று தள்ளி மரங்கள் அடர்ந்த சூழ்நிலையில் சல சலவென்று தெள்ளிய நீரோடு ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. அதன் இரு கரைகளிலும் அடர்ந்த வாச மிகு மலர்கள். காற்று வீசிய போதெல்லாம் நறுமணத்தை வாரி அள்ளி வீசியது. அங்கே சகாதேவன் அடிக்கடி வந்து உட்கார்வான்.
இன்றும் அதேபோல் சகாதேவன் தனியாக ஆற்றங்கரையில் உட்கார்ந்தவாறு எதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். தங்களுக்கு நேர்ந்ததையெல்லாம் ஆரம்பத்திலிருந்தே ஒன்றன் பின் ஒன்றாக யோசித்துக் கொண்டே அருகில் இருந்த சில சிறு கற்களை அந்த ஓடையில் வீசிக்கொண்டிருந்தான்.
அங்கே கிருஷ்ணன் வந்ததையோ, தன் பின்னால் நிற்பதையோ சகாதேவன் கவனிக்க வில்லை. கிருஷ்ணன் சகாதேவன் கவனத்தைக் கலைக்க கனைத்தபோதும் சகாதேவன் காது அதைக் கேட்கவில்லை. சஹாதேவன் தோளை தொட்டு உலுக்கினான் கண்ணன்
“சஹாதேவா!! எந்த கோட்டையை பிடிக்க யோசனை.?”
“அட கிருஷ்ணா,நீயா, என்ன பூனை போல் பேசாமல் வந்து நிற்கிறாயே. எப்போது வந்தாய்?
”நான் வந்து வெகு நேரமாகிறது. கேட்டதற்கு பதில் சொல்: எந்த கோட்டையை பிடிக்க யோசனை.?”
”என்ன கேள்வி இது கிருஷ்ணா, இருந்ததையே கோட்டை விட்டவர்களுக்கு எதற்கு புதிய கோட்டை ?”
“யுத்தம் வந்துவிட்டதே என்ன செய்யலாம் என்று யோசனையா?”
“யுத்தம் வரும் என்று தான் எல்லோருக்குமே இப்போது தெரியுமே எதற்கு எனக்கு தனியாக அந்த கவலை கிருஷ்ணா?”
“அப்படியென்றால் கௌரவர்களை ஜெயிக்க முடியாதோ என்ற பயமா, கவலையா?”
“அதைப்பற்றி நான் எதற்கு கவலைப்படவோ, பயப்படவோ வேண்டும்?”
“ஏன் உனக்கு பொறுப்பில்லையா?”
“எல்லாம் என்னிச்சைப் படியாகவா நடக்கிறது கிருஷ்ணா?”
சஹாதேவன் சிரித்தான் .
“என்னமோ சஹாதேவா!! நீ பேசுவது, நடந்துகொள்வது எல்லாம் எப்போதுமே எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது””………………………………………..”
என்ன பதிலையே காணோம் சகாதேவா??”“
”…………………………….”
”ஏதோ மறைக்கிறாய் சகாதேவா!!!. சொல்லேன்”
“விதியை மதி வெல்லுமா கிருஷ்ணா??”
“ஏன் இந்த பீடிகை?? புரியும்படி சொல்லேன்!!”
“தெரியாதவர்களுக்கு விளக்கி மறுபடியும் சொல்லலாம். எல்லாமே புரிந்தவனுக்கு எதற்கு புரியவைக்க வேண்டும்?”.
“இது தான் உன்னிடம் எனக்கு பிடித்த விஷயம்சகாதேவா … சொல்லாமல் சொல்வது உனக்கு கைவந்த கலை”“ “கிருஷ்ணா. இந்த யுத்தம் நிச்சயம் வரப்போகிறது என்று உனக்கு ஏற்கனவே தெரியுமல்லவா?
”……………………………….”
”இந்த யுத்தத்தில் யார் அழிவர், யார் மீள்வர் என்பதும் உனக்கு தெரியுமல்லவா ??
“என்ன பேசுகிறாய் சகாதேவா,எனக்கும் இந்த யுத்ததிற்கும் என்ன சம்பந்தம்? நான் உங்கள் நண்பன். இயன்ற உதவி புரிகிறேன். நீங்கள் சகோதர்களுக்குள் ஏதோ சண்டை போட்டுக்கொள்கிறீர்கள். அவ்வளவு தானே!”
” ஹ ஹ ஹ”” கிருஷ்ணா, நீ எங்களுக்கு மட்டுமா உதவுபவன்?”
” சஹாதேவா. நீ தான் இப்போது என்னை சோதிக்கிறாய்”
“ கிருஷ்ணா, பொம்மலாட்டத்தில் பொம்மைகள் ஆட அந்த இயக்குபவன் அல்லவோ கயிற்றை இழுத்து பிடித்து அவன் அசைப்பதற்கு ஏற்ப அல்லவோ பொம்மைகள் ஆடுகின்றன. இந்த யுத்தம், அதன் காரணம், அதன் விளைவு, முடிவு எல்லாம் உன் கையில் என்று எனக்கு மட்டும் தெரியும் கண்ணா!. நான் ஏன் கவலைப் பட வேண்டும்? உன்னை பற்றியே தான் நினைத்து கொண்டிருந்தேன்.
இன்று ஏதோ என்னையும் மீறி ஒரு சங்கடத்தில் மூழ்கி அதால் பெரும் சேதம் விளையப் போகிறதோ என ஓர் நிம்மதியின்மை எனக்குள் தோன்றுகிறது. ஏன் அப்படி, அது என்ன என்று தான் சிந்தித்துக் கொண்டி ருந்தேன். எது வரினும் அது நீ அறிவாய். எனவே நீயே அத்தகைய சங்கடத்திலிருந்து மீட்பவன். மீட்க வேண்டும், என்று தான் உன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். நான் நினைக்கும்போதே நீயே வந்து நிற்கிறாய்.”
“சஹாதேவா, நான் என்னப்பா செய்ய முடியும்? நீங்கள் அனைவரும் உங்கள் துன்பத்தை நீங்களே விலைகொடுத்து வாங்கிவிட்டு அதற்கு என்னை ஏன் குறை சொல்ல வேண்டும். உன்னைத் தேடி துரியோதனன் வருகிறானாம் எதற்கு என்று உன்னைக் கேட்க தான் வந்தேன்.ஆனால் நீ அதைப் பற்றியே வாய் திறக்கவில்லையே ”
“எனக்கே தெரியாது கண்ணா. ஆனால் அதுதான் ஒரு வேளை என் சங்கடத்துக்கு காரணமோ என்று தெரியவில்லை, கண்ணா””
“நடப்பது நடந்தே தீரும், வருவது பற்றி இன்று ஏன் கவலை கொள்கிறாய். என் மேல் பாரத்தை போட்டு விட்டேன் என்றாயே நான் தானே அதை இனி சுமக்க வேண்டும். அவ்வாறே ஆகட்டும்.”””
கண்ணன் சென்றான்.
++
சகாதேவன் ஞானி, சிறந்த வானசாஸ்திரி. துரியோதனன் சஹாதேவனை மஹா பாரத யுத்தத்தில் வெற்றி பெற பூஜை செய்வதற்கு ஒரு சிறந்த நாள் பார்த்து கொடுக்கச் சொன்னதும், சகாதேவன் அமாவாசைக்கு நாள் குறித்துக் கொடுத்தான். தன்னை நம்பி தனது சாஸ்திர அறிவை மெச்சி துரியோதனன் உதவி கேட்கும்போது சகாதேவன் பொய் சொல்ல மாட்டான், சரியான வெற்றி தரும் நாளைக் குறித்து கொடுப் பான் என்று துரியோதனனுக்குத் தெரியுமே. அவனுக்கு சகாதேவன் துரோகம் செய்யமாட்டான் என்று கிருஷ்ணனுக்கும் தெரியும். ஆகவே கிருஷ்ணன் போதாயன அமாவாசையாக ஒரு நாளை மாற்றி களபலி கொடுத்து பாண்டவர்க்கு வெற்றி தேடி தந்ததை நாம் தான் பாரதத்தில் படிக்கிறோமே.