THE FRUIT VENDOR J K SIVAN

பழக்கூடை – நங்கநல்லூர் J K SIVAN

கிருஷ்ணனை எப்படியெல்லாமோ பார்த்து மகிழ் கிறோம். ராஜாவாக, சிறு குழந்தையாக, ராதாவோடு விளையாடும் பிருந்தாவன சிறுவனாக, மஹா வீரனாக, கீதாசார்யனாக, பிரபல புல்லாங்குழல் வித்வானாக, யோகியாக, அவன் நமது மனதில் எதிர்பார்ப்பதை பிரதிபலிக்கும் ஸ்படிகம். இதோ ஒரு முத்தான கதை ஒன்று. ஏற்கனவே நீங்கள் அறிந்தது தான். மீண்டும் ஒருமுறை சேர்ந்து அனுபவிப்போம். உள்ளே செல்வோம்.

பிருந்தாவனமும் கோகுலமும் அடுத்தடுத்த ஊர்கள். பிருந்தாவனத்தில் ஒரு தள்ளாடி நடக்கும் பழுத்த குடு குடு கிழவி இருந்தாள். அவள் வீட்டிலும் அந்த ஊர் காட்டிலும் நிறைய பழ மரங்கள் உண்டு.அவற்றிலிருந்து தூக்க முடிந்த அளவுக்கு ஒரு கூடையில் பழங்களை பறித்து நிரப்பி தலை மேல் தூக்கிக் கொண்டு வந்து விற்பாள். அவள் பாடும் பாட்டுக்கா கவே நிறைய பழங்கள் விற்றுப் போகும்.சில நேரம் குழந்தைகளின் விளையாட்டில் மெய்மறந்து நிறைய பழங்களை சும்மாவே கொடுத்துவிடுவது அவளுக்கு வழக்கம். குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை அந்த பழம் பாட்டிக்கு.

கோகுலத்தில் கிருஷ்ணன் பலராமன் என்ற ரெண்டு குழந்தைகளின் அதிசயமான விஷயங்களை கேட்ட பாட்டி ஒருநாள் கோகுலம் சென்றாள். நந்தகோபன் வீட்டு வாசலிலே வந்து உட்கார்ந்தாள். அறிஷ்டன், பூதகி போன்ற மாறுவேஷ அரக்கர்கள் கிருஷ்ணனை கொல்ல வந்து கொண்டே இருந்த சமயம் என்பதால் தேவகியும் ரோஹிணியும் குழந்தைகளை வெளியே அனுப்புவதில்லை. வெளியாட்களையும் உள்ளே அனுமதிப்பதில்லை. அனாவசியமாக யாருடனும் பேச்சு கிடையாது. யாருமே கதவை திறக்கவோ வெளியே வந்து பேசவோ இல்லையாதலால் வெகுநேரம் காத்திருந்த பாட்டி திரும்பிச் சென்றுவிட்டாள். மறுநாளும் வந்தாள். அன்றும் அவளால் குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை. மற்ற குழந்தைகளுக் கெல்லாம்பழங்களை வாரி வழங்கினாள். அடுத்த இரண்டு நாள் அவள் வரவில்லை. ஆகவே சில நாள் கழித்து ஒருநாள் கோகுலம் வந்தாள் . அன்று நிறைய மாதுளை செக்க செவேலென்று பெரியதாக இருந்தவற்றை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.

வழக்கம் போல் நந்தகோபன் வீடு கதவு சாத்தி இருந்தது. வாயிற் காப்போன் வாசலில் கூர் வேலோடு நின்றிருந்தான்.

”என்ன பாட்டி அடிக்கடி இங்கே சுத்தறே . என்ன வேண்டும் உனக்கு?” என்றான் வாயிற் காப்போன்

‘எனக்கென்னப்பா இனி வேண்டும். ரெண்டு அழகான குழந்தைங்க இந்த வீட்டிலே இருக்காமே அதுங்களை பார்க்க தான் வந்தேன்”

“குழந்தைகளை எல்லாம் பார்க்க முடியாதும்மா நீ போ.

“இந்த பழங்களையாவது அவங்களுக்கு குடுக்கிறாயா?”

“பழமெல்லாம் வேண்டாம் நீ முதல்லே இடத்தை காலி பண்ணு”

“கிருஷ்ணன் யாருப்பா, பெரியவனா, சின்னவனா”?

“யாரங்கே குழந்தைகளை பத்தியெல்லாம் பேசறது” என்று யசோதை கிருஷ்ணனை தூக்கிக்கொண்டு வாசல் கதவுக்கு அருகே வந்துவிட்டாள். வயதான பாட்டியை அவளுக்கு தெரியுமே வெகுகாலமாக பிருந்தாவனத்தில் வசிப்பவளாயிற்றே. அவளிடமிருந்து நிறைய பழங்கள் வாங்கியிருக்கிறாளே.

“அட, பழக்கார பாட்டியா. எங்கே ரொம்ப நாளுக்கப்புறம் இந்த பக்கம் என்று கேட்டாள் யசோதை.

“உன் பையனா இவன். குறு குறுன்னு அழகா இருக்கானே. இவனுக் கென்ன பேரு வச்சிருக்கே” “கிருஷ்ணன்”

“கிருஷ்ணா, கிருஷ்ணா, உன்னைத் தாண்டா பாக்க வந்தேன்”

இதற்குள் கிருஷ்ணன் யசோதையின் இடுப்பிலிருந்து நழுவி கீழே நின்றான். மெதுவாக தன் கையால் பாட்டி அருகே வந்தான். அவள் கீழை இறக்கி வைத்த பழக்கூடையிலிருந்து ஒரு பழத்தை எடுக்க முயற்சித்தான்.

“டேய் திருடா. பழம் சும்மா கொடுப்பேனா. போய் ஏதாவது கொண்டு வந்து கொடு பழம் தரேன்” பாட்டி சிரித்தாள்.

பாட்டியும் யசோதையும் ஊர் கதை பேசிக்கொண்டிருக்கும்போது கிருஷ்ணன் உள்ளே மெதுவாக சென்றான். தன் சிறு கையால் அரிசி பானையிலிருந்து ஒரு பிடி அரிசி கொண்டு வந்தான். மெதுவாக தத்தி தத்தி அவன் நடந்து வருவதற்குள் வழியெல்லாம் அவன் கொண்டு வந்த சிறு கைப் பிடி அரிசி சிந்திவிட்டது. கிழவியிடம் வந்து கையை நீட்டும் போது ஒரு சில அரிசி மணிகளே இருந்தது. அவற்றை கூடையில் போட்டான். பொக்கை வாய் திறந்து கிழவி சிரித்து அவனை எடுத்து வாரி மடியில் இருத்திக் கொண்டாள்.

“கிருஷ்ணா உனக்கு வேண்டிய பழத்தை நீயே எடுத்துக் கோடா” என்றாள். கிருஷ்ணன் ஒரு பழத்தை எடுத்து கொண்டான். யசோதை குழந்தையோடு உள்ளே சென்றுவிட்டாள். கிழவி பாடிக்கொண்டே திரும்பி சென்றாள். போகும் வழியெல்லாம் அவள் நினைவு கிருஷ்ணன் மேலேயே இருந்ததால் கூடையின் கனம் தெரியவில்லை. வீடு திரும்பியபோது தான் ஏன் கூடை கனமாக இருக்கிறது என்று இறக்கி வைத்து பார்த்தாள். கிருஷ்ணன் கூடையில் போட்டிருந்த அரிசி மணிகள் முத்து, பவழம், வைரம், வைடூர்யமாக கூடையில் நிரம்பி இருந்தன.

”கிருஷ்ணா” என்று உள்ளத்தின் உள்ளேயிருந்து கிழவியின் குரல் கேட்டதே தவிர அவளுக்கு பேச்சு வரவில்லை. எனக்கும் மேலே என்ன எழுதுவதென்று தோணவில்லை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *