PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –    நங்கநல்லூர்  J K  SIVAN
மஹா பெரியவா சொன்ன கதை
உலகளவில்  அதிகமான மக்களுக்கு  தெரிந்த  ஹிந்து கடவுள்கள்  ராமனும்  கிருஷ்ணனும் தான். ராமன் என்றால்  சதா ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம். தான் மட்டும்  ஆனந்தமாக இருப்பவன் இல்லை.  மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன்.  எவ்வளவோ விதமான துக்கங்கள் வந்தாலும், மனம் சலனம் அடையாமல்,  அமைதியாக, சந்தோஷமாக, ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான்.   அவன் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் ராமாயணம் முழுதும் படித்தவர்களுக்கு தெரியும், புரியும்.  வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத்  தோன்றும்.

உலக சுக துக்கங்களால்  பாதிக்கப்படாமல்  தானும் ஆனந்தமாக இருந்து,  மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுபவன் தான் யோகி.  மனசு அலையாமல் கட்டிப் போட நமக்கு  ஒரே வழி  வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.
ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக  இப்படி அவதரித்தவர் தான் ராமர்.  ராமாயணத்தில் ராமர் பேசியதை கவனித்தால் எங்கேயும்  ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் சாரமான  பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு,  அதில் ஆனந்தம் துய்த்து, வாழ்ந்து காட்டியவன் ராமன்.

‘ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையே. அப்படிப்பட்டவனை  பக்தர்கள் கூப்பிட்டால் எப்படி கேட்பான்?அவனை கூப்பிட்டு என்ன  பிரயோஜனம்?’–  இப்படி  பேசுபவர்கள், கேட்பவர்கள்  இருக்கட்டும்.   ராமன் நம்மைப் போல் மனிதனாக  தோன்றிய  நாராயணன் என்று புரிந்தால்  இப்படி பேச மாட்டார்கள்.  நாராயணனை நாம் கூப்பிடவே வேண்டாம். நமது மனதில்  நாம் நினைப்பதே அவனுக்கு தெரியும். இது பற்றி  மஹா பெரியவா  சொன்ன  ஒரு உதாரண கதை இது: .
++
ஒரு ராமாயண நாடகம் நடக்கிறது. அதில் லவ- குசர்களை வால்மீகி, ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ- குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து, ‘இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா?
 நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்?

வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்கவேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித்தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.”

 பரமாத்மா, தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தை யாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யா  தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைத்தான் கட்டிக்  கொடுத்தாள்.
 ‘ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள். தனது என்ற விருப்பு- வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத் துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதேபோல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ஸ்ரீராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான்.

‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும், அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.

சாக்ஷாத் ஸ்ரீராமனை லக்ஷியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிற வர்களுக்குச்  சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.”++
ஆஹா… எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *