பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
மஹா பெரியவா தீர்ப்பு
மஹா பெரியவா ஜீவியவந்தராக, பேசும் தெய்வமாக, காஞ்சிபுரத்திலும் மற்ற யாத்ரா ஸ்தலங்களிலும் இருந்த போது, எந்த விளம்பரமும் இல்லாமலேயே ஆயிரக் கணக்கானோர் இரவும் பகலும் அவரைத் தேடி வந்து தரிசனம் பெற்றனர். அவரோடு பேசும் பாக்யம் பெற்றவர்கள் அவரிடம் தங்கள் குறையைச் சொல்லி திருப்தியான நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். மஹாபெரியவா ஒரு மஹா வைத்தியர், மஹா ஜட்ஜ், மஹா தர்ம தான பிரபு, மஹா ஜோசியர், அவருக்கு எத்தனையோ ROLES உண்டு. சொல்லி மாளாது.
இதோ ஒருநாள் காஞ்சிபுரத்தில் மடத்தில் ஒரு இளம் தம்பதி நமஸ்கரித்து கைகட்டி நிற்கிறார்கள்.பெரியவா இன்னொரு பக்தரோடு பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் நடுவில் அதை நிறுத்தி இந்த தம்பதியை பார்க்கிறார். முகத்தில் ஒரு சந்தோஷ புன்னகை.அந்த தம்பதிகளில் புருஷனைப் பார்த்து ”நீ மதுரை சேஷு கனபாடிகள் புத்ரன் ரகு தானே? ஆனா நீ இப்போ வெறும் ரகு இல்லையே, உங்கப்பா மாதிரியே பிரபல மதுரை ரகுநாத சாஸ்திரிகள். அப்படி தானே ?இவோ உன் பார்யாளா? இவள் த்ரிச்சினாப்பள்ளி வைத்தியநாத கனபாடிகள் பேத்தி இல்லையோ? சுப்ரமணிய வாத்யாருடைய ஒரே பொண்ணு,சரியா?
”ஆஹா எவ்வளவோ ஞாபக சக்தி பெரியவாளுக்கு!”
”போன வருஷம் உன்னோட தோப்பனார், மாமனார், ரெண்டு பேரும் உங்க கல்யாண பத்ரிகை எடுத்துண்டு வந்து ஆசீர்வாதம் வாங்கிண்டு போனாளே,நீயும் வந்து நமஸ்காரம் பண்ணியே. இப்போது தம்பதி சகிதமா வந்திருக்கேள் . ஒத்துமையா சந்தோஷமா இருக்கேளா?”’உங்க ஆசிர்வாதத்திலே சந்தோஷமா இருக்கோம் பெரியவா””ரகு, நீ சொன்னா போறாது. அவளைப் பார் வாயே திறக்கலே”
அந்த பெண் திக்கித் தட்டுத் தடுமாறி ”நான் அலமேலு பெரியவா, சந்தோஷமா….. தான் இருக்கோம்.”அவள் சந்தோஷமாகஇல்லை என்பது அவள் பேச்சின் த்வனியில் இருப்பதை மஹா பெரியவா உணராமல் இருப்பாரா?”இல்லேம்மா, உன் பேச்சும் உன் மனசிலே இருக்கிறதும் வேறேயா இருக்கே. என்கிட்டே நிஜத்தை சொல்லு?”அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே பெரியவா…” சொல்லும்போதே குரல் தழுதழுத்தது.
”இன்னும் நீ சொல்ல வந்ததை சொல்லலே. உன்குரலே உன்னை காட்டிக் கொடுக்கிறது. சொல்லு சீக்கிரம். என்ன ப்ராப்ளம்? நிறைய பேர் காத்திண்டு இருக்கா ”
அலமேலு பேசினாள் : ”பெரியவா எனக்கு தெய்வபக்தி ஜாஸ்தி. சாஸ்த்ர சம்ப்ரதாயம் எல்லாம் அனுஷ்டிக் கிறவள். கல்யாணத்துக்கு முன்னாலே எங்க குடும்பத்தோட, தெரிஞ்சவாளோடு, நிறைய கோவில் குளம் யாத்திரை, போவேன்.எனக்கு அது பிடிக்கும். பக்தி உண்டு. இப்போ ஒரு வருஷமா கல்யாணமாகி, எங்கேயுமே போகலே பெரியவா. அது தான் எனக்கு மனக்கஷ்டம்.”
”ஏன் போக முடியலே, என்ன காரணம்?””கல்யாணமானப்பறம் நான் எப்படி தனியா போகமுடியும், பர்த்தாவும் சேர்ந்து வந்தா தானே யாத்ரா பலன் கிடைக்கும்? நான் ரெண்டு மூணு தடவை கேட்டுட்டேன். அவர் வரமாட்டேங்கிறார்? ”அலமேலு கேவிக்கேவி அழத்தொடங்கிவிட்டாள் .
”என்ன ரகுநாத சாஸ்திரிகளே, நீங்க பண்றது நியாயமா? பத்னியை கண் கலங்க வைக்கலாமா? தீர்த்த யாத்திரை க்ஷேத்ராடனம் பண்ண தானே கூப்பிடறா? போனா என்ன?”
ரகுநாதன் பெரியவாளை சாஷ்டாங்கமாக இன்னொரு தடவை நமஸ்கரித்துவிட்டு பவ்யமாக ”அவ சொல்றது ஞாயம் தான் பெரியவா. வடக்கே க்ஷேத்ராடனம் போறதுனா ரெண்டு மூணு வாரம் ஆகிறது. குறைஞ்சது பத்து நாளாகவாவது ஆகும். மாசத்துக்கு, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை இப்படி போகணும் ங்கிறா? எப்படி முடியும் பெரியவா?”
”ஏன் போறதுல்லே உனக்கு என்ன கஷ்டம். ஆசையா தானே நீயும் வரணும் என்கிறா?’அவளை திருப்தி படுத்தறது உனக்கு கடமையில்லையா?”
”பெரியவாளுக்கு தெரியாதது ஒண்ணுமில்லே. நான் வைதீக வ்ரித்திலே இருக்கிறவன். அப்பாவுக்கும் வயசாயிட்டுது. அப்பா போய்ட்டு வர க்ரஹஸ்தாள் வீட்டு கார்யங்கள், என்னோட கிரஹஸ்தாள் காரியத்தோடு சேர்த்து நான் என் வைதீக தொழிலை பண்ணவேண்டி இருக்கு. இப்படி மாசத்துக்கு ஒரு தடவை, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவைன்னு நான் வைதீக டூட்டியை கவனிக்காம பத்து நாள் பதினஞ்சு நாள் க்ஷேத்ராடனம் பண்ணா என் தொழில் என்ன ஆறது?என் வைதீக கார்யம் எப்படி எல்லோருக்கும் பண்ணமுடியும்? எத்தனை பேர் ஆத்துக்கு நான் போயாகணும்? நீங்களே சொல்லுங்கோ பெரியவா?”
”ஓஹோ நீங்க ரெண்டு பேருமே தீர்மானமா தான் மத்யஸ்தத்துக்கு என்கிட்டே வந்திருக்கேளா?உன் பாரியா சொல்றதும் கரெக்ட். நீ சொல்றதும் கரெக்ட். அவளுக்கு அதிலே பக்தி. பர்த்தாவோட போறது தான் விசேஷம் என்கிறதும் நியாயம். உனக்கும் வைதீகம் தான் வ்ரித்தி அதையும் விடமுடியாது. விடக்கூடாது. முப்பது நாளும் நீ பிஸி. என்ன பண்ணலாம்?”
”பெரியவா தான் ஏதாவது ஒரு வழி காட்டணும்””
மடத்தில் அருகில் இருந்த எல்லோரும் இதெல்லாம் கவனித்துக் கொண்டு மஹாபெரியவா இதை எப்படி சமாளிக்கப்போகிறார் என்று ஆவலாக காத்திருந்தார்கள்.
”அலமேலு, நீ தீர்த்த யாத்திரை,க்ஷேத்ராடனம் போகணும் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை. உனக்கு தர்ம சாஸ்திரம் தெரியும். பர்த்தா கூட வந்தா தான் பலன்கிடைக்கும். ரகுவுக்கோ வைதீக கார்யங்கள் அவனை ஒரு நாளும் அந்தண்டை இந்தண்டை நகர விடாது. நான் சொல்றபடி செய். எப்போவாவது க்ஷேத்ராடனம் போகணும்னாக்க வீட்டை விட்டு காலடி வெளியே எடுத்து வைக்கறதுக்கு முன்னாலே ரகுநாத சாஸ்திரி களை கிழக்கு நோக்கி நிக்கச்சொல்லி நீ நமஸ்காரம் பண்ணு . ரகு , நீ உன் மேல் அங்கவஸ்திரத்தை எடுத்து அவள் கையில் வைத்து ஆசிர்வாதம் பண்ணி, இந்த அங்கவஸ்திரம் எனக்கு பதிலா என் ப்ரதிநிதியா , உன்னோடு வரட்டும். அதனாலே பர்த்தா கூட வந்தால் கிடைக்கிற புண்ய பலன் உனக்கு கிடைக்கட்டும் னு சொல்லி உன்னை ஆசிர்வதிக்கட்டும். இப்படி பண்றதாலே, அவரவர் காரியத்தை அவரவர் பார்த்தது போலவும் இருக்கும். புண்ய பலனும் ரெண்டு பேருக்கும் கிட்டும். யாருக்கும் மனசிலே கஷ்டமுமில்லே.”
மஹா பெரியவாளிடம் ப்ரசாதம் வாங்கிக் கொண்டு ரெண்டு பேரும் போகும்போது இருவர் முகத்திலும் சந்தோஷ ரேகை நிரம்பி இருந்தது. ஒரு குடும்பத்தின் பெரிய ப்ராப்ளத்தை ஒரு நிமிஷத்தில் மஹாபெரியவா தீர்த்து வைத்து விட்டாரே.