PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்   –  நங்கநல்லூர்  J K  SIVAN
மெத்து மெத்து தலைகாணி,
மஹா பெரியவா என்றாவது,எங்காவது  ஒரு கட்டிலில் தலைகாணி வைத்து படுத்து என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. கட்டாந்தரையில், ஒரு கல்லையோ, மரக்கட்டையோ வைத்துக்கொண்டு  படுத்துக்கொண்டு இருக்கும் படம் பார்த்து  வருந்தி இருக்கிறேன்.  காட்டிலும் மேட்டிலும் கொசுவிலும் ஈயிலும்  அவர் எதையும் லக்ஷியம் பண்ணாமல்  உட்கார்ந்தோ சுவற்றில் சாய்ந்து கொண்டோ, படுத்தோ தான் பார்த்திருக்கிறேன்.
பகலில் தூங்கக்கூடாது என்று பெரியவா பிறருக்கு மட்டும் உபதேஸித்ததில்லை; தானும் எத்தனை மைல்கள் நடந்தாலும் ஸரி, இடுப்பொடிய மணிக்கணக்கில் பக்தர்களுக்கு தர்ஶனம், தீர்த்தம் குடுக்க அமர்ந்திருந் தாலும் ஸரி, பகலில் உறங்கியதில்லை இந்த பேசும் தெய்வம்.
அப்படியே என்றைக்காவது படுத்துக் கொண்டால், அது மிகவும் அபூர்வமாக நடக்கும் நிகழ்ச்சி! மிகவும் வயஸான பின், உபவாஸம் அதிகமானபோது, உடலில் சற்று அஸதி உண்டானால் மத்யானம் சற்று படுத்துக் கொள்வது, தவிர்க்க முடியாததாக இருந்தது. அதுவும் கோரைப்பாயில்தான் படுத்துக் கொள்வார்.
ஸாதாரணமாக பெரியவா படுத்துக் கொண்டிருக்கும்போது யாராவது தர்ஶனம் பண்ண வந்தால், அவரை நமஸ்கரிக்கக் கூடாது என்பது நியதி!
பெரியவாளுடைய ஶரீரம் மிகவும் ம்ருதுவாக இருக்கும். எனவே இந்தக் கோரைப்பாயில் அவர் படுத்துக் கொண்டு எழுந்தால், அவருடைய முதுகில் வரிவரியாக பாயின் impression இருக்கும்.
ஒருமுறை ஒரு பக்தர் பெரியவாளுடைய முதுகில் இந்த கோரைப்பாயின் impression-ஐ பார்த்துவிட்டார் !
“பெரியவா ஏன் இந்த மொரட்டுப் பாய்-ல படுத்துக்கணும்? நல்ல எலவம்பஞ்சு மெத்தைல படுத்துக்கக் கூடாதா?…”   என்று ரொம்ப வேதனைப் பட்டார். அப்புறம் என்னபண்ணினார் தெரியுமா?விடுவிடுவென்று   யாரிடமும் சொல்லாமல்,  எதுவும் பேசாமல் நேராக கடைக்குப் போனார், நல்ல உஸத்தியான இலவம்பஞ்சில் ஒரு மெத்தை தலைகாணி வாங்கிக் கொண்டு நேராக பெரியவாளிடம் வந்தார்.
அந்த பக்தர் மனஸில் ஒரே படபடப்பு!பெரியவா அவரையும்  அவர் கைகளில்  இருந்த  திண்டு மெத்தை தலைகாணியையும்  பார்த்து அதிசயித்தார்.”என்ன இதெல்லாம்?”
“பெரியவா இதுல படுத்துண்டு நான் பாக்கணும்….’டேய்! நீ… குடுத்த மெத்தை, தலாணி எல்லாமே  ரொம்ப ஸுகமா இருக்குடா’…ன்னு சொல்லணும்” அந்த பக்தர்  பெரியவா முன்னால் மெத்தையும், தலைகாணியும் தரையில் வைத்தார்.
“என்னது? யாருக்கு?” என்பது போல் ஒரு பார்வை பெரியவா முகத்தில் பக்கத்திலிருந்த பாரிஷதர், பக்தரின் உதவிக்கு வந்தார்….
“பெரியவாளுக்காக மெத்தை வாங்கிண்டு வந்திருக்கார்..! கோரைப் பாய்-ல பெரியவா படுத்துண்டா அவருக்கு ரொம்ப மனஸு உறுத்தித்தாம்!…”
மஹா பெரியவாளுக்கு  பிற்காலத்தில் காது சரியாக கேட்கவில்லை என்பதால்  தொண்டர்  உரத்த குரலில் சத்தமாக கூறினார்.
மஹா பெரியவா சிரித்துக் கொண்டே தலையாட்டி  ஒரு சின்ன குழந்தையை வருடுவது போல், மெத்தையை தன் திருக்கரங்களால் தடவிப் பார்த்தார்……
“ரொம்ப வழவழன்னு இருக்கே!…”
“ஆமா பெரியவா….வெல்வெட் துணி போட்டு தெச்சிருக்கு…”
பெரியவாளுடைய சில வினாடி மௌனம்,’பேஷ் பேஷ் ,  ஏண்டா  உனக்கு  பீஷ்மருக்காக அர்ஜுனன் ஒரு படுக்கை தயார் பண்ணினானே  அது என்ன படுக்கை னு தெரியுமோ?”
“தெரியும்  பெரியவா,  ”அம்புப்படுக்கை”
“அதுதான் பீஷ்மருக்கு ஸுகம்மா  இருந்துது..! தேவலோகப் படுக்கை வேணுன்னு பீஷ்மர் கேட்ருந்தா… தேவேந்த்ரனே ஒரு படுக்கையை அனுப்பியிருப்பானே !”
மஹா பெரியவா தலையை அசைத்து சுற்றிமுற்றிலும்   பார்வையை சுழல விட்டார்…….
ஒரு வயஸான மனிதர் அங்கே ஓரமாக  நின்று  கொண்டிருந்தது தெரிந்தது..
“அதோ…..அங்க நிக்கறாரே ஒருத்தர்,  பார்,  பாவம். ரொம்ப வ்ருத்தர்!…எம்பது வயஸுக்கு மேல இருக்குமே ….! வெவஸாயி…! வாங்கின கடனைக் கூட அடைக்க முடியலியாம்…! ராத்ரி தூக்கமே வர மாட்டேங்கறதாம்….! இந்த மெத்தை, தலாணியை அவர்ட்ட குடு… கூடவே ரெண்டு போர்வையும் வாங்கிக் குடு! பாவம்…. கொஞ்சநாளாவது நிம்மதியா தூங்கட்டும்..”
“அப்போ….பெரியவா  உங்களுக்கு.?”…. என்று  இழுத்தார்  பக்தர்
”எனக்கு கோரைப்பாய்  தான் ஆனந்தமா இருக்கு!….எலவம்பஞ்சு உறுத்தும்! அதுல படுத்தா எனக்கு தூக்கம் வராது. கோரைப்பாயை தவிர மிச்சதெல்லாம் ‘கோரமான’ பாய்!…”
மெத்தை தலைகாணி வாங்கி வந்த பக்தருக்கு இப்போது எந்த ஏமாற்றமும் இல்லை. இலவம்பஞ்சு மெத்தையும், மெத்து மெத்து தலைகாணியும் அந்த விவஸாயியின் கண்களில் நன்றிக் கண்ணீரை வரவழைத்தன!
எளிமைக்கு முன்  சொகுசு நிற்குமா?  பரமஹம்ஸருக்கு படுக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த  ஒரூ நாணயம், காசு, முள்ளைப் போல் குத்தியது; நமக்கோ பீரோ சாவி,  வீட்டு சாவி, மொபைல் போன், எல்லாம்  படுக்கைக்கு அடியில் இருந்தால்தான் தூக்கமே வருகிறது.    நமக்கும்  மஹா பெரியவாளுக்கு எத்தனை தூரம்…..  நீண்டு கொண்டே போகிறதே. எப்போது  நெருங்கப்போகிறோம்?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *