பேசும் தெய்வம் — நங்கநல்லூர் J K SIVAN
பகவானின் ஸ்ருஷ்டி ரஹஸ்யம்.
மனிதன் ஒரு பக்கம். மற்ற நாலுகால், நூறு கால், காலே இல்லாமல், ரெக்கைகள் கொண்ட , நீரில், நிலத்தில், மரத்தில் வாழும் ப்ராணிகள் உயிரினங் கள்…. எல்லாமே ஜீவன் தானே. ஏன் கடவுள் இப்படி வித்யாசமாக ஒவ்வொன்றையும் படைத்திருக்கிறார்? என்ன காரணம்? இந்த கேள்விகள் உங்களுக்கோ எனக்கோ எழவில்லை. அதைப்பற்றி நாம் நினைக்க வில்லை. ஒருவேளை ரெண்டுக்கும் வித்தியாசமின்றி நாம் நடந்து கொள்வதாலோ,என்னவோ ?”
நாம் நினைக்காவிட்டாலும் எதைப்பற்றியும் எல்லோ ரைப் பற்றியும் சதா சர்வ காலமும நினைத்து கொண் டிருந்த மஹா பெரியவாளுடைய சிந்தனை இது. அதை முக்யமாக பகிர்ந்துகொள்வோம்:
“”மிருகங்கள் குறுக்குவாட்டில் ( horizontal ) வளர்கின்றன. இதனாலேயே அவற்றுக்குத்“திர்யக்” என்று பெயர். இது மாதிரி இல்லாமல் வேறு மாதிரியாக, உசரமாக மேல் நோக்கி (vertical) வளர்கின்ற மனிதன் மற்ற பிராணி களைக் காட்டிலும் மேலான நோக்கத்தை அல்லவா பெறவேண்டும்.? இப்படிச் செய்தால் தானே அவன் சகல ஜீவ இனங்களையும்விட அதிகமான சுகத்தை அநுபவிக்க உரிமை கொண்டவன். ஆனால் நடை முறையில் பார்த்தால் மற்றவைகளை விட அதிகமாக துக்கத்தைத்தான் மனிதர்கள் அநுபவிக்கின்றோம். மிருகங்களுக்கு நம்மைப் போல் இத்தனை காமம், இத்தனை கவலை, இத்தனை துக்கம்,இத்தனை மான அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்குப் பாபமே இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களை மனிதர்களாகிய நாம் தான் அநுபவிக்
கின்றோம்.
ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஒர் ஆயுதமும் இல்லை.
மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்தி ருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம்கொடுத்திருக்கிறார். நமக்குக் கொம்புஇல்லை. நகம் இல்லை. குளிரிலிருந்துகாப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டு இருக்கிறார். யாராவது அடிக்க வந்தால்எதிர்க்க முடியவில்லை. குதிரைக்குக் கொம்பு இல்லா விட்டாலும் ஒடுவதற்கு காலில் பலமும் வேகமும் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை.
இதற்கெல்லாம் போனதிலாகி உயர்ந்ததாக ஸ்வாமி மனிதனுக்குத் தான் புத்தியை அதிகமாக வைத்திருக் கிறார்.
குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால். மற்றப் பிராணிகளின்போர்வையை இவன் பறித்துக் கொண்டு விடுகிறான். கம்பளியாக நெய்து கொள்கி றான். வேகமாகப் போகவேண்டுமா. வண்டியிலே குதிரையைக் கட்டி, அதன் வேகத்தை உபயோகப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை மனிதனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார். தன்னைக் காத்துக்கொள்ள சரீரத்திலேயே ஆயுதம் இல்லாவிட்டாலும், வெளியிலி ருந்து கத்தி, ஈட்டி, வாள் , கோடாலி, அம்பு வில், போன்ற தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கி றான்.இவ்வாறாக புத்தி பலம் ஒன்றை மட்டும்கொண்டு, மற்ற ஜீவராசிகள், ஜட ப்ரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.
மிருகம் ஒவ்வொன்றும் அதன் வாழ்வாதார சூழ்நிலைக்கேற்ற பிராந்தியத்தில்தான் வசிக்கும். இருக்கும். குளிர்ப்பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது.இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுதும் வாழ்கிறான்.அங்கங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தி அந்த சூழ் நிலை யைத் தனக்கு சாதகமாக செய்து கொள்வான் என்று இப்படி விட்டிருக்கிறார்.
பின் எதற்காக இந்த உயர்ந்த புத்தியை வைத்துக் கொண்டும் மனிதன் கஷ்டப்படுகி றான். துக்கப்படு
கிறான்?.
பிறந்து விட்டதனாலே இவ்வளவு கஷ்டம். இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது?. பிறப்புக்குக் காரணம் என்ன.? நாம் ஏதோ தப்பு பண்ணியிருக்கிறோம். அதற்கு தண்டனையாக இத்தனை கசையடி வாங்கவேண்டும் என்று விதித்திருப்பதால் இந்தஉடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி தண்டனை ஆன பிறகு இந்த உடம்பு போய் விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்புவாங்குகிறது. காமத்தினால், பாபத்தைச் செய்வதினாலே ஜனனம் உண்டாகிறது.காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால் ஜனனம் இல்லை. கோபத்தி னாலேயே பல பாபங்களைச் செய்கிறோம்.
கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்துவிட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.
ஆசைக்குக் காரணம் என்ன? நம்மைத் தவிர இன்னோன்று இருப்பதாக எண்ணுவதால் அதனிடம் ஆசை வருகிறது.
உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது. ஒரு மாடு தன்னைக் கண்ணாடியில் பார்த்து விட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைப்பதில்லையே. இரண்டும் தானே தான். ஒன்றே தான் என்று தெரிந்து அவன் சாந்தமாக இருக்கிறான்.நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான்.
இரண்டாவது என்று எண்ணினால் ஆசைவரும்.
ஆசை வருவதினால் கோபம் வருகிறது.
கோபம் வருவதினால் பாபங்களைச்செய்கிறோம்.
அதனால் ஜன்மம் உண்டாகிறது.
எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை. பாபம் இல்லை. காரியம் இல்லை. ஜனனம்இல்லை. துன்பமும் இல்லை. இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது?.
நம்மைப் பெற்ற அம்மா நம் உடம்பு வளர பால்கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞானஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாவிந்தங்களைப் பற்றிக் கொண்டுஅவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும். மனிதன்அப்போது தெய்வமாவான்.
முதலில் மனிதன் மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்தி விடவேண்டும். இந்தக் குறிக்கோளுடன் தான் சகல மதங்களும் உண்டானது . சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுள் எத்தனை பேத மிருந்தாலும்,இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரேயடியாக காமக் குரோதிக ளுடன் சேர விடக்கூடாது. இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ணவேண்டும்.”