”ஓ ராமா நீ நாம எந்த ருசிரா!! – நங்கநல்லூர் J K SIVAN
வெயில் கொளுத்துகிறது. அக்னி எங்கும் பரவி உள்ளது போல் இருக்கிறது. இந்த வருஷம் ஜாஸ்தி என்கிறார்கள். வெளியே போகாமல் வீட்டில் கட்டிபோடப்பட்டிருக்கிறேன்.
விடிந்தால் ஸ்ரீ ராமநவமி. பங்குனி அமாவாசைக்கு பிறகு வளர்பிறை நவமி மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும், முதல் முழு மனித வடிவ அவதாரமாகவும் ஸ்ரீராமனாக அவதரித்த தினம். அயோத்தியில் மட்டுமல்ல ஹிந்துக்கள் உள்ள இடங்களில் எல்லாம் நாளை 17.4.24 ஸ்ரீராம நவமி கொண்டாடுகிறோம். 7000 ஆண்டுகளுக்கு முன் த்ரேதா யுகத்தில்பிறந்தாலும் என்றும் நம் மனதில் உள்ளவன் ராமன். ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் கம்ப ராமாயணம் துளசி தாசர் ராமாயணம் அத்யாத்ம ராமாயணம் என்று பல நூல்களின் நாயகன். ஸ்ரீராம நாமம் தாரக மந்திரம். பாவங்களை போக்கக் கூடியது.
நாளை ஸ்ரீராம நவமி விழா 17.4.24 புதன்கிழமை சித்திரை மாத வளர்பிறை நவமி திதி. இன்று மலை 05.47 மணிக்கே நவமி திதி துவங்கி விடுகிறது. மே 17ம் தேதி இரவு 7 மணி வரை மட்டுமே நவமி திதி
ராம நவமியன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிப்பார்கள். ஸ்ரீராமருக்கு பிரியமான வெண் பொங்கல், பருப்பு வடை, நீர் மோர், பானகம் நைவேத்தியம். முடியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது இரண்டு மஞ்சள் வாழைப்பழம், ஒரு டம்ளர் பால் அல்லது நீர்மோர் . எதை அர்ப்பணித்தாலும் ” ஜெய்ராம் சீதாராம்” எனும் ராம மந்திரத்தை சொன்னாலே போதும். நாள் முழுவதுமே ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பதோ மனதில் நினைப்பதோ ரொம்ப உன்னதம்.
துளசி, தாமரை புஷ்பங்கள் ராமருக்கு சாத்தலாம். கோவில் வாசலில் நின்று, வருவோர் போவோர்க்கு வெயிலுக்கு நீர் மோர் தானம் கொடுக்க முடிந்தவர்கள் பாக்கியசாலிகள். குடை விசிறி தானமாக கொடுப்பவர்கள் கர்ணன்கள்.
உலகெங்கும் ராமன் அறியப்பட்டவர். பல வித கதைகள், பெயர்கள் உருவங்களோடு திரிந்த ராமாயணம் அங்கெல்லாம் உள்ளது. ராமன் சம்பந்தப்பட்ட, ராமாயண கால நிகழ்ச்சிகள் பல ரூபங்களில் ஊருக்கு ஊர் மாறுதலோடு காணப் பட்டாலும் அத்தனைக்கும் ஏதோ ஒரு ஸ்வாரஸ்ய கதை, காரணம், இருக்கிறது. ராமாயணம் என்றும் அழியாத காவியமாக நிலைத்திருக்க இதுவும் ஒரு காரணம்.
உலகத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றவர்கள் கூற்று ஒரு புறம் இருக்கட்டும். புதைபொருள் ஆராய்ச்சி, சரித்திர ஆதராரங்கள், இலக்கிய, சாஸ்திர வேத நூல்கள், புராணங்கள், புலவர்கள், கவிஞர்கள் எழுதி வைத்தது, கூறுவது, நாட்டுப்பாடல்கள், கூத்துகள், சாராம்சம் இவற்றினாலும் ராமாயணம் வாழ்கிறது. இனிக்கிறது. ஆளுக்கு ஆள் ஏதேதோ சொல்லும்போது கொஞ்சம் அங்கங்கே உதைக்கும். வேறுபடும். அதனால் என்ன?. ராமன் என்றும் உள்ளான். ராமனோ ராமாயணமோ கட்டுக்கதை அல்ல, ஒரு உண்மையின் நிருபணம். இலங்கையில் ஆடம் ப்ரிட்ஜ் இருக்கும் வரை, சேது பாலம் அழியாத வரை, கொஞ்சம் மண்ணை முதுகில் தடவி கடலில் சேர்த்த அணிலின் முதுகில் மூன்று கோடுகள் இருக்கும் வரை ராமாயணமும் ராமனும் நமக்கு மறக்காது. .
எப்போதுமே எது ரொம்ப மோசமோ, உயர்ந்ததோ, அது மட்டுமே ஞாபகத்தில் நிற்கும். ராமனை ஏன் நாம் 7000 வருஷங்களுக்கு அப்புறமும் நினைக்கிறோம் , படிக்கிறோம், பாடுகிறோம், புகழ்கிறோம், வணங்குகிறோம் என்றால் ராமன் ஒரு உன்னத புருஷன், ஈடற்ற மனிதன், அரசன், உதாரணன். இது உயர்ந்த குணம் பண்பு. கடைசி ஹிந்து வரை மறக்கமாட்டேன். நடுவில் யாராவது என்ஜினீயரா, டாக்டரா , வக்கீலா என்று குதர்க்கம் பேசினால் அதை காலில் தூசியாக தட்டி விடுகிறோம்.
ராமனை உலகமே புகழ்கிறது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில், பர்மா, தாய்லாந்த், இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன் தீவுகள், வியட் னாம், மலேசியா, சிங்கபூர் இங்கெல்லாம் ராமாயணமும் ராமனும் நன்றாகவே பரிச்சயம்.
ஆப்ரிக்காவே ஒரு கால கட்டத்தில் குசத்வீபம் என்று பேர் கொண்டது. குசன் ராமனின் ஒரு பிள்ளை, அங்கு ஆட்சி புரிந்திருக்கிறான்.
கோவிலில் ராமனை விக்ரஹமாக பார்த்து வழிபட்டாலோ, ராமனைப் பற்றி படித்தாலோ, பிரசங்கமாக கேட்டாலோ, டிவியில் பார்த்தாலோ, ராம நாடகப் பாட்டு கேட்டாலோ, நாமே தெரிந்தவரையில் பாடினாலோ, ஒருவித சந்தோஷம், உள்ளே ஏற்படுகிறதல்லவா. இதை அனேக கோடி மக்கள் இன்றும் அனுபவித்து வருகிறார்களே.
ராமன் பிறந்த நேரம், காலம், ஜாதக பலன் அனைத்தும் அநேக பண்டிதர்களால் இரவு பகலாக அலசப்பட்டுள்ளது. ராம சகாப்தம் என்ற புத்தகம் எழுதியவர் புஷ்கர் பட்நகர் . ராமன் சரித்திர பூர்வமானவன். வால்மீகி, ராமன் காலத்தில் வாழ்ந்த ரிஷி. ராமன் அவதாரமான நேரம், அப்போது காணப்பட்ட கிரகங்கள் ,ராசிகள், நக்ஷத்ரங்கள், இவை எந்த இடத்தில் இருந்தன என்று ராமாயணத்தில் விலாவாரியாக புட்டு புட்டு வைத்திருக்கிறார் வால்மீகி. இது ஒரு அதி உன்னதமான வான சாஸ்திர உண்மை. தற்கால விண்வெளி நிபுணர்கள் astro physics specialists இது சரியே என்று தலையாட் டுகிறார்கள். எனவே ராமாயணம் கட்டுக்கதை இல்லை. ராமனது வாழ்க்கையை அவன் ஜாதக பலனின் செயல்பாடுகள் நிரூபிக்கிறது.
ராமன் பிறந்த நேர ராசி, க்ரஹ, நக்ஷத்திர கூட்டமைப்பு ஏழாயிரம் வருஷங்களாகியும் மீண்டும் அதே போல் இன்னும் இதுவரை அமைய வில்லையாம். பட்நகர் சொல்கிறார். இது மாதிரி யாராலும் கற்பனை கூட பண்ணக்கூட முடியாது. இது ஓர் அதிசயம் என்கிறார். இது இவ்வாறு நேரப் போகிறது என்று அறிந்து, முன்கூட்டியே தான் வால்மீகிக்கு அந்த பாக்யத்தை நாராயணனே கொடுத்திருக்கிறார். எழுத வைத்திருக்கிறார். நமக்கு வேண்டுமே என்று நிதர்சனமாக பார்த்து இதை ராமாயணத்தில் வால்மீகியை எழுத வைத்திருக்கிறார்.
ராமாயணத்தில், ராமன் நவமி திதியில், சுக்ல பக்ஷத்தில், சைத்ர மாதத்தில், (சித்திரை ஒன்பதாம் நாள், வளர்பிறையில், புனர்பூச நக்ஷத்ரத்தில் பிறந்தான். அப்போது, சூரியன், செவ்வாய், சனி, புதன், சுக்ரன் எந்த க்ரஹத்தில் , எந்த ராசியில், லக்னம், என்ன என்று ராமாயணத்தில் ஸ்லோகம் 1.18.8,9 ல் வால்மீகி சொல்லி யிருக்கிறார்.
ततो यज्ञे समाप्ते तु ऋतूनां षट् समत्ययुः | ततश्च द्वादशे मासे चैत्रे नावमिके तिथौ || १-१८-८
tato yajñe samāpte tu ṛtūnām ṣaṭ samatyayuḥ | tataḥ ca dvādaśe māse caitre nāvamike tithau || 1-18-8
नक्षत्रेऽदितिदैवत्ये स्वोच्चसंस्थेषु पंचसु | ग्रहेषु कर्कटे लग्ने वाक्पताविंदुना सह || १-१८-९
nakkṣatre aditi daivatye sva uccha saṃstheṣu paṃcasu | graheṣu karkaṭe lagne vākpatā iṃdunā saha || 1-18-9
ராமன் பிறந்தபோது ”வசிஷ்ட மகரிஷி, நீங்களே இவனுக்கு ஒரு பெயர் வையுங்கள்”” என்கிறார் தசரதர்.
யோசனையே பண்ணவில்லை வசிஷ்டர் ”’ராம ” என்று எல்லோராலும் இவன் வணங்கப் படுபவன்.”
யோசித்தால் ஏன் வசிஷ்ட மகரிஷி ”ராம” என்ற பெயர் வைத்தார் என்பது புரியும்.
ஹிந்து சமயத்தில் சைவர்கள் தொழ ஏற்றது ”ஓம் நமசிவாய” எனும் பஞ்சாக்ஷரம். வைணவர்கள் ஏற்றது ”ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய” என்ற அஷ்டாக்ஷரமும் . ”ரா” என்ற அஷ்டாக்ஷர நாராயணாய மந்திரத்தின் ரெண்டாவது எழுத்தையும் ”நமசிவாய” எனும் பஞ்சாக்ஷர மந்திர ரெண்டாவது எழுத்து ”ம’ வையும் சேர்த்து , சிவனும் நாராயணனும், ஹரியும் ஹரனும் சேர்ந்த நாமமாக ‘ ராம’ எனும் பெயரை வைத்தார் வசிஷ்டர்.
மொத்தத்தில் எல்லா ஹிந்துக்களும் வணங்கி ராமன் அருள் பெறுவோமாக
”நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ”ராம” என் றிரண்டெழுத்தினால்”
நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து நம்மை சூழ்ந்துள்ள தீய சக்திகள் விலகி எல்லோரும் அன்போடும் பண்போடும், பக்தியோடும் அவன் கருணையோடு வாழ்வோமாக.