திவ்ய திருஷ்டி – நங்கநல்லூர் J K SIVAN
ஹஸ்தினாபுரத்தில் எவர் மனத்திலும் நிம்மதி இல்லையே, ஏன்? சீரும் சிறப்புமாக சகல வளமையோடு உள்ள தேசம். எவருக்கும் எந்தக் குறையுமில்லாமல் பீஷ்ம கர்ண துரோணாதிகள் துணையோடு துரியோதனன் ஆண்டுவருகிறான். அரண்மனையில் உள்ளவர்களுக்கும் ஏதோ ஒரு சஞ்சலம் மனதில் குடிகொண்டிருந்தது. மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடி பேசினார்கள்.”யுத்தம் வந்தால் நமக்கும் ஆபத்தோ?
“இருக்காது. நம்மை எவரும் கொல்லவோ , துன்புறுத்தவோ மாட்டார்கள். ராஜாக்கள் தங்களுக்குள்ளே சண்டையிடுவார்கள் என்று தான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். ஆனாலும்…”என்ன ஆனாலும்???”கிருஷ்ணனை விரோதியாக பாவித்து, அவமதித்து அவனை உதாசீனம் பண்ணுவது அக்கிரமம். அது நமக்கும் நல்லதல்ல. நமது ராஜா துரியோதனனுக்கும் நல்லதில்லை. அதன் பலனை அவன் மட்டுமல்ல, நாமும் அனுபவித்தே தான் ஆகவேண்டும்.. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று?”
எல்லோருமே அந்த ராஜ சபையில் அமைதியின்றி இருந்தனர். திருதராஷ்ட்ரன் மகனிடம் சொன்னான்:
“துரியோதனா , எனக்கென்னவோ கிருஷ்ணன் சொல்வதில் ஞாயம் இருக்கிறது என்று தான் படுகிறது.. பாண்டவர்களுக்கு பாதி ராஜ்யமாவது கொடுத்து விடு”.
“அப்பா, உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. நீங்கள் பேசாதீர்கள். எனக்கு எல்லாம் தெரியும். நான் நிறையவே யோசித்திருக்கிறேன் இது பற்றி. எல்லாம் ஆரம்பத்திலேயே நீங்கள் இடம் கொடுத்ததால் வந்த வினை தான் இது.”
“துரியோதனா, நான் மறுபடியும் சொல்கிறேன். பாண்டவர்களோடு யுத்தம் வேண்டாம். அதால் அனர்த்தம் தான் விளையும்” என்றான் கிருஷ்ணன். பாண்டவ தூதனாக வந்தவன் அல்லவா கிருஷ்ணன்.
“நீ நேரத்தை தான் வீணாக்குகிறாய் கிருஷ்ணா” . எகத்தாளத்தோடு மீசையை முறுக்கியவாறு ஏளனமாகச் சிரித்தான் துரியோதனன்.”கிருஷ்ணா, நீயா ராஜதந்திரம் பேசுகிறாய். உன் அனுபவம் என்ன என்று மறந்து விட்டாய் போலிருக்கிறது பசுக்களும் கன்றுகளும் மாடுகளோடும் பழகுகிறவன் நீ. உனக்கென்ன ராஜரீகம் தெரியும்? பாண்டவர்கள் நாடோடிகள்.அவர்கள் நிலையை அவர்களே வரவழைத்துக் கொண்டவர்கள். நீ அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது ரொம்ப பொருத்தம் தான் ” என்றான் சகுனி.
“நிறுத்து சகுனி, அதிகமாக பேசாதே. ஆத்திர பேச்சு அழிவில் முடியும்” என்றாள் காந்தாரி.
“கிருஷ்ணா, என்னை மீறிப் போகிறது நிலைமை. என்னால் ஒன்றும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை. நீ கேட்டபடி ஐந்து ஊரோ, ஐந்து வீடோ கூட தர மறுக்கிறான் எனக்கு மகனாக பிறந்த இந்த துரியோதனன்.நான் என்ன செய்வேன்?. என்று நா தழுதழுக்க வருந்தினான் திருதராஷ்ட்ரன்.
“யுத்தத்தின் விளைவு உனக்கு சாதகமாகவே இருக்கும் என்று கனவு காணாதே துர்யோதனா. இதுவே உனக்கு நான் கொடுக்கும் கடைசி சந்தர்ப்பம். கெடுமதியை விடு” என்று கிருஷ்ணன் கடைசியாக சொன்னான்..
“கிருஷ்ணா உன் தூது அர்த்தமில்லாத கோமாளித்தனம். ஊசி முனை இடம் கூட பாண்டவர்களுக்கு கிடையாது. போய்ச் சொல் அவர்களிடம்” என்றான் துச்சாதனன்.
“துரியோதனா, யாரிடம் பேசுகிறாய் என்று நினைவில் கொண்டு பேசு. கிருஷ்ணன் சொல்வதைக் கேள்” என்றார் பீஷ்மர்
“தாத்தா நீங்கள் எங்களிடமே இருந்து சாப்பிட்டுக் கொண்டு கொண்டு எதிரிகளையே புகழும் மாற்ற முடியாத பிறவி. உங்கள் வார்த்தைக்கு மதிப்பு ஏது” என்றான் கர்ணன்.
“கர்ணா நீ பேசவே தகுதியற்றவன். வாயைத் திறக்காதே” என்றார் பீஷ்மர்.
“நான் தூதுவனாக வந்ததால் நீ தப்பினாய் துரியோதனா. பாண்டவர்கள் உங்களை யுத்த களத்தில் சந்திப்பார்கள் ” என்று எழுந்தான் கிருஷ்ணன்.
திருதராஷ்ட்ரன் தட்டுத் தடுமாறி கிருஷ்ணன் அருகில் வந்து அவன் காலை பிடித்தான். “உன்னை பார்க்கக் கூட முடியாத பிறவி நான் கிருஷ்ணா”.
“வருத்தம் வேண்டாம் த்ரிதராஷ்டிரா.நீ என்னை பார்க்கலாம்.” கிருஷ்ணன் தன் முழு உருவை விஸ்வரூபத்தைத் திருத ராஷ்ட்ரன் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாக திவ்ய திருஷ்டி கண்களை அளித்து காட்சியளித்தான்.திகைத்து ஆனந்தப்பட்டு த்ருத ராஷ்ட்ரன் ”கிருஷ்ணா,பகவானே, என் பிறவி, பயன் அடைந்துவிட்டது. என் குலமும் மக்களும் அழிவைத் தாங்களே தேடிக் கொள்கிறார்கள். அது அவர்கள் வினைப்பயனே. போதும்,,போதும், இந்த பார்வை எனக்கு!. மீண்டும் கண்களைப் பெற்று என் கண்ணெதிரேயே என் மக்கள் அழிவதை நான் பார்க்க விரும்பவில்லை” என்று வணங்கினான் திருதராஷ்ட்ரன்.