உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி
31 . ப்ரம்ம ஞானி
”தன்னை யழித்தெழுந்த தன்மயா னந்தருக்
கென்னை யுளதொன் றியற்றுதற்குத் – தன்னையலா
தன்னிய மொன்று மறியா ரவர்நிலைமை
யின்னதென் றுன்ன லெவன்பரமாப் – பன்னும் ”31
நமக்கு தெரிந்த நாம் அடிக்கடி உபயோகிக்கும் சில வார்த்தைகள் : ”தன்னை மறந்து ”, ” தானாகவே” ” தன்னை அறியாமல், ”– இதில் ”தான்” என்பது யார், என்ன? தேகத்தை மனதில் நினைத்து இதைச் சொன்னால் அது அகந்தையை, அஹங்காரத்தை குறிப்பிடும். அதனால் தான் பல சங்கடங்கள் நிகழ்கிறது. ‘ என்னவோ சொல்லத் தெரியலே, ரொம்ப சுகமாக தன்னையறியாமல் தூங்கினேன்” எனும்போது அங்கே உடம்பு இல்லை. உடம்பின் அதிகாரத்தில், மனதின் கட்டுப்பாட்டில் எதுவும் நடக்கவில்லை. அதால் தான் அவ்வளவு சுகம். மனமும் தேகமும் இன்றி, ஆத்மாவை அறியாமலேயே இத்தனை சுகம் என்றால், அந்த சாக்ஷாத் காரம் கிடைத்து விட்டால்!?
உண்மையான ”நான்” இதெல்லாம் இல்லை. உள்ளே நோக்கி விடாது முயற்சி செய்து ஹ்ருதயத்தில் அடிவாரத்தில் சுருண்டிருக்கும் ”நான்” தான் ஆத்மா. அதை உணர்ந்து விட்டால் உலகம், மனம், அஹங்காரம் எல்லாம் ஒடுங்கும். அப்படி அதை அடைந்தவன் தான் ஞானி. அவனுக்கு அப்புறம் அடைவதற்கு ஒன்றுமே இல்லை. ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவன் இருப்பது எல்லையற்ற ஆனந்த நிலையில்.. அதை எவரால் வர்ணிக்கவோ, விவரிக்கவோ முடியும்?. வார்த்தைகள் இல்லையே. வார்த்தைகள் எல்லைக்குட் பட்டவை.
அஹங்காரம் முற்றிலும் ஒழிந்தால் தான் ஆத்மானுபூதி கிட்டும். அர்த்தம் விளங்கும். சரீரத்தை மறந்த, தேஹம் என்று ஒன்று இருப்பதையே நினைக்காத விதேஹ ஞானியை ப்ரியம் அப்ரியம் எதுவுமே நெருங்காது. விருப்பு வெறுப்பற்றவன். தானாகிய ஆத்மாவைத்தவிர வேறொன்றறியாதவன்.
இத்தகைய ப்ரம்ம ஞானியை சாதாரணர்களால் புரிந்து கொள்ள முடியாது. சேஷாதிரி ஸ்வாமிகள் பைத்தியம் என்ற பட்டத்தை, விருதை, எளிதில் பெற்றார். அது கூட அவருக்கு தெரியாது.
பகவான் வேறு, தான் வேறு, என்ற நிலையில்லாமல் எல்லாம் ஒன்றேயானவர்கள் ப்ரம்ம ஞானிகள். 24 மணி நேரமும் அனைவரும் பருகக்கூடிய தீங்கனிச் சுவையாக இருந்தவர்கள். இதோ சமீபத்தில் நாம் அனுபவித்த மஹா பெரியவா அவர்களில் ஒருவர்.