அருமையான குரு அபிமான சிஷ்யன்’’- 1 நங்கநல்லூர் J.K. SIVAN
நடிகன் என்றால் உடனே சிவாஜி கணேசன் நினைவுக்கு வருவது போல் ராமானுஜர் என்றால் கூரத்தாழ்வான் அவருக்கு முன்பாக நம் கண் முன் தோன்றுகிறார். யார் இந்த கூரத்தாழ்வான்?. ராமாநுஜரைப் பற்றி பேசும்போது கூரத்தாழ்வானைப் பற்றிசொல்லாமல் விட முடியாது. குருபக்தி சிரோமணி. அருமையான குருவுக்கு அற்புதமான சிஷ்யன்,. ஸ்ரீ ராமானுஜ – கூரத்தாழ்வான் குரு- சிஷ்ய பாவம் என்னை மிகவும் கவர்ந்து அதைப் பற்றி படிக்க எழுத ஆர்வம் வளர்ந்தது. ஆவலோடு நான் தேடிப் பிடித்த, படித்த சில சம்பவங்களை தான் எழுதுகிறேன்.
ரொம்ப வசதியான குடும்பம். நிலம் நீச்சு என்று ஏராளமான சொத்து. அருமையான ஒரு மனைவி (ஆண்டாளம்மா) அமைந்தது தான் விசேஷம். தம்பதியர் இருவருமே தான தர்மத்தில் ஒருவரை யொருவர் மிஞ்சினர் . கஞ்சி வரதனிடம் அளவற்ற பக்தி. காஞ்சிபுரத்திற்கு அடிக்கடி போன போதெல்லாம் அங்கு புதிதாக விசிஷ்டாத்வைத பிரசாரம் பண்ணிக்கொண்டிருந்த ராமனுஜரிடம் அமோக பக்தி கூரேசருக்கு. ஆஹா இந்த ராமானுஜன் எப்படிப்பட்ட தெய்வீகமான மனிதராக இருக்கிறார். ஞான சிகரமாக இருக்கிறாரே வைணவ சமுதாயத்துக்கே ஞானப்ரகாச ஒளிவிளக்கு” என கூரத்தாழ்வான் காந்தம் போல் கவரப்பட்டார். சீடர்களில் ஒருவரானார். ராமானுஜரிடம் வேத சாஸ்த்ரங்கள், மீமாம்ச சூத்ரங்கள் எல்லாம் தெரிந்துகொண்டார். இருவருக்குள்ளும் பிரிக்க முடியாத நேசம், நட்பு , பாசம், சகலமும் உண்டானது. காஞ்சியே வாசமானார் கூரேசர்.
ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவர்களை ஆதரிக்க, ஊக்குவிக்க, ராமானுஜர் போக நேரிட்டது. .அங்கு அப்போது சைவர்களின் ஆக்ரமிப்பு கெடுபிடி கொஞ்சம் அதிகம். சூரியனை தாமரை பிரிந்தது. கூரேசன் கூரத்திலேயே ஐக்கியம். ஆனால் காஞ்சி வரதனும் பெருந்தேவி தாயாரும் வேறு திட்டம் வைத்திருந்தார்களே!
நாள்தோறும் கூரேசர் ஆண்டாள் ஜோடியின் தான தர்மங்கள் இரவு வரையும் தொடரும். ஒருநாள் இரவு அன்னதானம் முடிந்து அவர்களின் மாளிகை கதவு தாழ் போடப்பட்டது. கோட்டை கதவு போல அது சாத்தப்பட்ட சப்தம் நிசப்தமான இரவில் காஞ்சியிலும் கேட்டது. வரதராஜ பெருமாளை பெருந்தேவி தாயார்கேட்டாள் “நாதா! இது என்ன சப்தம்?. எங்கிருந்து ? “தெரியவில்லையே. கேட்டு சொல்கிறேன்”” என்று சகலமும் தெரிந்த வரதராஜ பெருமாள் ஆலயத்தின் பிரதான பட்டாசாரியாரான திருக்கச்சி நம்பிகளை அழைத்து கேட்டார். “சுவாமி, நானும் கேட்டேன். அது கூரம் கிராமத்தில் அன்றாட அன்னதானம் முடிந்து இரவில் கூரேசர் வீட்டு வாசல் கதவு மூடப்பட்டு தாழ்ப்பாள் போடும் சப்தம்” கபட நாடக சூத்ரதாரி ஆயிற்றே பெருமாள்!!. தெரியாதது போல் “அடே அப்படியா, கூரேசனும் ஆண்டாளும் அவ்வளவு தர்மிஷ்டர்களா. அவர்களை நான் பார்க்க வேண்டும் இங்கே அழைத்து வா ” திருக்கச்சி நம்பி அம்பு போல் விரைந்து கூரேசரிடம் பெருமாளின் விருப்பத்தை தெரிவிக்க கூரேசர் திகைத்தார். “என்ன அக்ரமம் செய்துவிட்டேன். பாவி, நான்? அன்னதானம் செய்வதை ஊருக்கெல்லாம் பிரபல்யம் செய்வதுபோல் கதவு தாழ்ப்பாள் சத்தம் போட்டு தம்பட்டம் அடித்துவிட்டேனே. பெருமாளுக்கும் தாயாருக்கும் இந்த சத்தத்தால் அமைதி இழக்க செய்து மகா பாவத்தை தேடிக் கொண்டு விட்டேனே?!”. ஆடிப்போய் விட்டார் கூரேசர். இனி நான் செய்ய வேண்டியது ஒன்று தான். சொத்து சுதந்திரம் பூரா அப்படியே எல்லாவற்றையும் துறந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடி குரு நாதர் ராமானுஜரை சரண் அடைவது ஒன்றே. ‘’அடியே ஆண்டாளு, கட்டின துணியோட உடனே கிளம்பு. ஸ்ரீரங்கம் போவோம்”” . இருவரும் ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தனர். வழியே சில இடம் காட்டு பாதை. கள்வர் பயம் ஆண்டாளை கலக்கியது கண்டார். “என்ன பயம் ஆண்டாள் உனக்கு. நம்மிடம் என்ன இருக்கிறது? உன்னிடம் எதாவது பொருள் உள்ளதா, சொல்? என்று கேட்டார் கூரேசரிடம் உண்மையை உடைத்தாள் ஆண்டாள் அம்மாள். ”வழியில் உங்களுக்கு எதாவது தாக சாந்திக்காவது உதவுமே என்று எண்ணி இந்த சிறிய தங்க பாத்திரத்தை கொண்டு வந்தேன்”. புடவை முடிச்சிலிருந்து அந்த சிறிய தங்க பாத்திரத்தை நீட்டினாள் ஆண்டாள் அம்மாள். “பேதை பெண்ணே!! , எல்லாவற்றையும் துறந்து என்று சொன்னபோது அதில் இந்த தங்க பாத்திரமும் சேர்ந்தது தான்”” . அந்த பாத்திரத்தை வாங்கி வீசி எறிந்தார் ஆழ்வான்.”அப்பாடா!! இனி உனக்கு பயம் தேவை இல்லையே, எது காரணமோ அதை வீசி எறிந்தாயிற்றே.” ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ராமானுஜருக்கு நீண்ட நாள் பிரிந்திருந்த குழந்தைகளை பார்த்தது போல மகிழ்ச்சி. ஆசார்யனின் வலது கரமாகவும், பவித்ரமாகவும், கண்ணாகவும், செவியாகவும் ஏன், மனசாட்சியாகவுமே ஆழ்வான் சேவை சாதித்தார். சுருக்கமாக சொன்னால், கூரேசர் ஸ்ரீ ராமானுஜரின் நிழலானார்!! ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சூடு பிடித்து எங்கும் பரவ ஆரம்பித்தது. அனேக வைஷ்ணவர்கள் பின் பற்றினர். அடியார் கூட்டம் பலத்தது, ஒரு தத்துவம் கொள்கை, சீர் பட வேண்டுமெனில் முறை ஒன்று தேவை. எனவே ஸ்ரீ ராமானுஜர் “ஸ்ரீ ராமானுஜ தர்சனம்” எழுத ஆரம்பித்தார் 4 முக்ய சீடர்கள் (கூரேசர், தாசரதி, தேவராட், எம்பார்) உதவினர். இரவும் பகலும் வேத சாஸ்த்ரங்கள், சூத்ரங்கள் திருவாய் மொழி போன்று எல்லாவற்றையும் அலசினர். விசிஷ்டாத்வைத சித்தாந்தம் படிப்படியாக உரு பெற்றது. ஸ்ரீ ராமானுஜர் வியாசரின் பிரம்ம சூத்ரத்துக்கு பாஷ்யம் எழுத தொடங்கினார். ‘கூரேசா, நீ தான் நான் சொல்ல சொல்ல என்னோட பாஷ்யத்தை எழுதணும் .எப்போதாவது நான் தடம் மாறி சொன்னா எழுதறதை நிறுத்தணும். உடனே நான் புரிஞ்சிப்பேன் ” இப்படி தான் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யம் உருப்பெற்றது.ஒருநாள் ஸ்ரீ ராமானுஜர் ஜீவாத்மா பற்றிய விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தபோது கூரேசர் எழுதுவதை நிறுத்தினார். குருவை நோக்கினார். பல நாட்கள் இரவுகள் சிந்தித்த எண்ண ஓட்டம் தடை பட்டதில் ஆச்சர்யனுக்கு கோபம் வந்தது. கூரேசன் எழுதுவது நின்றதால் தனது சிந்தனை தொடரில் பிசகு என்றல்லவா அர்த்தம்? வெடித்து விட்டார் ஆச்சார்யர்.”கூரேசா, என்னைக்காட்டிலும் நீ வியாசரின் சூத்ரத்துக்கு பாஷ்யம் சரியாக எழுதுவதாக நினைத்தால் நீயே எழுது. போ” கூரேசரை விரட்டினார். மற்ற சீடர்கள் கூரேசா, நீ ஏன் இவ்வாறு செய்தாய்? என வினவினர் என்ன விபரீதம் இது என நடுங்கினர். ”நண்பர்களே கவலை வேண்டாம். நான் ஆசார்யனின் அடிமை. அவர் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம்.” இதற்கிடையில் கூரேசர் எழுதியிருந்ததை படித்த ஸ்ரீ ராமானுஜர் தான் சொல்லிக்கொண்டுவந்த வாசகத்தில் ஓரிடத்தில் முரண்பாடு இருந்ததையும் கூரேசர் அதை சுட்டிக்காட்டியது சரி என்பதையும் உணர்ந்தார். ஜீவாத்மா தனித்வம் கொண்டதாக இருந்தாலும் இறைவனிடம் சேஷத்வம் கொண்டது என்று தான் கூரேசன் திருத்திய படி இருக்கவேண்டும் என தனது தவறை அறிந்தார். ”அடேடே , வெளிச்சத்தை பற்றி சொல்லும்போது அதற்கு காரணமான சூரியனை மறந்து போனேனே” என்று வருந்தினார், மஹா புருஷரல்லவா?”என் அருமை கூரேசா, நீ தான் ரைட். ஜீவாத்மா ஸ்வரூபத்தை நீ விளக்கியவாறே எழுது. மேலே தொடர்வோம்” இவ்வாறே ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ சம்ப்ரதாயம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதார்த்த சங்க்ரகம், கீதா பாஷ்யம் உரு பெற்றது .