ஒரு கசப்பான நினைவு – நங்கநல்லூர் J K SIVAN
1945 வருஷ சமயங்களில் இந்தியா முழுதும் சுதந்திர தாகம் எங்கும் பலரை விழிக்க வைத்தது. மிக பயங்கரமாக ரெண்டாம் உலகமகா யுத்தத்தில் பிரிட்டிஷ் நாடு மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி தவித்திருந்தபோது பிரிட்டிஷ் காலனியில் அடிமை நாடாக இருந்த பாரத தேசம் இந்திய சுதந்திர எழுச்சியில் வீராவேசம் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஏகாபத்யத்தை எதிர்த்து நாலா பக்கமும் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே வந்த சமயம்
அந்த நேரத்தில் வெள்ளைக்கார பாதிரியார்களும் இரவும் பகலும் மக்களை ஏசு கிறிஸ்து அழைக்கிறார் என்று பல வித வண்ண புத்தகங்களை ,மிட்டாய்களை, பால் பவுடர் பாக்கெட்டுகள் இலவசமாக கொடுத்து மதம் தழுவ உழைத்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனக்கு ஆறு அல்லது ஏழு வயது. எனக்கு நினைவில் இருப்பதை சொல்கிறேன்.
நாங்கள் கோடம்பாக்கத்தில் வாசித்தோம். இப்போது ராம் தியேட்டர், அப்புறம் பத்மா ராம் கல்யாண மண்டபம் இருக்கும் பக்கம் ஒரு மண்சாலை அக்காலத்தில் கோடம்பாக்கத்திலிருந்து சைதாப்பேட்டை வழியாக பரங்கிமலை வரை செல்லும் பாதையாக இருந்தது.நிறைய வெள்ளைக்கார படைகள் குதிரைகள், ராணுவர் வீரர்கள் வரிசையாக நடந்து போவார்கள். தியேட்டரோ, கல்யாண மண்டபமோ அப்போதெல்லாம் கிடையாது. எல்லாம் புலியூர் கிராமம் தான் அப்போது.
கோடம்பாக்கத்தில் அப்போது அநேகர் சினிமா தொழில் சம்பந்தப்பட்டவர் களாகவே வாழ்ந்தார்கள், விஜயா, ,வாஹினி, AVM பரணி, இன்னும் என்னென்னவோ ஸ்டுடியோக்கள் இருந்ததால் பலர் வேலைகிடைத்து அங்கே வசித்தார்கள் இதைத்தவிர நாடக, சினிமா உலக மக்கள் வேறு.
நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு சொந்தக்காரர் சமரபுரி முதலியார் ஏதோ ஸ்டுடியோவில் என்னவோ வேலையாயிருந்தார். அவருக்கு ரெண்டு பிள்ளைகள் பாலன் என்பவன் என் நண்பன். எங்கள் வீட்டு வாசலில் ஒரு சிமெண்ட் சாய்வு மேடை. மேலே சொன்ன மண் சாலையை ஒட்டி இருந்தது. அதில் உட்கார்ந்து தெருவில் செல்வோரை, குதிரை மாட்டு வண்டிகளை ராணுவ வீரர்களை, குதிரைகளை வேடிக்கை பார்ப்போம். எங்கள் வீட்டு கிழக்கு பக்க சுவற்றுக்கும் மண் சாலைக்கும் நடுவே ஒரு லாந்தர் கம்பம். அதற்கு மேலே நான்கு பக்கம் கண்ணாடி தடுப்பு, நடுவே கெரோசின் ஆயில் விளக்கு. திரி போட்டு எண்ணெய் ஊற்ற ஒரு ஆள் தினமும் சாயந்திரம் ஆறுமணிக்கு சைக்கிளில் வருவான். அவனிடம் ஒரு ஆறு அடி உயர ஏணி இருக்கும்.அதை லாந்தர் கம்பத்தின் மேல் சாய்த்து ஏறி, கண்ணாடிக்கதவை திறந்து சீசாவில் எண்ணெய் ஊற்றி திரியை நிமிண்டி விட்டு விளக்கேற்றி விட்டு கண்ணாடி கதவை மூடிவிடுவான். ரெண்டு மூன்று மணி நேரம் எரியும். அந்தகாரம் கொஞ்சம் குறையும்.
எங்கள் தெருவிற்கும் மண்சாலையும் சந்திக்கும் இடத்தில் சிலர் கூட்டம் போடுவார்கள். அப்படி ஒரு கூட்டம் தான் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கூட்டினார். பெட்ரோமாக்ஸ் விளக்கு கொண்டுவருவார்கள். வெளிச்சம் ஜம்மென்று தெரியும்.கையில் தகரத்தில் புனல் போல் ஒரு ஒலி பெருக்கியில் கத்தி பேசினால் பலருக்கு கேட்கும்.
ஒரு இரவு வெள்ளை முழுக்கை சட்டை கால் வரை இருக்க,இடுப்பில் ஒரு துணியால்,கயிறால் பெல்ட் மாதிரி கட்டிக் கொண்டு தமிழ் பாதிரியார் பேசினது ஞாபகம் இருக்கிறது.
”ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள் பாபிகளே, வாருங்கள். ஏசு அழைக்கிறார் வாருங்கள்.உங்கள் பாபங்களை அவர் அழிக்க வருகிறார்,உங்களுக்காக ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார் வாருங்கள்”
பாதிரியார் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்திலே உரக்க கத்தி ஆள் சேர்த்தார். கழுத்தில் ஒரு கயிற்றில் இயேசு சிலுவை பள பள வென்று பித்தளை யில் பாலிஷ் போட்டு. ஓரங்கள் தவிர நடுவிலே பெரிய வழுக்கை மண்டையும் ரெண்டு வார தாடியுமாக கையில் பைபிள் வைத்துக் கொண்டிருப்பார். வாயில் ஒரு ஊதல். அதை ஊதி ஆள் சேர்ப்பார்.
நிறைய பேர் தங்களை பாபிகள் என்று ஒப்புக்கொண்டு அவரைச் சூழ்ந்துகொண்டார்களா அல்லது ஏதோ சொல்கிறாரே கேட்கலாம் என்றா அல்லது பொழுது போகாமலா என்றோ எனக்கு தெரியாத வயது. எல்லோருக்கும் சிறு சிறு இயேசு கிறிஸ்து பற்றிய புத்தகம் கொடுப்பார். அதற்காக கூட கும்பல் வந்து இருக்கலாம். கூட்டத்தில் முண்டி அடித்து நானும் எப்படியோ ஒரு சின்ன பைபிள் புத்தகம்.இயேசு கிறிஸ்து படம் வடம் வாங்கிக்கொண்டு பெருமையோடு வீட்டுக்குள் நுழைவேன். மறுநாள் காலையில் நான் ஒழித்து வைத்த இடத்தில் நான் சம்பாதித்த பைபிள் புத்தகமோ படமோ இருக்காது. எப்படியோ அம்மா கண்ணில் பட்டு தூர என் கண்ணில் படாத இடத்துக்கு அது சென்றுவிடும். அப்புறம் அதைப் பார்த்ததே இல்லை.
மதம் மாற்றுவது என்பது ஒருவரை அவரது இயற்கையான பழக்க வழக்கத்தை மாற்றி புதிதாக ஒரு ஏற்பாட்டுக்குள் கொண்டுவருவது. அறியாமையால், வறுமையால் சந்தர்ப்ப சூழ்நிலையால், நிர்பந்தத்தால் இவ்வாறு மாறும் மனிதர்களைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. அவரவர் மதம் அவர் பிறக்கும்போதே அவரோடு கூட வருவது. அதை மற்றவர் மாற்ற முயற்சிப்பது கேவலம். தானே விரும்பி மாறுபவர், என்ன காரணத்திற்காக அப்படி செய்கிறோம் என்று முதலில் ஆராய வேண்டும்.
சரித்திரத்தில் நிறைய மார்க் வாங்க நாம் மனப்பாடம் செய்தது நினைவில் வரட்டும். முகலாய மன்னர்கள் காலத்தில் எத்தனையோ கோவில்கள் அழிந்தன, இடிபட்டன, தெய்வச் சிலைகள் மூளியாயின. மக்கள் கத்திமுனையில் மதம் மாற்றப்பட்டார்கள். எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாக மணந்து கொல்லப்பட் டார்கள். கெடுக்கப் பட்டார்கள். நமது பொருளாதார வசதி, நமது மன்னர்களின் ஒற்றுமையின்மை, பயம், ஆகியவை பல வம்சங்கள் மாறினதற்கு காரணம் என்று படித்தோம். மார்க்குக்காகத் தானே படித்தோம். மனதில் அந்த காரியத்தை என்றாவது சரி என்று ஏற்றுக்கொண்டோமா?? என்றும் மாறாத வடுவாக மனதில் அது ஏன் இல்லை. இது மாதிரியான காரியங்களுக்கு, மத மாற்றத்தை ஒழிக்க நம் பங்கிற்கு ஏதாவது செய்கிறோமா? சும்மா சாம்பார் சாதம் சாப்பிட்டுக்கொண்டு அதை மறந்துவிடுவது பாரதத் தாய்க்கு செய்யும் துரோகம் இல்லையா?
இந்தியாவில் தொன்று தொட்டு நமது சனாதன தர்மம் வழக்கத்தில் பழக்கத்தில் இருந்து வருகிறதே அதை சிறிதளவாவது புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு, அறிந்து கொண்டு மற்றவர்க்கு எடுத்து சொல்வதே நமது தர்மம். அதற்கு துரோகம் செய்வது பெற்ற தாய்க்கு செய்யும் துரோகத்தை விட அதிகம், மன்னிக்க முடியாதது. இதை நிறைய பேருக்கு எடுத்து சொல்ல அநேக மகான்கள் காலம் காலமாக முயன்றிருக்கிறார்கள்.
இந்து மதம் என்று நாம் பெயரிட்டு அழைக்கும் இந்த சனாதன தர்மம் எவரையும் தன்னுள் சேரும்படி வற்புறுத்திய தில்லை, செய்யாது. புதிதாக இங்கு வந்து குடிபுகுந்த இதர மதங்கள் ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு, நமது கலாசாரம், பண்பாட்டை உடைக்க பாடு பட்டார்கள். அதில் பலர் வெற்றியும் கண்டார்கள். ”ஹிந்து (மக்கள்) எனும் மகா சமுத்ரத்தை வற்றச் செய்ய முடியவில்லை. எனினும் புனிதத்தை பாழ் படுத்தினார்கள். நமது கடமையில் நாம் தவறி விட்டோமா? இன்னும் நேரம் அதிகமாகவில்லை, முதலில் நாம் புரிந்து கொள்வோம் பிறகு எடுத்து சொல்வோம். ஒரு விவேகானந்தர் இந்த நாட்டுக்கு போதுமா? நாம் அனைவருமே விவேகானந்தர் ஆகலாமே. அவருக்கு இல்லாத வசதிகள் நமக்கு நிறையவே உள்ளதே.
நமக்கு ” எம்மதமும் சம்மதம்” என்பது தப்பு. ”எம்மதமும் சம்மதம் என்று சொல்லும், நம்பும் மதம் தான் நமக்கும் சம்மதம்” என்று இருக்க வேண்டும். –