”பேய்க்கரும்பு இனித்தது – நங்கநல்லூர் J K SIVAN
பட்டினத்தார்
”பட்டினத்தார் கையிலுள்ள கரும்பு….” என்ற சினிமாப் பாட்டு இன்று மத்தியானம் என் காதில் கேட்டது. TMS நன்றாக பாடிய ஒரு பாட்டு. பாட்டு முடிந்து வீட்டு
மனைகள் கூடுவாஞ்சேரியில் சல்லிசாக கிடைக்கிறது என்ற உரத்த குரலில் ஒரு பெண் வியாபாரம் செய்தாள்.
மொபைலை மூடிவிட்டேன். பட்டினத்தார் மட்டும் என் மனதிலேயே தங்கி இருந்தார். அவரைப் பற்றி நினைவு வந்ததும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து இதை எழுதுகிறேன். சித்தர்களை பிடிக்கும்.அதுவும் பட்டினத் தாரின் விசிறி நான். அவரைப் பற்றி நிறைய எழுத பிடிக்கும்.
பட்டினத்தார் வெறுங்கையரா என்றால் இல்லை. கடைசி காலத்தில் பேய்க் கரும்பு ஒன்றை தூக்கிக் கொண்டு நடந்தார். அது அவரது காலம் காட்டி.
பட்டினத்தார் வடக்கே உஜ்ஜயினி பக்கம் ஒரு ஊரில் சென்று ஒரு குளக்கரையில் அமர்ந்து தியானத்தில் இருந்தார். அந்த குளத்தில் சற்று தூரத்தில் அந்த நாட்டு ராணி குளிப்பது வழக்கம். ராணி நகைகளை கரையில் கழற்றி வைத்துவிட்டு குளித்துக் கொண்டிருந்ததை பார்த்த ஒரு திருடன் அவளது விலை உயர்ந்த முத்து மாலையை திருடிக்கொண்டு ஓடினான். ராஜாவின் காவலாளிகள் அவனை விரட்டி துரத்தினார்கள். திருடன் கண்ணில் தூரத்தில் பட்டினத்தார் அமர்ந்திருந்தது தெரிந்தது. தப்பிக்க அவனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. ராணியின் முத்துமாலையைப் பட்டினத்தார் கழுத்தில் போட்டு விட்டு ஓடிவிட்டான். பட்டினத்தார் கண்மூடி தியானத்தில் இருந்தவருக்கு ஒன்றுமே தெரியாது. காவலாளிகள் பட்டினத் தாரை முத்துமாலையும் கழுத்துமாக இழுத்துக் கொண்டு போய் ராஜா முன் நிறுத்தினார்கள். அந்த ராஜா பர்த்ருஹரி. பிற் காலத் தில் பட்டினத்தாரின் சிஷ்யனாக இருந்த பத்ரகிரியார்.
பர்த்ருஹரிக்கு பட்டினத்தாரை தெரியாதே.
”இந்த திருட்டு சாமியாரை கழுவில் ஏற்றுங்கள்” பர்த்ருஹரி உத்தரவிட்டான். பட்டினத்தாரை இழுத் துச் சென்று கழுமரத்தை நாட்டி அதில் அவரைச் செருகிவிடப் போனார்கள். அப்போது தான் என்ன நடந்தது என்று பட்டினத்தாரால் அறியமுடிந்தது. தனது கழுத்தில் இருந்து அவர்கள் ராணியின் முத்து மாலை யை கழட்டிய போது தான் நடந்தது புரிந்தது.
பட்டினத்தார் கழுமரத்தைப் பார்த்துப் பாடினார்.
”என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே”
எந்த ஜென்மத்திலோ எப்போதோ யாருக்கோ செய்த தீங்கு இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு தண்டனையாக எனக்கு வாய்த்தது என்று கழுவேற ஒப்புக் கொண் டார்.ஆனால் கழுமரம் எல்லோர் எதிரிலேயும் தானாக வே தீப்பற்றி எரிந்து சாம்பலாகியது.காவலர்கள் ஓடிச்சென்று பர்த்ருஹரியிடம் இந்த அதிசயத்தை சொன்னார்கள். பர்த்ருஹரி விவேகமானவன்.புரிந்து கொண்டான். அவன் வெகுநாளாக தேடிய குரு கிடைத்து விட்டார் என்று புரிந்ததும் ஓடிவந்து பட்டினத்தார் கால்களில் விழுந்தான் . பட்டினத்தார் ஒன்றுமே சொல் லாமல் அவ்விடத்தை விட்டுச் சென்றார். ராஜா பர்த்ரு ஹரி தன்னுடைய அரச உடைமைகளை, ஆடைகள், அரண்மனை அந்தப்புரம் எல்லாம் உதறிவிட்டு கோவண தாரியாக பட்டினத்தார் பின்னால் போனான். பத்ரகிரியாரானான். திருவிடைமருதூரில் மஹாலிங்கம் கோவில் மேற்கு வாசலில் அமர்ந்தான். தனக்கும், குரு பட்டினத்தாருக்கும் சேர்த்து பிக்ஷை எடுத்தான். ரெண்டு பேருக்கும் சோறு எப்படி கையில் ஏந்திக் கொண்டு வரமுடியும்?அதற்காக குயவனிடம் ஒரு திருவோடு பிக்ஷையாக வாங்கினான்.
ஒரு நாள் மகாலிங்க ஈஸ்வரர் ஒரு முதியவர் உருவில் பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார்.
“ஐயா நான் சன்னியாசி. கொடுப்பதற்கு என்னிடம் ஒன்று மில்லை. மேலைக் கோபுரவாயிலில் ஒரு சம்சாரி இருக்கிறார். அவரிடம் கேளும்”, என்று அனுப்பி விட்டா ர்.முதியவர் மேலை வாயிலில் உட்கார்ந்திருந்த பத்ர
கிரியாரிடம்,
“நீங்கள் ஒரு சம்சாரி என்பதால் உங்களிடம் பிச்சை கேட்க கீழை வாயிலில் உள்ள சித்தர் என்னை இங்கே அனுப்பினார். எனக்கு பிக்ஷை இடுங்கள்” என்கிறார்.
பொட்டில் அடித்த மாதிரி இருந்தது பத்ரகிரிக்கு. பட்டினத்தார் என்ன சொன்னார் என புரிந்தது. தனது திருவோட்டை தன்னோடு இருந்த பெட்டை நாயின் தலையில் அடித்தார். திருவோடு உடைந்தது. நாயும் இறந்தது. மகாலிங்க ஸ்வாமியும் மறைந்தார். பத்ர
கிரியார் தவத்தில் மூழ்கினார்.
இறந்த நாய் பத்ரகிரியாரின் எச்சிலை உண்ட புண்யத் தி னால்காசிராஜனின் மகளாகப் பிறந்தது. கல்யாணம் செய்யவேண்டிய சமயத்தில், அவள், “திருவிடை மருதூரி ல் ஒரு பெரிய சித்தர் இருக்கிறார். அவரைத்தான் நான் மணந்துகொள்வேன். அவரிடம் அழைத்துச் செல்லுங் கள்” என்று பிடிவாதம் பிடித்தாள்.ராஜ குமாரி பத்ரகிரி யைப் பார்த்து “நாதா, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல் நான் தற்கொலை செய்து கொள்வேன். ஒரு கன்னிப்பெண் சாவால் ஏற்படும் கடுமையான தோஷம் உங்களைப் பீடிக்கும்!”, என்றாள்.
“மருதவாணா! இது என்ன சோதனை?” என்று அலறிய வாறு பத்ரகிரியார் கோயிலுக்குள் சென்றார். நேரே கர்ப்பக் கிருஹத்துக்குள் ஓடினார். கர்ப்பகிருஹத்தில் ஒரு ஜோதி தோன்றி பத்ரகிரியார் அதில் கலந்து மறைந் தார்.
விஷயமறிந்த பட்டினத்தார், மகாலிங்கத்தின் முன் நின்று வணங்கி ”பின்னால் வந்தவன் முன்னால் சென்று விட்டான். மருதவாணா, இது என்ன பாரபட்சம்?” என்று ஈசனிடம் கேட்டார்.
மகாலிங்கேஸ்வரர் குரல் அசரீரியாக கேட்டது: “பட்டினத்துப் பிள்ளையாரே! என்றைக்கு உமக்குப் பேய்க் கரும்பு இனிக்கிறதோ, அப்போது உமக்கு அனைத்தும் சித்தியாகி எம்மை வந்தடைவீர்!”
பட்டினத்தார் கையில் நீளமான ஒரு பேய்க்கரும்பு வந்திறங்கியது. அதோடு பல க்ஷேத்ரங்களுக்குச் சென்று அடிக்கடி சுவைத்துப் பார்ப்பார். இனிக்கவே இல்லை.
கடைசியில் நமது சென்னைப்பட்டினத்தில் திருவொற் றியூரில் பேய்க் கரும்பு இனித்து பட்டினத் தார் மோக்ஷம் எய்தி நமக்கு அவருடைய கோவிலும் இருக்கிறதே. சென்று பாருங்கள். இது தான் பட்டினத்தார் கையிலுள்ள கரும்புக் கதை.