சமந்த பஞ்சகம். நங்கநல்லூர் J.K. SIVAN
நைமி சாரண்யத்தில் அநேக ரிஷிகள் அடிக்கடி கூடி பல வேதாந்த புராண, ஆன்மீக விஷயங்களை விவாதிப்பார்கள். பரி மாறிக்கொள்வார்கள். சுதர் எனும் ரிஷி குமாரர் சௌதி, சொல்லும் ஒரு விஷயம் ”சமந்த பஞ்சகம்” பற்றி தெரிந்து கொள்வோம்:
திரேதா யுகம் முடிந்து , துவாபர யுகம் ஆரம்பிப்பதற்கு நடுவே ஜமதக்னி மஹரிஷி புத்ரன் பரசுராமன் க்ஷத்ரியர்க ளின் அநீதிகளை எதிர்த்து க்ஷத்ரிய குலத்தையே அழித்தான். கொல்லப்பட்ட க்ஷத்ரியர்கள் ரத்தம் நிறைந்த ஐந்து ஏரிகளை உருவாக்கினான். அந்த ரத்தத்தை எடுத்து தனது பித்ருக்களுக்கு அர்ப்பணம் செய்தான் .பரசுராமனின் பித்ருக்களில் ஒருவர் ரிசீகர் எனும் ரிஷி மற்ற சில முன்னோர்களோடு ரிசீகர் பரசுராமர் முன் தோன்றுகிறார்.
‘ஓ ராமா {பரசுராமா}, ஓ அருள் நிறைந்த ராமா, பிருகு மைந்தனே, உன்னுடைய அர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டோம். ஓ பலம்வாய்ந்தவனே, அருள் உன்னை நிறைக்கட்டும். ஓ ஒப்புயர்வற்றவனே, நீ விரும்பும் வரத்தைக் கேள்’ என்று கேட்டார் ரிசிகர் .
” என் அருமை பாட்டன், பூட்டன்களே, நீங்கள் உண்மை யிலே என் அஞ்சலியினால் திருப்தியடைந்தீர்களே யானால், இந்த க்ஷத்திரியர்களைக் கொன்றதால் எனக்கு ஏற்பட்ட பாவங்கள் கரைய வேண்டும். இந்த சமந்த பஞ்சகம் புனிதமான இடமாக உலகம் முழுவதும் புகழ்பெற வேண்டும்’ என வேண்டினான் பரசுராமன். ‘ததாஸ்து’ ‘
‘அப்படியே ஆகட்டும் மைந்தனே, நீ அமைதி பெறுவாய்’ என பித்ருக்கள் அருளி பரசுராமன் அமைதியடைந் தான்.
சமந்த பஞ்சகம் ஒரு புண்ய பூமி. இந்த சமந்த பஞ்ச கத் தில் தான் கௌரவப்படைகளும் பாண்டவப்படை களும் மஹா பாரத யுத்தத்தில் மோதின. பதினெட்டு அக்ஷௌஹிணி {Akshauhini} படைகளும் போர் செய்து ஏறக்குறைய அனைவருமே மரணமடைந்தார்கள். ஓ அந்தணர்களே! மூவுலகத்திலும் கொண்டாடப்படுவதும், புனிதமானதும் உற்சாகத்தை அளிக்கக்கூடியதுமான அந்த சமந்த பஞ்சக பூமி தான் இப்போது குருக்ஷேத்ரம்.
“’ஓ! சூதரின் குமாரனே, சௌதியே., அக்ஷௌஹிணி என்பது என்ன? அதில் எத்தனை குதிரைகள், காலாட்கள், தேர்கள், யானைகள் இருக்கும். முழுவதும் சொல்லுங் கள்”
”ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள், மூன்று குதிரைகள் அடங்கியது ஒரு பட்டி, மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம்,. மூன்று குல்மாக்கள் ஒரு கணம், மூன்று கணங்கள் ஒரு வாகினி, மூன்று வாகினிகள் சேர்ந்தது ஒரு பிருதனை. மூன்று பிருதனாக்கள் சேர்ந்தது ஒரு சம்மு, மூன்று சம்முக்கள் ஒரு அனீகினி, பத்து அனீகினிக் சேர்ந்தது தான் ஒரு அக்ஷௌஹிணி. ஆகவே, ஒரு அக்ஷௌஹி ணியில் இருபத்து ஓராயிரத்து எண்ணூற்று எழுபது {21870} தேர்களும், அதே அளவு யானைகளும் {21870}, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றி ஐம்பது {109350} காலாட் படை வீரர்களும், அறுபத்தைந்து ஆயிரத்து அறுநூற்று பத்தும் {65610} குதிரைகளும் ஆகும். அப்படியென்றால் 18 அக்ஷௌஹிணியில் எத்தனை உயிர்கள் என்று கணக்கு போடுங்கள். அத்த னையும் அர்ஜுனன் பீமனால் காலி.
கிருஷ்ணாவதாரத்தில் கௌரவர்களின் தவறான செயல் களின் காரணமாக அவர்கள் அனைவரையும் அங்கு சமந்த பஞ்சகத்திற்கு} கூடி வரச் செய்து, அங்கே யே அனைவரையும் அழிந்தார்கள். ஆயுதங்கள் தாங்கி ய பீஷமர் பத்து{10} நாட்கள் போரை நடத்தினார். துரோணர், கௌரவர்களின் வாகினிகளை ஐந்து{5} நாட்கள் காப்பாற்றினார். எதிரிப்படைகளைச் சிதறடிக்கும் கர்ணன் இரண்டு{2} நாட்கள் போர் நடத்தினான். சல்லியன் அரை{1/2} நாள் போரை நடத்தினான். அதன் பிறகு பீம துரியோதன கதாயுத்தம் அரைநாள்{1/2} நடந்தது. அந்த நாளின் இறுதியில் அசுவத்தாமனும் கிருபரும், இரவில் தூங்கிக்கொண் டிருந்த யுதிஷ்டிரனின் படைகளை ஆபத்தை உணரா மல் கொன்றொழித்தனர்.
மஹா பாரதத்தின் முதல் பர்வம் அனுக்கிரமானிகா என்றழைக்கப்படுகிறது; இரண்டாவது சங்கிரகா; அடுத்து பௌசியா, அடுத்து பௌலமா, அடுத்து ஆதிவம்சவதரனா. அடுத்து வருவது அற்புதமான உணர்ச்சிகரமான சம்பவங்களைக் கொண்ட சம்பவா. ஜாதுகிருகதகா (அரக்கு மாளிகைக்கு நெருப்பு வைத்தல்) என்பது அடுத்து வருவது. அடுத்து ஹிடிம்பபதா பர்வம் (ஹிடும்ப வதம்). அதற்கடுத்து பகாபதா (பகாசுரன் வதம்), அடுத்து சித்திரரதா. அடுத்து திரௌபதியைத் தனது க்ஷத்திரிய திறமைகளால் அர்ஜூனன் வெல்லும் சுயம்பவரா (பாஞ்சாலி சுயம்வரம்). அடுத்து வைவாஹிகா (திருமணம்). அடுத்து வருவது விதுரகமனா (விதுரரின் வருகை), ராஜ்யலாபா (அரசைப் பெறுவது), அர்ஜூன பனவாசா (அர்ஜூனன் வனவாசம்), அடுத்து சுபத்திரா ஹரனா (சுபத்திரை களவு). இதற்கெல்லாம் அடுத்து ஹரனா-ஹரிகா, காண்டவ-தஹா (காண்டவ வன தகனம்), மய தர்சனா (அசுர சிற்பி மயனை சந்தித்தல்). அதற்கடுத்து வருவது சபா, மந்திரா, ஜராசந்தா, திக்விஜயா (தொடர் போர்). திக்விஜயத்திற்கு அடுத்து ராஜசூய யாகா, அர்க்கியாஹரனா (அர்க்கிய திருடுதல்), சிசுபாலபதா (சிசுபால வதம்). இதற்கெல்லாம் அடுத்து தியுதா (சூதாடுதல்), அனுதியுதா (சூதாட்ட தொடர்ச்சி), ஆரண்யகா, கிரிமிரபதா (கிரிமிரன் வதம்). அர்ஜூன விகமானா (அர்ஜூனனின் பயணங்கள்), கைராதி; கடைசியில் அர்ஜூனனுக்கும் வேடன் உருவத்தில் இருந்த மஹாதேவருக்குமிடையில் நடந்த போர். அதற்கடுத்து இந்திரலோகவிகமனா (இந்திரலோகப் பயணம்); அறம் மற்றும் நற்பண்புகளின் புதையலான மிகவும் சோகமான நளபகியான (நளனின் கதை). அடுத்து தீர்த்தயாத்ரா, ஜடாசூரன் மரணம், யக்ஷர்களுடன் போர். நிவாடகவாசர்களுடனான போர், அஜகரா, மார்கண்டேய சமஸ்யா (மார்கண்டேயரைச் சந்தித்தல்). திரௌபதி சத்தியபாமா சந்திப்பு, கோஷயாத்ரா, மிர்கா சுவப்னா (மானின் கனவு). பிரகதாரன்யகா மற்றும் ஐந்தரதுருமனா கதைகள். திரௌபதி ஹரனா (திரௌபதி அபகரிப்பு), ஜயத்ரதா பிமோக்ஷனா (ஜயத்ரதன் விடுதலை). அடுத்து வருவது கற்புக்கரசி சாவித்திரியின் கதை.
அதன்பிறகு ராமனின் கதை. அடுத்த பர்வம் குண்டல ஹரணா (காதணி திருட்டு) என்று அழைக்கப்படும். அதற்கடுத்து “ஆரண்யா”, அதற்கடுத்து “வைராதா”. அதன்பிறகு பாரண்டவர்கள் செய்திருந்த ஒப்பந்தப்படி ஒருவருட தலைமறைவு வாழ்க்கை. பிறகு கீசக வதம். அதன்பிறகு விராட தேசத்தை கௌரவர்களிடம் இருந்து காப்பாற்றுவது. அதற்கடுத்து விராடனின் மகளுடன் அபிமன்யு திருமணம். அதன்பிறகு, நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய உத்தியோக பர்வம். அதன்பிறகு “சஞ்சய யானா” (சஞ்சயனின் வருகை). அதற்கடுத்து வருவது “பிரஜாகரா” (திருதராட்டிரனின் தூக்கமின்மை). அடுத்து புதிராக இருக்கும் தெய்வீக தத்துவங்களின் தன்மையறிதல் “சனத்சுஜாதா”. அடுத்து “யானாசத்தி”, அதற்கடுத்து கிருஷ்ணனின் வருகை. அதன்பிறகு மாதாலியின் கதை, “கலவா”. அதன்பிறகு “சாவித்திரி”, “வாமதேவர்”, “வைனியா” ஆகியோரின் கதைகள். அதன்பிறகு “ஜமதக்னயா” மற்றும் “ஷோதாசரஜிகா” கதைகள். அதன்பிறகு கிருஷ்ணனின் அரசவை வருகை. அதன்பிறகு பிதுல்லபுத்ரசாசனா. அதன்பிறகு சேனைகளைப் பார்வையிடல், பிறகு ஷேதாவின் கதை. அதன்பின் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது உயர்பிறப்பாளன் கர்ணனுடன் வாக்குவாதம்.
அதன்பிறகு, இருபக்கமும் படைகளின் அணிவகுப்பு. அடுத்து ரதி மற்றும் அதிரதர்களின் எண்ணிக்கை. அடுத்து பாண்டவர்களின் கோபத்தைத் தூண்டும் உலூகனின் தூது. அடுத்து அம்பையின் கதை. அடுத்து உணர்ச்சிமயமான கௌரவப்படைத்தலைவர் பீஷ்மரின் கதை. அதற்கடுத்து ஜம்பு தீபம் பூமியில் உண்டான கதை, தீவுகளின் உருவாக்கம். அதன்பிறகு “பகவத் கீதை”, பிறகு பீஷ்மரின் மரணம். துரோணர் படைத்தலைமை ஏற்பது. சன்சப்தகர்களின் அழிவு, அபிமன்யுவின் மரணம், அர்ஜூனன் ஜெயத்ரதனைக் கொல்வதாக உறுதி ஏற்பது. ஜெயத்ரதன் மற்றும் கடோத்கஜனின் மரணம். அதன்பிறகு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது யாரும் எதிர்பாராத துரோணரின் திடீர் மறைவு. நாராயணக் கணையை ஏவுவது. அதன்பிறகு கர்ணன் மற்றும் சல்யனின் மறைவு.
அதன்பிறகு துரியோதனன் ஏரிக்குள் மூழ்குவது. பிறகு பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதை யுத்தம். அதன்பிறகு, சரஸ்வதா, புண்ணிய இடங்களின் வர்ண னை மற்றும் வரலாறு. அதன்பிறகு கௌரவர் களின் தீய செயல்களைப் பற்றிய வர்ணனையான சௌப்திக பர்வம். அடுத்து ஐசிக பர்வம், “ஜலபிரதனா” முன்னோர் களுக்கு (இறந்தவர்களுக்கான) அஞ்சலி, பெண்களின் அழுகை. அதன் பிறகு கௌரவர்களுக்கு தகன காரியங் களை விளக்கும் “சிரதா”. அதன்பிறகு யுதிஷ்டி ரனை வஞ்சகமாக ஏமாற்ற நினைத்து அந்தணனின் உருவத் தில் வந்த ராட்சசன் சார்வாகனின் அழிவு. பிறகு ஞான முள்ள யுதிஷ்டிரனின் பட்டமேற்பு.
அடுத்து “கிரகபிரவிபாகா”, அடுத்து “சாந்தி”, அதற்க டுத்து “ராஜதர்மனுசாசனா”, அதன்பிறகு “அபதர்மா” பிறகு “மோட்சதர்மா” அடுத்து வருவன “சுகபிரசன அபிகாமனா”, பிரம்ம பிரசனனுசாசனா”, துர்வாசரின் மூலம் (அவரின் பிறப்பு), மயனுடன் விவாதம். அடுத்து “அனுசாசனிகா”, பிறகு “பீஷமர்” மோட்சமடைவது. அதன்பிறகு பாவங்களை அழிக்கும் “குதிரைபலி”. அதன்பிறகு தெய்வீக தத்துவங்களைச் சொல்லும் “அனுகீதை”. அதன்பின் தொடர்வன “ஆசிரமவாசா”, இறந்து போன தங்கள் மக்களின் ஆவியைக் காணும் “புத்ரதர்சனா”, அடுத்து நாரதர் வருகை. அடுத்து கொடுமையான குரூரமான சம்பவங்கள் நடக்கும் “மௌசலா”. அடுத்து “மஹாபிரஸ்தானிகா” அதன்பிறகு மோட்சமடைதல். அதன்பிறகு வருவது “கீல்வன்சா” புராணம். கடைசியாக வருவன குதூகலமான குழந்தை கிருஷ்ணனும், கம்சனின் அழிவும் அடங்கிய “விஷ்ணு பர்வா”. அதன்பிறகு எதிர்காலத்தை முன்னுரைக்கும் “பவிஷ்யபர்வா”
மேலே சொன்னதெல்லாம் வேத வியாசர் அருளிய நூறு{100} பர்வங்களின் சுருக்கமே. அதன் தொடர்ச்சி யாக அவை யனைத்தையும் பதினெட்டு{18} பர்வங்க ளாகப் பிரித்து நைமிச வனத்தில் இந்தச் சூதன் {சௌதி} விளக்கினார்.
கிருஷ்ணனை பற்றி எவ்வளவு எழுதினா லும் எனக்கு தாகமே தீருவதில்லை. எப்பவுமே சம்மர் தாகம் தான். மனது நினைக் கிறது. கை டைப் அடிக்கிறது. அப்புறம் என்ன? பிரம்மானந்தம் தானே.
ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.
”கிருஷ்ண ஜன்ம காண்ட” த்தில் கடைசி அத்தியாயத் தில் ராதா தனிமையில் பிருந்தாவனத்தில் கண்ணனை நேரில் காணாது எவ்வாறு ஏங்கினாள் என்று வரும்.
சித்தாஸ்ரமத்தில் பிரபாச க்ஷேத்ரத்தில் இருவரும் இணைகிறார்கள். கிருஷ்ணனின் 125 வயதில், முதல் 11 வருஷங்கள் நந்தகோபனோடு கோகுலத்திலும், 14 வருஷங்கள் பிருந்தாவனத்தில் ராதையோடும், மீதி நூறு வருஷங்கள் மதுராவிலும் துவாரகையிலுமாக கழிந்தது.
இங்கு ஒரு குட்டிக்கதை அவசியமாகிறது. ஒரு சூரிய கிரஹணத்தின் போது குருக்ஷேத்ரத்தில் ஒரு பெரிய கும்பல் சேர்ந்தது. அங்குள்ள ச்யாமந்த பஞ்சகம் என்கிற குளத்தில் க்ரஹணம் முடிந்தவுடனே ஸ்நானம் செய் தால் பாபங்கள் விலகி ஜீவன் மோக்ஷம் அடையும் என்று நம்பிக்கையில் தான் அனைவரும் அங்கு கூடுவார்கள். பரசுராமர் அநேக க்ஷத்ரியர்களை வதம் செய்து அந்த பாப பரிகாரத்துக்காக இங்கு வந்து ஸ்நானம் செய்தார். எனவே அநேக ராஜ குடும்பங்கள் அங்கு வந்தது. பாப விமோசனத்துக்காகவும் பரிஹாரத்துக் காகவும் தான்.
துவாரகையிலிருந்து கிருஷ்ணன் பலராமன் முதலா னோர் பல விருஷ்ணி, அந்தக, யாதவ ராஜாக்கள், ராணி, குழந்தைகளோடு குருக்ஷேத்ரம் வந்தனர். ஹஸ்தினா புரத்திலிருந்து திரித ராஷ்டிரன் முழு குடும்பத்தோடு வந்திருந்தான். பாண்டவர்களும் இருந்தனர். இங்கேயே பின்னர் பாண்டவர்களும் கௌரவர்களும் மோதுவோம் என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.
பிருந் தாவன கோப கோபியர்களும் குருக்ஷேத்ரம் வந்தார்கள்.கிருஷ்ணனின் பெற்ற தாய் தந்தையர் வசுதேவரும் தேவகியும் வந்திருந்தார்கள். நந்தகோபன் யசோதாவை சந்திக்க ஆவலாக இருந்தனர். இரு குடும்பமும் சந்தித்தபோது இரு பெற்றோர்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு பேச வார்த்தை எழவில்லை. பலராமனும் கிருஷ்ணனும் பழைய கோகுல, பிருந் தாவன பால்ய நண்பர்களை சந்தித்தனர்.
கிருஷ்ணனின் கண்கள் ராதையைத் தேடின. பார்த்து விட்டன. கண்கள் மட்டுமே பேசின. அடேயப்பா. என்ன வேகம்! கோடானு கோடி வார்த்தைகள் எண்ணங்களாக மின்னல்வேகத்தில் நெஞ்சுக்குள் பரிமாறிக்கொண்டன. அவற்றின் பிரதிபலிப்பாக இருவரது கண்களும் குளமா யின. கிருஷ்ணனது அரச வாழ்க்கையில் ராதா குறுக்கி டவே இல்லை. ராதாவை எந்த தர்ம சங்கடத்திலும் கிருஷ்ணனும் சங்கடத்தில் ஆழ்த்தவில்லை.
நேரம் நகர்ந்தது. கற்சிலையாக எத்தனை யுகங்கள் ராதையும் கிருஷ்ணனும் அங்கே ஒருவரை ஒருவர் விழிகளால் விழுங்கிக் கொண்டு நின்றனர்? எல்லா எண்ணங்களையும் சர்வமுமாக விழிகளா லேயே பரிமாறிக்கொண்டபின் இருவர் கண்களிலும் நீர் வற்றி வறண்ட பாலைவனமானது. ராதை, கிருஷ்ண னின் மகிழ்ச்சியை அவன் பட்ட மகிஷிகளோடு இருந்த போது அவனது சிரிப்பில் கண்டாள். அவன் தன் நினைவால் வாடியதை அவன் கண்களில் கண்டாள். அவள் முடிவு சரியானதே. அவரவர் பாதையில் அவரவர் செல்ல வேண்டும் என்ற தீர்மானம் பொருத்தமானதே.
கிருஷ்ணன் தன்னை வளர்த்த தாய் தந்தையர் நந்தகோபன் யசோதாவின் தாள் தொட்டு வணங்கிவிட்டு மதுராவுக்கு பயணமானான். தேர் ஓட்டம் போலவே அவன் மனத்திலும் பிருந்தாவன வாழ்க்கை நிகழ்வுகள் வேகமாக சுழன்றது. பழைய சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சுவையானது, சுகமானது இல்லையா? பழைய சம்பவம். ஒருநாள், பிருந்தாவனத்தில் மரத்தடியில் ராதையோடு பேச்சு நினைவுக்கு வந்தது.
”கிருஷ்ணா, நீ என்னை மறந்துவிடுவாயா? சொல் ”
”என்னால் முடியாது ராதா, சூரியனும் சந்திரனும் கிரணங்களின்றி ஒளியின்றி உண்டா?. நீ என் தெய்வமல்லவா. என் மூச்சல்லவா”
”நீ என்னை கல்யாணம் பண்ணிக்கொண்டால் என்னை பிரியமாட்டாய் அல்லவா?”
”நமக்கு தான் காந்தர்வ விவாகம் ஆகிவிட்டதே”
”அரசர்களுக்கு தானே அது முடியும். நீ ராஜாவா? இந்த ஊரில் பசு மேய்க்கும் ஒரு கோபன் தானே?”
”இல்லை நான் ராஜா தான்.”
”பொய் சொல்வதை நிறுத்த மாட்டாயா? ஒரு நாளாவது உண்மை பேசேன்!”
கிருஷ்ணன் தனது பிறப்பின் ரகசியத்தை உணர்த்த ராதா மூச்சுவிடாமல் கேட்டாள். அதிசயித்தாள்.
நான் கம்சனைக் கொன்று ராஜாவாகி உன்னை என் ராணியாக்குவேன்”
”இல்லை, கிருஷ்ணா அது நடக்கவே நடக்காது. நடக்கவும் கூடாது. நான் அற்ப இடைக்குல பெண். நீ அரசன். நான் உனக்கு ஏற்றவள் அல்ல. ஏராளமான ராஜகுமாரிகள் உனக்கு மனைவியாக வந்து சேருவார்கள். நான் இங்கிருப்பது தான் முறை. இதையும் முக்கியமாக கேள் கிருஷ்ணா. நான் ஒருநாளும் உன்னை ”ராஜா” கிருஷ்ணனாக விரும்பவில்லை. எனக்கு தெரிந்த என் மனம் கவர்ந்த கோபர்களில் ஒருவனான கிருஷ்ணனை தான் விரும்புபவள். அவன் என்னில் நிரம்பி யிருக்கிறான். இனி நாம் மனத்தளவிலேயே சந்திப்போம். இணைவோம்.
நான் இங்கேயே இருந்து உன் வளர்ப்புத் தாய் தந்தையர் நந்தகோபன் யசோதைக்கு பணிவிடை புரிவேன். உன்னைப் பிரிந்த அவர்களுக்கு நானாவது கொஞ்சம் சந்தோஷம் தர முயற்சிப்பேன். உன் நினைவு வந்தால் நாம் விளையாடிய மதுவனம் செல்வேன். நீ இருப்பதாக நினைத்து பாடுவேன், ஆடுவேன், கன்றுகளோடு விளையாடுவேன். உன் குழல் கானத்தை காற்றில் உணர்வேன். நீ தூக்கி நிறுத்திய கோவர்தன கிரியை சுற்றி வருவேன். யமுனையில் உன் நினைவோடு நீந்துவேன். அதுவே போதும் எனக்கு.”
”கிருஷ்ணா ஒரே ஒரு வார்த்தை. பிருந்தாவனத்துக்கு நீ ராதையின் கிருஷ்ணனாக இருப்பதைவிட உலகத்துக்கே நீ யோகியாக ஆச்சார்யனாக, லோக தர்ம பரிபாலன கிருஷ்ணனாக இருப்பதையே நானும் வேண்டுகிறேன். நீ யாவர்க்கும் சொந்தம் ஆனவன் எனக்கு மட்டுமே அல்ல”
”என் ராதா பிரிய சகி..”
”கிருஷ்ணா, ஒன்று செய். நீ போகுமுன் ஒரு முறை உன் குழலை என்னிடம் கொடு நானும் ஊதிவிட்டு தருகிறேன். இந்த குழல் உனக்கு என் நினைவை என்றும் அளிக்கட்டும்”
கர்கரிஷி சொன்ன வார்த்தைகள்:
”கிருஷ்ணா, நீ சாதாரண கோபனா என்ன இந்த ராதையை மணந்து இங்கேயே வாழ?. உன் பிறப்பின் ரகசியம் மறந்து விட்டதா? . வசுதேவர் தேவகியின் எட்டாவது பிள்ளை — உன் மாமன் கம்சனின் முடிவு உன் கையால் நிகழ்ந்து யாதவகுலம் மீண்டும் உன் தலைமையில் பொலிவு பெறவும், கொடுங்கோல் ஆட்சி அழியவும் லோக பரிபாலன சேவைக்கும் நீ தேவை. பூமியின் பாரம் உன்னால் குறையவேண்டும். அதற்கு தகுதியாகும் வரையில் தான் நீ இங்கு கோகுலத்தில் பிருந்தாவனத்தில் ரகசியமாக நந்தகோபன் யசோதை குமாரனாக வளர்ந்தவன். உன்னை வேத சாஸ்திரங்கள் தர்மங்கள் முழுமையாக கற்க, வழி நடத்த ஆச்சார்யனாக சாந்தீபனி முனிவர் தயாராக உள்ளார். ”
கிருஷ்ணன் புன்னகைத்தான். பூரண அவதாரனான அவனுக்கு தெரியாத தான் எதற்காக கிருஷ்ணனாக பிறந்தான் என்று.
”மகரிஷி நான் அறிவேன். நந்தகோபன் யசோதையும் என் அன்பு பெற்றோர்களே. இங்கே எவருக்கும் என் பிறப்பு ரகசியம் தெரியவேண்டாம். அவர்களில் ஒருவனாக நான் இருப்பதையே அவர்கள் உணர்ந்து மகிழ்ந்தவர்கள். அவர்கள் உண்மையை உணரும் வரையில் அவர்களின் எண்ணப்படியே இங்கு நான் என்றும் வாழ்வேன். நானும் இந்த நேரத்துக்காகவே தான் இத்தனை காலம் காத்திருந்தவன். ராதையைப் பொருத்தவரை, ஒன்று சொல்வேன் . ஒரு வேளை நான் கொடிய விஷங் கொண்ட காளிங்கனை வதம் செய்ய முற்பட்டபோது மறைந்திருந்தால் என் வளர்ப்பு பெற்றோர் வருத்தம் அடைந்திருப் பார்கள். மீளாத சோகத்தில் ஆழ்ந்திருப்பார்கள். ஆனால் ராதா அக்கணமே தன் உயிரை விட்டிருப்பாள். என் வாழ்க்கையும் ஜீவனும் ராதா என்பதை அவளும் அறிவாள்.
கர்க ரிஷியும் ராதா கிருஷ்ணன் இருவருமே இணைபிரியாத ஒரே ஜீவன் என்று உணர்ந்து வாழ்த்தியவர்.
கண்ணன் பிருந்தாவனத்தை விட்டு விலகுகிறான் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. பேரிடியாக ஒவ்வொரு வரையும் பாதித்தது. பெற்றோர்கள் செல்லக் குழந்தையை இழந்தனர். கன்னியர்க்கோ கற்பனைக்கோட்டைகள் சிதறின. கனவுகள் கலைந்தன. கோபர்கள் உற்ற நண்பனை இழந்த சோகத்தில் மயங்கி விழுந்தனர். நந்தகோபனும் யசோதையும் கண்ணீரில் மூழ்கினர். ராதையின் விழிகள் விரக்தியை பிரதிபலித்தன. சிலையானாள் . உயிரில்லாத சிற்பமானாள் . அவள் காதில் கண்ணனின் வேய்ங்குழல் நாதம் ரீங்காரமிட்டது. வேக வேகமாக மதுவனத்துக்கு ஓடினாள் . திரும்பி பார்த்தாள் . கண்ணனை ஏற்றிக்கொண்டு சென்ற தேர் பிருந்தாவனத்திலிருந்து தூரமாக வேகமாகச் சென்று ஒரு கரும் புள்ளியாகி அதுவும் மறைந்தது.
ராதை -கிருஷ்ணன் பிரேமை பொதிந்த உறவை முழுதுமாக யாரால் சொல்லமுடியும், எழுதமுடியும்.? நான் ஜெயதேவரோ கண்ணற்ற சூர் தாசரோ அல்லவே? . ராதையையும் கண்ணனையும் நினைவு கூறுவதற்கு சாட்சியாக யமுனை என்றும் ஓடிக்கொண்டே இருக்கும். பிருந்தாவனம் பூரா தென்றல் வீசி மனதை கண்ணன் பால் வைக்கும். காற்றில் மென்மையாக இன்னும் குழலோசை மனதில் ஆத்ம ராகமாக ஒலிக்கும் .
”ஆமாம் இதெல்லாம் உண்மை தான், நமது முன்னோர்கள் நிறையவே பார்த்திருக்கிறார்கள், கேட்டிருக்கிறார்கள் என்று மரங்கள் செடிகள் எல்லாம் தலையசைக்கும்.
”ராதா ஓ ராதா…..” என்றுவிண்ணை நோக்கி உயரே உரக்க சொல்வோமானால் எங்கும் ”ஹே கிருஷ்ணா, மாதவா” என்று அது நம் மனதில் எதிரொலிக்கும். என் ஒரு பெண்ணின் பெயர் ராதா. வாய் நிறைய கூப்பிட அந்த பெயர் வைத்தேன்.