BADRAGIRIYAR J K SIVAN

பத்ரகிரியார்_புலம்பல் –   நங்கநல்லூர்  J K  SIVAN

நாம் எல்லோருமே  அனுபவஸ்தர்கள் தான்.  ஒவ்வொரு சமயம் வாழ்க்கையில் நிறைய  ஏமாற்றங்கள் நாம் எதிர்பாராமல்   திடீரென நிகழ்ந்து நம்மை வாட்டுகிறது.  ஏமாற்றத்தால்  ஏக்கம். எதனால்?  நினைத்தது நடக்காமல் போனால் மட்டும் அல்ல.  முயன்றும் கிடைக்காதபோது. சோதனைகள்  பல  மேலும்  மேலும் தலை நீட்டி  உற்சாகத்தைக்  கொல்லும்போது.
”சே,  என்ன உலகமடா இது? என்று எதை பார்த்தாலும் ஒரு வெறுப்பு உண்டாகிறது. யாரையுமே பிடிக்க வில்லை.  சம்பவத்தின் அதிர்ச்சி,  ஏமாற்றம்  நம்பிக்கை துரோகம்  போன்றவை தாள முடியாமல் பெருகும்போது. எதிர்பார்ப்பு  எதிர்ப்பாக மாறும்போது.  கனவெல்லாம் கைகூடாத  போது. ரொம்ப  நெருங்கி  தோள் மேல் கை போட்டு  கட்டிக்கொண்டு  யாரை  நம்பினோமோ அவனோ அவளோ,ஒருநாள்  முதுகில் கூரான கத்தியால் குத்தி முனை மார்பில் வெளியே வந்து நம்மை சிதைக்கும்போது  நாம் எதற்காக  வாழவேண்டும் என்று கூட  எண்ணுகிறோம்.உலகின் மேலும் , எல்லோர் மேலும்  உண்டான வெறுப்பு விரக்தி மனப்பான்மையை தருகிறது.
 விரக்தி  என்பது ஒவ்வொரு மனித  மனதின் அடியே  தேங்கி நிற்கும்  வண்டல்.  வெளியே அடிக்கடி தலை காட்டுவதில்லை.  அப்படி வெளிப்படும்போது தான்  பலர்  பித்தர்களாகிறார்கள்.  சிலர்  அழுவார், சிலர்  சிரிப்பார், சிலர்  அழுதுகொண்டே  சிரிப்பார்,  சிலர்  கோபிப்பார்,  சிலர்  பொறாமைப் படுவார்,  வாடி  தனிமையில் வதங்குவார்.  ஆனால் சிலர்  ஆன்ம ஞானம் தேடி சித்தர்களாகிறார்கள்.
அந்த நேரத்தில் மனம் தேடுவது  ஆறுதல்.  இறைவனை  நாடுதல்.  நண்பர்களின்,  உறவினர்களின்  ஆதரவும் ஆதங்கமும்  மனதைத் தடவிக் கொடுத்து சாந்தப்படுத்தும்.

அந்த நேரத்தில் தான்  வேதாந்தம்  புண் பட்ட மனதுக்கு இனிக்கும்.   தத்துவங்கள்  வாயிலும் வரும். செவியிலும்  நுழையும்.
 சகல சௌபாக்கியங்களும் கொண்ட  உஜ்ஜயினி ராஜா பர்த்ருஹரிக்கும் இந்த அனுபவம் கிடைத்தது.  ஆசை மனைவியின் பச்சை துரோகத்தால் மனமுடைந்தான்.   துரோகம் செய்த மனைவிக்கு  மரண தண்டனை விதித்தான். நாடு வீடு செல்வம் பதவி ராஜ்யம் சகலமும்  துறந்து காட்டை நோக்கி போனான்.   சன்யாசியானான்.  தவமிருந்தான். மனம் ஒருநிலைப்பட்டது. நடந்தான் தெற்கே வந்தான். தமிழ் கற்றான். திருவிடை  மருதூரில்  பட்டினத் தாரை தரிசித்து  சீடனானான்.  உஜ்ஜயினி ராஜா பர்த்ருஹரி சன்யாசியாகி தெற்கே வந்து தமிழ்கற்று  பட்டினத்தாரின் சீடனான கதை இது தான்.
 பத்ரகிரியார்  புலம்பல் அப்படி  மனதுக்கு ஆறுதல் அளிக்கும்   தத்துவங்கள், வேதாந்த சொற்கள், வாக்கியங்கள், ரெண்டே  அடியில்  பளிச்சென்று சொல்பவை.  பொதுவாக  தத்துவங்கள்  என்றாலே  புரியாத விஷயம்  என்று  நாம்  நினைப்பவர்கள்.  அவற்றை விரும்பி படிக்க வைக்க ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.

 திருக்குறளில்  அருமையான தத்வ  வேதாந்த  விஷயங்கள் உள்ளது. எனினும்  சில  குறள்கள்  படித்தால் புரியவில்லை. யாராவது  விளக்கிச் சொன்னால்  மட்டுமே புரியும் .  ராஜா பத்ரகிரியார்  அப்படியல்ல. எளிய  தமிழில் சிறப்பாக  சொல்கிறார்.  அவரது ரெண்டடி பாடல்களில்   நடு நடுவே  தன்மை. மும்மலம், சுழுமுனை, இட பிங்கல விவகாரங்கள்  கொஞ்சம்  சொல்வார். அதை மட்டும்  தெரிந்து வைத்துக் கொண்டால்  பூரணமாக  தெள்ளத் தெளிவாக மண்டையில் ஏறும்.

மிகவும் சக்தி வாய்ந்த  மருந்துகளை   antibiotic   மாத்திரைகள் நிறைய,  அதுவும் வெறும் வயிற்றில்  சாப்பிடக்கூடாது.   அதுபோலவே  இந்த  நீதி வாக்யங்களை ஒவ்வொன்றாகத்தான்  அனுபவித்து  படிக்கவேண்டும்.  அது பற்றி  சிந்திக்க வேண்டும்.  அப்போது  தான்  அவற்றின்  உள்ளே  புதைந்து கிடக்கும்   உயர்ந்த கருத்து  புலப்படும்.   எனவே கொஞ்சூண்டு  கொஞ்சூண்டாக  தான் எப்போதும் விட்டு விட்டு  சொல்கிறேன். கண்ணுக்கு தெரியவில்லை என்பதால்  காற்று  என்பதே கிடையாது என்று சொல்லலாமா?, உணர்கிறோம்,  சுவாசிக்கிறோம்..அதனால் உயிர் வாழ்கிறோம். அது மாதிரி தானே, எள்ளுக்குள்  எண்ணையும் ,மலருக்குள்  மணமும்,  கரும்புக்குள் இனிமைச் சுவையும் நிரம்பியுள்ளது.  அப்படித்தான்  உள்ளும் வெளியே அண்ட பகிரண்டத்திலும்  பகவான் இருக்கிறான்.   அகப்பொருள்  புறப்பொருள் ரெண்டும் அவனே.

கரும்பை தின்றவன் அது தித்திப்பு, எள்ளை  பிழிந்தவன் அதில் எண்ணை  இருக்கிறது,  மலரை முகந்தவன் அது நறுமண ரோஜா, என்று சொன்னதை நாம் அதை அனுபவிக்காமலேயே  ஏற்கிறோம். அப்படித்தான் உள்ளும் புறமும் ஆன்மாவை, பரமாத்மாவை கண்ட  மஹான்கள் சொல்வதை அப்படியே ஏற்க வேண்டும்.  இதை தான் பத்ரகிரியார்
”எள்ளும் கரும்பும்  எழு மலரும் காயமும் போல்உள்ளும் புறமும் நின்றது உற்றறிவதெக்காலம்?”  என்கிறார்  மனித உடலில் ஆன்மாவாய்  பகவான்  இருக்கிறான்   என்றால் நம்ப யாருமில்லை.   இந்த உண்மையை உணர்ந்து நான்  பரமேசா, உன்னை அறிவது எப்போது?” என்கிறார்.
உயிர்களைக் கொன்று  அவற்றின் மாமிசங்களைப் புசிப்பது தவறு, பாபம். அதை செய்யவேண்டாம் என்கிறார்.  எவ்வுயிரையும் தன்னுயிராக  பாவிக்கவேண்டும் என்கிறார். அதுவே  நற்றவம் என்கிறார்:
” மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு உழலாமல் தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்? என்கிறார்மற்ற உயிர்களைக் கொன்று தின்று  வாழாமல் பிற உயிர்களையும் என்னுடைய  உயிர் தான் அது என்று எண்ணும் ஞானம், சர்வம் ப்ரம்ம மயம்  என்ற உண்மை புரியும் காலம்  எனக்கு எப்போ வரும்?  என கேட்கிறார்.”மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்  தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?”
மூன்று வளையம் என்று   மூலாதாரம், வெளி அல்லது பள்ளியறை எனப்படும் சுழுமுனை மற்றும் சக்தியை சுழுமுனைக்கு கொண்டு சேர்க்கும் பாதை அதாவது குண்டலினி -பற்றி எல்லாம் சொல்கிறார்.காலம் இல்லாவிட்டால் எதுவுமே  நகராதே .இந்த மூன்று வளையங்களும்   அண்டம் வெளி,  சக்தி  TIME, SPACE,  ENERGY  என ஒன்றோடொன்று பிணைந்த வளையங்களால் ஏற்படும் முக்கோணம் தான் ருத்ரன்.
எப்போது என் மனம் குண்டலினி சக்தியை பிரயோகித்து  யோகமார்க்கமாக ஸஹஸ்ராரம் வரை சுழுமுனையில் பிரவேசித்து ருத்ரா, உன்னை அதில் கண்டு ஆனந்திப்பது??  என்கிறார்.
நாம்  கவலையே படவேண்டாம்.  இன்னும்  பல ஜென்மங்களுக்கு நாம் இதெல்லாம் படித்துக் கொண்டேயாவது இருப்போம். ஒருநாள் நாமும் கடைத்தேறலாம். —

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *