ஹேப்பி பர்த் டே உங்க ரெண்டு பேருக்குமே.- நங்கநல்லூர் J K SIVAN …
தமிழ் தாத்தா & சத்ரபதி சிவாஜி.
இன்று பெப்ரவரி 19ம் நாள் . ரெண்டு பேர் பிறந்தநாள் ஒன்று சத்ரபதி சிவாஜி மஹாராஜா. இன்னொருவர் என் உறவினர் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதையர். அவரைப் பற்றி தனியாக எழுதுகிறேன். முதலில் சிவாஜி மஹாராஜா பற்றி.
”சிவாஜி பான்ஸ்லே தெரியுமா?””யார்யா அந்த ஆள்?” ”சிவாஜி மஹாராஜா””ஓ, அவரா, குதிரை மேலே கையில் பட்டா கத்தியை வீசிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறவர். அவரை படத்தில் பார்த்திருக்கிறேன்.சிவாஜி மஹாராஜா பாரதமாதா பெற்றெடுத்த ஒரு மராத்திய வீர புருஷன். சிவாஜி ஹிந்து வெறியன் அல்ல. அவருடைய ஒன்றரை லக்ஷம் வீரர்கள் படையில் பாதிக்கு மேல் முஸ்லிம்கள்!. சிவநேரி என்ற கோட்டையில் பிறந்ததாலும், குலதெய்வம் சிவை என்பதாலும் அவருக்கு சிவாஜி என்று அம்மா ஜீஜாபாய் பெயர் வைத்தாள் . சிவபெருமான் பெயரை வைத்ததும் பொருத்தமே. துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்தவர் தானே சிவனும் சிவாஜியும் ”.
தனது மராத்திய சாம்ராஜ்யத்தை பாதுகாக்க சிவாஜி மேற்கொள்ளாத தந்திரம், சாமர்த்யம், திட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இளம் வயதிலேயே, பாலகனாக இருந்த போதே சிவாஜி ஒரு கோட்டையைக் கைப்பற்றினார். (பெயர் மட்டும் சிவன் என்று வைத்துக் கொண்டு இவ்வளவு வயதில் நான் எத்தனையோ கோட்டை விட்டவன்).
சிவாஜி நன்றாக செயல்படும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட படை எவ்வளவு அவசியம் என்று தெரிந்தவர். தனது வீரர்களை பழக்கப்படுத்தி அனுபவங்கள் கொடுத்து ஒரு சக்தி வாய்ந்த படையைக் கொண்டவராக இருந்தார்.
தனது எதிரியாக இருந்தாலும் ஒளரங்க சீப்புக்கு உதவ முன்வந்தவர்.
பலம் வாய்ந்த எதிரி அப்ஸல் கானை புலி நகங்கள் அணிந்து அவன் துரோகமாக தன்னைக் கொல்லும் முன்பு தனி ஒருவனாக அவனைத் தீர்த்து கட்டிய தைரியசாலி. முள்ளை முள்ளாலே தானே எடுக்கமுடியும் என்று அனுபவ பூர்வமாக அறிந்தவர் சிவாஜி. கடலை ஒட்டி கோட்டைகள் கட்டி இயற்கை அரணை உபயோகித்துக் கொண்ட புத்திசாலி. கிருஷ்ணனுக்கு அடுத்தபடி கெட்டிக்காரர். இப்போது தான் போன வாரம் சென்னை காளிகாம்பாள் கோவில் தரிசனத்துக்கு போனபோது சிவாஜி மஹாராஜா படம் அங்கே பார்த்தேன். அவர் தரிசனம் செய்த இடத்தில் நானும் நிற்பதற்கு புண்யம் செய்திருக்கிறேன்.
அவரது வீரம் புத்தி கூர்மை முகலாய அரசர்களையும், அடில் ஷா வம்சத்தினரையும், நவாப், சுல்தான்களையும் வெற்றி கொள்ளச் செய்தது.
எல்லோரிடமும் அன்பும் பண்பும் கொண்ட அவரது குணம் அவருடைய வெற்றிக்கு அவரோடு இருந்த வர்களின் ஒத்துழைப்பைக் கொடுத்தது.
அனைவருடனும் சேர்ந்து இருக்கும் குணம் எல்லோரையும் அவரோடு இணைத்தது. தர்ம தானங்கள் நிறைய செய்து எல்லோர் மனதையும் கவர்ந்தார். புராதன சின்னங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் எதையும் அவர் எதிரிகள் அழிக்க விடாமல் காப்பாற்றியவர்.அவர்களை நெருங்க விட வில்லை.
சிவாஜி பெண்களை மதித்தவர். இஸ்லாமிய, பிறமத பெண்களை சிறை பிடிக்கவோ துன்புறுத்தவோ இல்லை. இந்த வரியை மூன்று தரமாவது திரும்ப படியுங்கள்.
எல்லா பெண்களையும் மதித்து தாய் போல் பாதுகாத்தவர். அவரவர் மதத்தை அவரவர் பின்பற்ற தடை விதிக்க வில்லை. ஹிந்து மதத்தை அழிக்கவோ, ஆலயங்கள், விக்ரஹங்களை சிதைக்கவோ துணிந்தால் அவரது வாள் பேசும். அந்த விஷயத்தில் துளியும் இரக்கம் காட்டாதவர். இப்போது சிவாஜி தேவைப்படுகிறாரே என்ன செய்வது?
இயற்கையாகவே சிவாஜி மகாராஜாவுக்கு இருந்த தைர்யம், உதார குணம், கருணை உள்ளம் எல்லாம் அவரது தாய் ஜீஜா பாயிடமிருந்து தான் சொந்தமானது.
நமது வீடுகளிலும் ஜீஜாபாய்கள் உருவாகட்டும். அடுத்த தலைமுறையாவது நம்மைப் போல் இல்லாமல் சிறப்பாக தைரியமாக வாழட்டும். ஜெய் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் கி ஜெய் என்று ஒருதரமாவது இதைப் படித்தபின் சொல்லலாமா?