பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
”கர்ப்ப வாசம் ” –
காஞ்சி மஹா பெரியவா பற்றி எவ்வளவோ அற்புதங்கள் ஆச்சர்ய விஷயங்கள் கேள்விப்படுகிறோம். ஆனால் அவர் கர்ப்பவாசம் அனுபவித்த சம்பவம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..ஒரு விசேஷ செய்தி இது. .காஞ்சிபுரம் அருகில் தேனம்பாக்கம் என்ற கிராமம் இருக்கிறதுதெரியுமா ?. இங்கே பிரம்மபுரீஸ்வரர் எனும் சிவனின் ஆலயம் உள்ளது. இங்கே சிவன் சுயம்புலிங்கம் . மஹா பெரியவா இந்த சிவாலயத்துக்கு அடிக்கடி வருவார். அங்கே வரும் பக்தர்களுக்கு பிரம்மபுரீஸ் வரரைத் தவிர மஹா பெரியவா அனுக்ரஹமும் சேர்ந்து கிடைக்கும். நான் தேனம்பாக்கம் சென்றிருக்கிறேன். ஆனால் மஹா பெரியவா அங்கே வாசம் செய்யும் சமயம் செல்லும் பாக்யம் கிடைக்கவில்லை. ஒரு குழந்தை தாயின் கருவறையில் பத்து மாதங்கள் தங்கி, பின் ஜனனமாவது தான் உலக வழக்கம். அதே போல, மஹா பெரியவா இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு சிறிய இருந்த குடிலுக்குள் பத்து மாதம் தங்கி அனுஷ்டானங்களை நடத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு, இருந்த காலத்தில் ஒருநாள் கூட, அந்தக் குடிலை விட்டு அவர் வெளியே வந்ததே இல்லை. இதுபற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. உள்ளே இருந்த காலத்தில், அவர் என்ன செய்தார்? இதுவும் ரஹஸ்யம் தான். சூரியவெளிச்சத்தைக் கூட பார்க்காமல் அவர் இவ்வாறு ஓரிடத்தில் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன ? இது இன்றும் ஒரு புரியாத புதிர் .ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, சிசு வெளியுலகைப் பார்க்க முயாதே. அதுபோல், மஹா பெரியவாளும் பத்து மாதம் அங்கு தங்கி வெளிவராமல் இருந்ததால் இந்த கால கட்டம் தான் “கர்ப்பவாசம்’ எனப்படுகிறது.அந்த சிறிய அறைக்கு ஒரு சின்ன மாடப்பிறை இருந்தது. அந்த துவாரத்தின் வழியாக பிக்ஷை ஏற்றுக் கொள்வார். அதை திறந்து வெளியே பார்த்தால் எதிர் சுவற்றில் ஒரு சின்ன கல் பிள்ளையார் விக்ரஹம் தெரியும். அந்த பிள்ளையாரை அடிக்கடி நமஸ்கரிப்பார். அந்த அறையை ஒட்டி ஒரு கிணறு. அதில் தான் பெரியவா ஜலம் இறைத்து ஸ்னானம் பண்ணுவார்.கிணற்றுக்கு அந்தப்பக்கம் தான் அவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். பெரியவா கிணற்றுக்கு இந்த பக்கம் அறைக்குள். நடுவே கிணறு. அந்த பக்கம் பக்தர்கள். இந்திரா காந்தி , மற்றும் பெரிய பெரிய அரசாங்க அதிகாரிகள் கூட அப்படி கிணற்றுக்கு பக்கம் நின்று தான் அறைக்குள் இருந்த பெரியவாளை தரிசித்தார்கள் .கிணற்றுக்கு அருகிலேயே ஒரு சிமெண்ட் தொட்டி. அதில் ஜலம் நிரப்பி வைப்பார்கள் அதை தான். மஹா பெரியவா ஸ்னானத்துக்கு உபயோகிப்பார்.கிணற்றை ஒட்டி ஒரு மரப்படி . அதன் மேல் ஏறி உச்சியிலிருந்து காஞ்சி ஆலய கோபுரங்களின் தரிசனம் பெறுவார். கோபுர தரிசனம் கோடி புண்யம் என்கி றோமே. இந்த போடோக்கள் கிடைத்தது. இத்துடன் இணைத்திருக்கிறேன்.மஹா பெரியவா ஏன், எதற்காக இவ்வளவு அரிய தவத்தை அந்த சிறிய இருட்டறையில் பத்து மாத காலம் மேற்கொண்டார்? உலகத்திற்கு என்ன நன்மை கருதி இதை அனுஷ்டித்தார்?இதற்கு விடை மஹா பெரியவாளுக்கு அவர் தினமும் பூஜித்த திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரருக்கு மட்டுமே தெரியும் . மஹா பெரியவா கர்ப்பவாசம் அனுபவித்த கோயில் என்பதால், குழந்தை இல்லாதவர் கள் தேனம்பாக்கத்திலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக் கு வந்து சுவாமியை வழிபடலாம். பெரியவர் அரும் பெரும் கோரிக்கைகளை முன்வைத்தே இங்கே கர்ப்பவாசம் செய்திருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இங்கே கன்னியர் நல்ல வரன் வேண்டியும், ஊனமுற்ற குழந்தைகள் தங்கள் எதிர் காலம் சிறக்கவும் பூஜை செய்து வரலாம். பலன் கைமேல் கிடைக்கும் என்று உறுதியான நம்பிக்கை.